*****(பகுதி 7) சரயு நதி வழிபாடும், பாலகர் ஸ்ரீராமர் தரிசனமும்****
முதல் நாள் இரவு நான் மாத்திரை எடுத்துக் கொண்டதால், மறுநாள் காலையில் காய்ச்சல் எதுவும் இல்லை. காலை ஏழு மணிக்கு பிறகு அயோத்தி புறப்பட்டால் சாலையில் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும் என்பதால், விடியற்காலமே கிளம்பினோம்.
மோடி அவர்களின் வருகை காரணமாக இருபத்தி ஆறாம் தேதி நாங்கள் அயோத்தி செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் 26ஆம் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்ததால் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், அயோத்தியில் ஒரு நாள் தங்க வேண்டும் என்ற திட்டம் மாற்றப்பட்டு, காசியிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அலகாபாத்தில் இருந்து எங்களை அழைத்து வந்த அதே பேருந்து ஓட்டுநர் தான் இங்கும் வந்திருந்தார். காசியிலிருந்து அயோத்திக்கு செல்ல சுமார் 190 கிலோமீட்டர் என்று கூகுளில் அறிந்தேன்.
சாலைகளில் காய்கறிகள் குவிக்கப்பட்டு, பச்சைப் பசேலென கீரைகள் வரிசையில் நிறைந்து இருந்தன. நம்மூரில் பார்க்காத வயலெட் நிறக் காய்கள் வித்தியசமாக இருந்தன.மக்கள் விலை பேசிக் கொண்டிருந்தனர். இவ்வாறாக மக்கள் காலையில் தங்களின் தினசரி பணிகளில் இயல்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ரேபரேலி ஜங்ஷனில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நாங்கள் வந்த பேருந்து, உணவு விடுதி ஒன்றில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வாடகை டாக்ஸியில் பயணம் செய்தோம். சுமார் 20–25 கிலோமீட்டர் சென்ற பிறகு அயோத்தியில் இறக்கிவிட்டனர்.
அயோத்தி ராமரை தரிசனம் செய்யும் முன்பு சரயு நதிக்குச்
செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் அரசு நிர்ணயித்த பேட்டரி வாகனங்களில் ஏறினோம். இருபது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். கோவில்
பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு வராமல் தடுக்க இந்த பேட்டரி வாகனங்கள்தான் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் இவ்வாறான பேட்டரி வாகனங்களைப் பயன்படுத்தலாம்.
பழனிமலை அடிவாரங்களில் பக்தர்கள் வசதிக்காக இப்போது பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மதுரை மீனாட்சி, திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் மற்றும் மாமல்லபுரக்
கடற்கரை பகுதிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு மட்டும்
பேட்டரி வாகனங்கள் இயங்குவதாக தகவல் தெரிவிக்கின்றன.
சீதை, ஸ்ரீ ராமர், இலக்குவன் ஆகியோர் விளையாடி மகிழ்ந்த இடம் சரயு நதி என்று கூறினர். ராமர் தன்னுடைய அவதார வாழ்க்கையை முடித்து சரயு நதியில் ஜலசமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. மோட்சம் தரும் நதி என்று இலக்கியங்கள் பகிர்கின்றன.
பேட்டரி வாகனத்திலிருந்து இறங்கி சரயு நதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அங்குள்ள மக்கள் சாலைகளில் எச்சில் துப்புவதைப் பார்த்து மனம் வருத்தத்துக்குள்ளாகியது. பாசிமணிகள் விற்கும் வியாபாரிகள், கொய்யாப்பழம் விற்பவர்கள், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ராமர் படங்களை விற்கும் வியாபாரிகள் என சுற்றுலாவை சார்ந்த வாழ்க்கைச் சுழற்சி அங்கு முழுமையாக இயங்கிக் கொண்டிருந்தது.
வியாபாரிகளைக் கடந்து, மண் தரையைத் தாண்டி கல் பதிக்கப்பட்ட பாதையில் நடந்து, படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி சரயு நதியில் பாதங்களை நனைத்து நின்றோம். அகக்கண்ணில் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்து, நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு நதியை வணங்கிவிட்டு திரும்பி வந்தோம். வரும் வழியில் நீச்சல் பயிற்சிக்கான குளங்களும் அங்கே அமைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. இதற்கு முன்பு சுற்றுலா வந்தவர்கள், “முன்பு இந்த நதிக்கு வரும் வழித்தடங்கள் இவ்வளவு சுத்தமாக இல்லை” என்றனர்.
மோடி அவர்களின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும், படகு சவாரிக்கான வழித்தடங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. கங்கா ஆரத்தி போலவே சரயு ஆரத்தியும் நடைபெறுகிறது என்ற தகவலும் தெரிவித்தனர். சரயு நதி தரிசனம் முடிந்த பிறகு அயோத்தி ராமரை தரிசிக்கப் புறப்பட்டோம். அதே பேட்டரி வாகனத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து இறங்கினோம்.
கோவிலின் நடைபாதையில் நகர்ந்து கொண்டே வரிசையில் செல்ல ஆரம்பித்தோம். கோபுரங்களின் அழகு பிரமிக்கச் செய்தது. மிக உயர்ந்த தரமுடைய பிங்க் சண்ட்ஸ்டோன் கற்களால் கோயில் முழுவதும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மக்ரானா மார்பிள் எனப்படும் ராஜஸ்தான் வெள்ளை நிற பளிங்குக் கல் கருவறையில் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நீடிக்கக்கூடியவை. கோவிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. பழமையான கல் இணைப்பு முறையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அயோத்தி ராமர் கோயில் வடஇந்திய கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவிலின் கருவறையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமரின் சிலை 300 ஆண்டுகள் பழமையான பாறைக் கல்லிலிருந்து செதுக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. கோவிலுக்குள் செல்ல மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களின் வசதிக்காக சாய்வு தளம் மற்றும் லிப்ட் வசதிகள் உள்ளன. நாங்கள் கோவிலின் கிழக்கு திசையில் இருந்து 32 படிகள் ஏறி கோவிலுக்குள் சென்றோம். அங்கே இருந்த ஒவ்வொரு தூணிலும் ராமாயணக் காட்சிகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருந்தன. தசாவதாரக் காட்சிகளும், சிவன், பார்வதி, விநாயகர் போன்ற தெய்வங்களின் சிற்பங்களும் இடம்பெற்றிருந்தன.
அழகான சிற்பங்களை வடிவமைத்திருக்கும் சிற்பிகளின் திறமையை மனம் நிறைந்து பாராட்டாமல் நகர இயலாது. தூண்களில் செதுக்கப்பட்ட சிவன், விநாயகர் சிற்பங்களைப் பார்க்கும் போது, மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோயிலில் எனக்கு நேர்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அந்தக் கோவில் அர்ச்சகரிடம் தூணில் செதுக்கப்பட்ட சிற்பத்தைக் காட்டி, “முருகன் மயில் மேல் அமர்ந்து இருக்கும் சிற்பமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “பெருமாள் அன்ன வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்; பெருமாள் கோயிலில் முருகன் சிற்பம் எப்படி இருக்கும்?” என்று கடுமையாகப் பேசியது நினைவுக்கு வந்தது.
இங்குள்ள ராமர் கோயிலின் தூண்களில் சைவம், வைணவம் என்ற
வேறுபாடின்றி அனைத்து தெய்வங்களும் ஒன்றே என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஏழு–எட்டு வரிசைகள் நகர்ந்த பிறகு, சுமார் 500 மீட்டர் தூரத்திலிருந்து பார்க்கும்
போதே ஸ்ரீ பாலராமர் தங்க கவச அலங்காரத்தில், கருமை நிறக் கண்ணனாக, புன்னகை தவழும் குழந்தை
முகத்துடன், கண்களில் குறுஞ்சிரிப்போடு, தோளில் வில்லோடு காணும் காட்சியில் மெய்யுருகிப்
போனோம். “ஜெய் ஸ்ரீராம்” என்று மக்கள் குரல் எழுப்பினர். பாலகன் ராமரின் கருணை பொங்கும்
பார்வையில் நாமும் பட்டுவிட வேண்டும் என்று அருகே சென்று மக்கள் ஆர்வத்துடன் நின்றுவிட, “சலோ, சலோ” என்று வேகப்படுத்தும் சீருடையாளர்களின்
குரல் கேட்டு ஆனந்தக் கண்ணீருடன் கோயில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தோம்.
ராமர் கோயிலில் நடன மண்டபம், வண்ண மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம், கீர்த்தனை மண்டபம் என ஐந்து மண்டபங்களும் சூரிய கடவுள், சிவன், தாயார் பார்வதி, விநாயகர் கோயில்களும் உள்ளன. வடக்கில் அன்னபூரணி ஆலயம், தெற்கில் ஹனுமன் ஆலயம், தென்மேற்கு குபேர மூலையில் ஜடாயு சிலை மற்றும் மகரிஷிகள் வால்மீகி, வசிஷ்டர், விசுவாமித்திரர், அகஸ்தியர் மற்றும் நிஷாத அரசன், மாதா சபரி ஆகியோருக்கும் சிறப்பு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘சீதா கோப்’ எனும் கோவில் கிணறும் வளாகத்தில் அமைந்துள்ளது.
ராமர் பிறந்த நாளான ராம நவமி அன்று சூரிய ஒளி நேரடியாக ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறிந்தோம். நடைபாதை சுவற்றில் வண்ண ஓவியங்களாக ராமாயணக் கதைகள் வரையப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் இந்தியில் மட்டுமே இருந்தன. ஆங்கிலத்திலும் இருந்திருந்தால் சுற்றுலா பயணிகள் படித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று தோன்றியது. ராமர் கோயிலுக்கு வெளியே பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் வாங்கிச் சென்றனர்.
ராம் கோட் என்று நம்பப்படும் பழமையான கட்டிடம் பார்க்க வேண்டிய ஒன்று. இது ராமர் ஆண்ட அரண்மனை என்கிறார்கள். சரியான வரலாறு இல்லை. பைஸபாத் நகரத்தில் மொந்தி மஹால் போன்ற நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள் சில உள்ளன.
கனகபவன் கோவிலில் பட்டாபிஷேகக் கோலத்தில் சீதா, ராமர்–இலட்சுமர் காட்சி தருவதைக் காணலாம். ராமர்-சீதை திருமணம் முடிந்தவுடன் கைகேயி பரிசளித்த இடம் என்பதாலும், தங்கநிறத்தில் ஜொலிப்பதாலும் ‘கனகபவன்’ என்று அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
அனுமன் கார்கி கோயில் தொன்மையான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இங்கு பால அனுமன் அருள்பாளிக்கிறார். அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் பெற்றபின் அயோத்தி நகரத்தைப் பாதுகாக்க அனுமனுக்கு பொறுப்பு கொடுத்ததாகவும் அதன்படி அனுமன் இத்தலத்திலிருந்து அயோத்தியை காக்கிறார் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோயில் பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டதாகவும், 18 ஆம் நூற்றாண்டில் மறுபடியும் கட்டப்பட்டதாக தகவல்கள் சொல்லப்படுகின்றன.
நாகேஷ்வர்நாத் கோவில் சரயு நதிக்கரைக்கு அருகில் உள்ள பழமையான சிவன் கோவில். இராமரின் மகன் குஷன் சரயு நதியில் குளிக்கச் சென்ற போது சிவலிங்கம் பொறித்த அவரது கை வளையல் நீரில் விழுந்து விடுகிறது. அதை ஒரு நாகக்கன்னி எடுத்து திருப்பிக் கொடுக்கிறாள். அவள் சிவ பக்தை என்பதால் அவரது பக்தியை மதித்து குஷன் அங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார். என்று வாய்வழிக் கதையாகவும், புராணக் கதையாகவும் சொல்லப்படுகிறது.
அயோத்தியில் பல காலகட்டங்களில் ஆட்சியாளர்கள் மாறினாலும், நாகேஷ்வர்நாத் கோவில் மட்டும் எந்த வித இடர்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து வழிபாடு நடைபெற்று வந்ததாகவும், அயோத்தி நகரின் பழமையான அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டில் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நாகபஞ்சமி, சிவராத்திரி சிறப்பான வழிபாடாக செய்யப்படுகின்றது. நாக தோஷம், விஷ நோய்களுக்கு பரிகாரத் தலமாக மக்களால் வழிபடப்படுகின்றது.
இரவு உணவு தயாராகும் வரை ஹோட்டலின் காத்திருப்பு பகுதியில் அமர்ந்து உரையாடினோம். மாலை ஐந்தரை மணியளவில் ராமரின் தரிசனம் மனதை நிறைத்த நிறைவோடு மீண்டும் காசியை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.
காசி சென்றால் அவசியம் தரிசனம் செய்து வர வேண்டிய கோயில்கள் என்ன?..
(தொடரும்)












