முகமூடி - மகேஸ்வரி மதன், சரஸ்வதி, சண்முகவடிவு, லோகேஸ்வரி


இந்திரா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீடு, வாசல் என எல்லா இடங்களிலும் யார் யாரோ நிற்கிறார்கள். பேச்சும் செயலும் நீண்டுகொண்டே இருந்த வீட்டில், இவளுக்கு மட்டும் எதுவுமே கேட்கவில்லை. அவளோடு வீட்டில் இருந்த ஒரே உயிரும் அமைதியாய்க் கிடக்கிறது. எல்லோரும் அவருக்கு சவம் என பெயர் சூட்டிக்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை பார்த்துக்கொண்டிருக்க, இவள் மட்டும் எங்கோ பயணித்துக் கொண்டிருந்தாள். நன்றாக வாழ்ந்த காலத்திலும், சரிந்த காலத்திலும் வந்து பார்க்காத எல்லோரும் துக்கம் விசாரிக்க வந்திருக்கின்றனர். எப்படி நடந்ததென விவரிக்க முடியாமல், பித்துப் பிடித்தாற்போல் இருந்தாள். கழுத்துப் பகுதியில் நெறிக் கட்டினாற்போன்ற வலி. யாருக்கும் சொன்னாலும் புரியாது; புரியவைக்கவும் விரும்பவில்லை.

அருகாமையில் இருக்கும் தோழியை சந்தித்துவிட்டு திரும்புகையில், இவர்களின் இருசக்கர வாகனத்தை மறித்து நின்றது ஒரு சிவப்பு கார். காரிலிருந்து இறங்கிய மூவர், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் கார்த்தியை இவள் கண் முன்னே கொடூரமாகக் தாக்கினர். கார்த்தி ஒரு நேர்மையான அதிகாரி — வருவாய் ஆய்வாளர். பல முறைகேடுகள் சீராக நடக்கும் இடத்தில், நீதி, நேர்மை, நியாயம், கடமை என்று வாழ்ந்த அதிகாரி. நேரிலும், அலைபேசியில் பல மிரட்டல்கள் வந்த போதும் தன் கொள்கையில் உறுதியாக நின்றவர். சாதாரண மக்களுக்கு நன்மை நடக்கிறது என்பதால், இந்திராவும் இதற்கு முழு ஆதரவு. எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் உடன் நின்றவள்.

சொந்தப் பந்தங்கள் அலுவலக ரீதியான உதவிக்கு வந்த போதும் கூட, இவரின் நேர்மையை அசைக்க முடியாமல் நகர்ந்தனர். சாமானிய மக்கள் இவரை மிக இயல்பாக அணுகினர். எந்தக் கோப்புகளும் தேங்காது, தாமதமாகாது. பிறர் கொடுக்கும் பிரச்சனைகளை விட, தன்னோடு வேலை செய்யும் சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் கொடுக்கும் சுமை அதிகம். ஆயினும் எல்லோரையும் மரியாதையாக, நிதானமாகவே அணுகுவார்.

வீட்டில் பார்த்து வைத்த திருமணம்தான். ஆயினும் காதலித்து திருமணம் செய்தது போன்ற புரிதல் இருவருக்கும். வீடு, வீடு சார்ந்த பணிகளில் இந்திரா முழு ஈடுபாட்டோடு செய்வாள். நல்ல வாசகி, கவிதையினி. இவளுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் தான். ஆனால் நடந்துவிட்டதே!

“ஏன் இப்படி நடந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? நன்மைகளைத்தானே அவர் செய்தார்? யாரையும் ஏமாற்றவில்லை, யாரிடமும் கையூட்டு வாங்கவில்லை, யாரையும் அவமானப்படுத்தவில்லை, யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. நேர்மைக்கும் நியாயத்திற்கும் இதுதான் பரிசா?” — இது போன்ற பல கேள்விகளும், இவர்களுக்கிடையே நடந்த நிகழ்வுகளும், உரையாடல்களும் அவளை எங்கோ வெறித்துப் பார்க்க வைத்துக்கொண்டிருந்தது.

எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த இந்திராவின் என்ன அலைகள் பள்ளிப் பருவம்,கல்லூரி, கார்த்தியுடன் திருமணம் என எல்லா பாதையிலும் பயணித்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும் அப்பாவிடம் ஜர்னலிசம் படிக்க அனுமதி கேட்டதும் அப்பா பயந்ததும் அவரை சமாதானம் செய்து அவள் படித்து முடித்ததும் அதே சமயம் தூரத்து சொந்தமான கார்த்தியின் பெற்றோர் அவளை பெண் கேட்டு வந்ததும் வருவாய் ஆய்வாளரான கார்த்தியை மணம் முடித்ததும் திரைக்காட்சிகளாக இந்திரா மனதிற்குள் ஓடியது. 

திருமணம் முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஒரு அழகிய மாலை பொழுதில் தேநீர் அருந்தியவாறு இருவரும் பேசிக் கொண்டிருந்தசமயம், "ஏன் இந்திரா, உனக்குள் கதை கவிதை என எவ்வளவோ திறமைகள் மக்களுக்கான உன்னுடைய சிந்தனைகள் இவையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக உள்ளது.உன் திறமைகளை நான் முடக்கி விட்டேனோ என்று சில சமயம் எனக்கே தோன்றுகிறது" என்று சொன்ன கார்த்தியைப் பார்த்து, "ஏங்க, நான் வெளியில் போய் வேலை செய்தால் தானா?ஏன் உங்கள் பணியில் என்னால் உதவ முடிந்த அளவு உங்களுக்காக நான் உதவுகிறேன்" என்று சொன்ன இந்திராவை நினைத்து கார்த்தி பெருமிதம் கொண்டான். 

"இந்தக் காலத்தில் உங்களைப் போல் ஒரு அதிகாரியை பார்ப்பதே அரிதாக உள்ளது அதிலும் என் எண்ணம் போல் நீங்கள் அமைந்தது கடவுள் எனக்கு கொடுத்த வரமாகவே எண்ணுகிறேன். யாருக்கும் பயப்படாமல் எதற்காகவும் விலை போகாமல் ஏழை எளிய மக்களின் தோழனாக நேர்மையுடன் கடமையாற்றும் உங்களுக்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன் " என்றாள் இந்திரா. இதனிடையே சராசரியான வாழ்க்கை போராட்டம்,பெரிய இடத்து மோதல்கள், மிரட்டல்கள், எல்லாம் இருப்பினும் இருவரும் தங்கள் இல்வாழ்வில் சிகரம் தொட்ட போது தான் இப்படி ஒரு பேரிடி விழுந்தது.

திடீரென கேட்ட சத்தத்தால் தன் சுய நிலைமைக்கு திரும்பிய இந்திரா "உங்களுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் நடத்தியது விதி என்றால் சரி தான், ஆனால் சதியல்லவா நடந்து இருக்கிறது. அதனால் தானே நீங்கள் என்னை விட்டு சென்று விட்டீர்கள். இல்லைங்க இத நான் விடப்போறதில்ல உங்களோட இந்த நிலைமைக்கு காரணமானவங்க யாரா இருந்தாலும் சரி அவங்கள சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துவேன். உங்களுக்காக நான் போராடுவது என்று முடிவு பண்ணிட்டேன் உங்களுடைய ஆசி மட்டுமே எனக்கு இருந்தா போதுங்க. உங்கள மாதிரி வாழ்க்கையில உண்மையா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு உங்களோட சாவு ஒரு தப்பான உதாரணமா இருந்திடக்கூடாது.நான் போராடுவது என்று முடிவு பண்ணிட்டேன். கண்டிப்பா உங்க மேல மரியாதை இருக்கிறவங்க நாலு பேராவது என் கூட துணைக்கு வருவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று ஒரு முடிவுடன் எழுந்தாள் இந்திரா. கார்த்தியும் தன் இறுதிப் பயணத்திற்கு தயாரானான்.

கார்த்தியைக் கொலை செய்தவர்களையும் அதற்குக் காரணமானவர்களையும் இந்திரா ஒரு புறம் தீவிரமாய்த் தேடிக் கொண்டிருக்க, போலீஸ் தரப்பிலிருந்து ஒரு தனிக்குழு அமைக்கப் பட்டு, அவர்களும் விசாரித்துக் கொண்டிருந்தனர். 

என்னென்னவோ யோசனை செய்தவளாய் கையில் ஒரு கோப்பைத் தேநீருடன் வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் இந்திரா. லேசாக மழை தூறிக் கொண்டிருக்க, செடி கொள்ளாமல் பூத்திருந்த ஜாதி மல்லிகையின் மணம் நாசியைத் துளைத்தது. கண்கள் மூடி ஆழ்ந்து சுவாசிக்க, வழிந்த கண்ணீரில், தேநீரில் உப்புச் சுவையும் கலந்தது. 

'அம்மா...!' என்ற அழைப்பில் கண் திறந்து பார்க்க, கலக்கமான வெளிறிய முகத்தோடும், பயத்தோடும் நின்றிருந்தாள் அவர்கள் வீட்டுப் பணிப் பெண். "என்னாச்சு சிவகாமி.. ஏன் ரெண்டு நாள் வரலே? உடம்புக்கு எதுவும் சரியில்லையா?" எனப் பரிவான குரலில் கேட்க, 

உடைந்து அழத் தொடங்கினாள் சிவகாமி. 

"என்னன்னு சொல்றதும்மா? உங்க கிட்டே பத்து வருஷமா வேலை பாக்கறேன். பெத்த புள்ளையாட்டம் என் மகனைப் பார்த்துக்கிட்டீங்க. படிப்புச் செலவெல்லாம் ஏத்துக்கிட்டீங்க. நானும் இவன் நல்லாப் படிச்சு, ஒரு பெரிய உத்தியோகத்துக்குப் போவான்னு தான் நெனச்சேன். ஆனா, போன அஞ்சாறு மாசமா அவனோட நடவடிக்கையே சரியில்லம்மா. சேர்க்கையும் சுத்தமா சரியில்லை. அய்யா கிட்டயும் உங்க கிட்டயும் சொல்லுவேன்னு சொன்னா வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்னு மிரட்டுவான். சரி.. வயசுக் கோளாறு, சரியாயிடுவான்னு நெனச்சேன் மா. தப்புப் பண்ணிட்டேன்மா தப்புப் பண்ணிட்டேன். "

மண்டையில் அடித்துக் கொண்டு அழத் துவங்கியவளை என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவது என்றும் தெரியவில்லை. அதே சமயம் 'இவள் மகன் தான் ஏதாவது..?' என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

"என் மகன் இப்ப ஆஸ்பத்திரியிலே இருக்கறான் மா. தலையிலே அடிபட்டதாலே சுய நினைவு திரும்பவோ உயிர் பொழைக்கவோ வாய்ப்பு ரொம்பக் கம்மின்னு சொல்றாங்கம்மா"

ஒன்றுமே புரியவில்லை இந்திராவுக்கு.

" சரி ரெண்டு நாள் நீ எங்கே போனே? எனக்கு ஏன் போன் கூடப் பண்ணலே?" எனக் கேட்க, 

"அம்மா, அவங்க அடிச்சதிலே வலியிலே என்னால எந்திரிக்கக் கூட முடியலே. என் போனை அடிச்சுப் புடுங்கிக்கிட்டாங்க. கையைப் பாருங்க.." என முந்தானையால் மூடியிருந்த தன் இடது கையைக் காட்ட, கையில் பெரிய கட்டுப் போடப் பட்டிருந்ததைப் பார்த்தாள் இந்திரா. 

"இங்க பாரு சிவகாமி.. எனக்குத் தலையும் புரியலே காலும் புரியலே... நிதானமா வெவராமா சொல்லு... " எனவும், அருகிலிருந்த தூணில் சரிந்து அமர்ந்தவளாய், சொல்லத் தொடங்கினாள் சிவகாமி.

“எங்க ஏரியா பக்கம் எங்க சாதிக்காரங்க வந்து கூட்டம் போடறது வழக்கம். அவனுக்கு அங்க என்ன புடிச்சதோ தெரியல, அவங்க எதுக்கு கூப்பிட்டாலும், எங்க கூப்பிட்டாலும் போய்டுறான். எனக்கு அதுல சுத்தமா விருப்பமில்லை. இத்தனை வருஷம் நான் என் புருஷன் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கேன். ஒரு நாதியும் வந்து நிக்கல, ஆனா இவங்க கூட்ற சாதி கூட்டத்துக்கு என் பையன் எதுக்கு அப்படி என்கிற கேள்விதான் எனக்குள்ள இருந்தது. நானும் என்னென்னவோ சொல்லி பார்த்தேன், ஆனா என் பையனுக்கு அங்க போறதுல ஒரு போதை. அந்த கூட்டம், அவங்க பேச்சு எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சுட்டான். அவன் மனசுல இவங்க என்னத்தை விதைச்சாங்களோ தெரியலம்மா, கூட படிக்கிற பையன் கிட்ட சாதி சாதினு தான் இவன் பேசிகிட்டு இருப்பான் போல. ஏன்னா இவன மாதிரியே இன்னொரு கூட்டமும் அவன் பள்ளிக்கூடத்துல, அவன் வகுப்பிலேயே இருக்கு. என்ன ஆகப்போகுதோங்குற பயம் எனக்கு அன்னைக்கே இருந்துச்சு மா. நான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இவன வேற எங்கேயாவது கூட்டிட்டு போய் இருக்கணும், அப்படியே விட்டது தான் தப்பா போச்சு. நட்பா பழகிட்டு இருந்த பசங்க இன்னைக்கு என் ஜாதி தான் பெருசுன்னு அடிச்சுகிட்டு சாவுறானுங்க. இன்னொரு கொடுமை என்னன்னா வாத்தியார் கூட சில பேர் இப்படித்தாமா இருக்கிறாங்க. பசங்கள மட்டும் சொல்லி என்னத்த பண்றது. இவங்க வாத்தியாரு இவன கூட்டு சேர்த்துக்கிட்டு நீ நம்மாளுன்னு உசுப்பேத்தி இருக்காரு. அந்த தைரியத்துல கூடப்படிக்கிற பையனப்  போட்டு அந்த அடி அடிச்சிருக்கான். அவங்க சும்மா விடுவாங்களா? பெரிய கூட்டத்தையே கூட்டிட்டு வந்து பெரிய பிரச்சனை ஆயிடுச்சு மா. அதுல அடிப்பட்டு தான் இப்ப இப்படி கெடக்கிறான். நான் ஒரு வாரம் வேலைக்கு வர முடியாதுமா. அவன் எழுந்து நடந்தா தான் எனக்கு நிம்மதி. அதான் ஒரு வார்த்தை உங்க கிட்ட சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன். உடனே இந்திரா சிவகாமியிடம் “நீ மொதல்ல உன் பையன பாரு, அவன் சரியான அப்புறம் வா, பணம் ஏதாவது உதவி தேவை இருந்தா சொல்லு, நானும் அவன் கிட்ட வந்து பேசுறேன்” என ஆறுதலான வார்த்தைகளை சொல்லி சிறிதளவு பணமும் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாள். நம்ம இந்த பையன பத்தி நினைச்சது தப்பா போச்சு என மனதுக்குள் பேசிக்கொண்டாள் . மனரீதியான  பாதிப்பு  எல்லாரையும் சந்தேகப்படும் போல என இப்படி தனக்கு தானே பேசிக்கொண்டாள். பிறகு நாட்கள் நகர்ந்தது கார்த்திக் கொலை வழக்குல இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லைங்கிறத புரிஞ்சுகிட்ட இந்திரா, எஸ்பி ஆபிஸ்க்கு போனாள். 

“என் புருஷன் கொலை வழக்குல ஏன் எந்த அக்கறையும் காட்டறது இல்ல? எதனால இந்த மெத்தனம்?” என கேள்விகளை அடுக்கத் தொடங்கினாள். அங்கிருந்த உயர் அதிகாரியான ராஜசேகரன், “இந்திரா அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீங்க. இந்த கேஸ் அப்படியே விட்டுடறது தான் உங்களுக்கும் நல்லது, எல்லாருக்குமே நல்லது” அப்படின்னு கொஞ்சம் அழுத்தமா இந்திரா கிட்ட சொன்னாரு. அங்கிருந்த இன்ஸ்பெக்டர் குமரனைப் பார்த்து, இந்திராவுக்கு புரியவை என்பதை ஒற்றைப்பார்வையில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

 “என்ன சொல்றீங்க? ஒரு நல்ல அதிகாரியை நம்ம இழந்துட்டு நிக்கிறோம் இதுல என்ன சார் உங்களுக்கு நல்லது இருக்கு?”.

 “இருக்கு மேடம். நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் இங்க நீங்க சத்தம் போட்டதுனால எதுவும் நடக்க போறது இல்ல” அப்படின்னு சொல்லி வெளியில் இருந்த கேன்டீனுக்கு இந்திராவை அழைச்சிட்டு போனார் குமரன்.

 “நான் சொல்றத நீங்க சரியா உள்வாங்கிக்க முயற்சி பண்ணுங்க. ஒரு பக்கத்துல இருந்து மட்டும் யோசிச்சு எந்த முடிவுக்கு வராதீங்க. நீங்க நினைக்கிற மாதிரி உங்க புருஷன் கார்த்திக் அவ்வளவு நல்லவர் இல்லை”.

 “போதும் நிறுத்துங்க குமரன். இதுக்கு மேல நீங்க எதுவும் பேச வேண்டாம். உங்க கையாலாக தனத்துக்கு என் புருஷன் பெயரை கெடுக்கிறீங்களா?”.

 “அதுக்கு என்ன மேடம் அவசியம் இருக்கு? நீங்க ஒரு ஜோர்னலிஸ்ட். நீங்களே ஒரு தலைப்பட்சமா ஒரு கேஸ் அணுகுவது சரின்னு நினைக்கிறீங்களா? உண்மையில கார்த்திக்கு இரண்டு முகம் இருக்கு. உங்ககிட்டயும் சொசைட்டிகிட்டையும் ஒரு முகம். ஆனா பெண்கள் விஷயத்துல அவர் அப்படி இல்ல. சொல்லப்போனால் உங்க புருஷன் கிட்டத்தட்ட ஒரு மன்மதன்னு சொல்லலாம்”.

 “வார்த்தைகள்ல கவனம் இருக்கட்டும் குமரன்”

 “மேடம் நான் இப்ப எது சொன்னாலும் உங்களுக்கு அவரை நான் தப்பு சொல்றதா தான் தோணும். ஏன்னா நீங்க அவர் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சுருக்கீங்க, ஆனா உண்மையில அவர் அப்படியான ஆள் கிடையாது. உங்க புருஷனை கொன்னவனும் இப்போ உயிரோட இல்ல காரணம் அவங்க குடும்பத்தோட சூசைட் பண்ணிட்டாங்க. உங்களுக்கு புரியிற மாதிரி சொல்றேன். கார்த்திக்கு பல பெண்களோடு தொடர்பு இருக்கு அதற்கு நிறைய எவிடன்ஸ் எங்ககிட்ட இருக்கு, ஆனா மக்கள் மத்தியிலயும் உங்ககிட்டையும் அவர் எடுத்திருக்கிற பெயரும் புகழும் நாங்க எவ்வளவு ப்ரூப் கொண்டு வந்து கொடுத்தாலும் யாரு நம்பாத அளவுக்கு அவரு ரொம்பவே அழகா எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணி இருக்காரு. நீங்க சொல்றதுல ஒரு பெரிய உண்மை இருக்கு. உங்க ஹஸ்பண்ட் லஞ்சம் வாங்காதவர் நேர்மையான அதிகாரி. அதுல எந்த குழப்பமும் இல்லை, ஆனால் அவர் கண்டிப்பா ஒழுக்கமே இல்லாத மனுஷன், அதை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட பேமிலி சூசைட் பண்ணி இருக்காங்க. இது எல்லாமே உங்க புருஷனோட மொபைல்ல அவர் வச்சிருந்த இன்னொரு நம்பர்ல இருந்து எங்களுக்கு கிடைச்ச இன்ஃபர்மேஷன். டேட்டாசும் இதோ இந்த ப்ரூப் எல்லாமே நான் உங்ககிட்ட கொடுக்கிறேன். நீங்க ஒரு ஜர்னலிஸ்ட் உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்ல. உண்மைய சொல்லப்போனால் நாங்க உங்களுக்கு ஃபேவர்தான் பண்ணி இருக்கோம் மேம். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்” 

சில பேப்பர்களையும் எவிடன்சையும் இந்திரா கிட்ட கொடுத்துட்டு குமரன் கிளம்பினார். கார்த்திக் இறந்தப்ப உடைந்ததை விட, உண்மையிலே இப்பதான் மிகவும் உடைந்து காணப்பட்டாள். 

அதுக்கப்புறம் அந்த பட்டியலில் இருந்த பெண்களையெல்லாம் தேடி போனாள். அவங்களுக்கு தன்னை யாரு என அறிமுகப்படுத்தாமல், அவர்கள் வாழ்க்கையில தற்போது என்ன நிலைமையில் இருக்காங்க, அவங்க அடுத்த கட்டத்துக்கு மேம்பட என்ன செய்ய வேண்டுமென யோசித்து, செயல்படத் துவங்கினாள்.

(ஈரோடு வாசல்- படைப்புக் குழுமத்தின் பயிற்சியான தொடர்கதைச் சங்கிலியில் மகேஸ்வரி மதன், சரஸ்வதி,  சண்முகவடிவு, லோகேஸ்வரி ஆகியோர் இணைந்து எழுதிய சிறுகதை)

அன்னமிட்ட கரம் - கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன், உமா மகேஸ்வரி

சூரியன் தன் வெப்பப் பார்வையை உக்கிரமாக்கிக் கொண்டிருந்த அந்த உச்சி நேரம். “அம்மா…” — அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல் ஒன்று வாசலில் இருந்து கேட்டது.பசி மயக்கத்தில் காப்பி ஊற்றி, அதற்கு மில்க் பிஸ்கட் தொட்டு சுவைக்கப் போகும் தருணத்தில் இருந்த எனக்கு, பக்! என்று உள்ளம் பதறியது.“அடடா! இன்று வியாழக்கிழமைதானே! அந்த பெரியவர் வருவார்… அவருக்கு உணவு கொடுக்க வேண்டுமே! ஆனால் நமக்கே இன்னும் சமைக்கவில்லையே… எப்படிக் கொடுப்பேன்?” என்ற கவலையோடு வாசலுக்கு ஓடினேன்.

வழக்கம்போல் சிரித்த முகத்துடன் அந்தப் பெரியவர் நின்றிருந்தார். ஆனால் என் மனம் படபடத்தது. “எப்போதும் சுடச்சுட சமைத்து அவருக்குக் கொடுப்பேனே… இன்று என்ன செய்வது?” என்று நினைத்துக் கொண்டே, “ஐயா… இன்று சமைக்க முடியவில்லை. உறவுக்காரர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததார்.அவர்களைப் பார்க்கச் சென்று வந்தேன். அதனால் தாமதமாகிவிட்டது. கணவரும் குழந்தைகளும் வெளியில் சென்றிருக்க வியாழக்கிழமை என்பதை மறந்துபோய்விட்டேன். எனக்கும் பசி அதிகம், காபியாவது குடிக்கலாம் என்று தான்…” என்று மனம் நொந்தபடி சொன்னேன்.

எப்போதுமே நான் சமைத்த உணவுதான் அவரது பசியை ஆற்றும். வீதியில் அவருக்கு சுடச்சுட சாப்பாடு போடுவது நான்தான் என்ற சிறிய பெருமை என் உள்ளத்தில் எப்போதும் இருக்கும்.ஆனால் இன்று என் நிலையைச் சொன்னவுடன் அவர் சிரித்தபடி, “பரவாயில்லைம்மா… அதனால் என்ன? அடுத்த வீதியில் உங்களைப் போலவே நிறைந்த மனம் கொண்ட ஒரு அம்மா இருக்காங்க. அவங்க அன்போடு சமைத்து கொடுத்திருக்காங்க!”என்று தனது டிபன் பாக்ஸ்களைத் திறந்து காட்டினார்.

சூட்டின் ஆவி பறந்தது. வாசனை நெஞ்சை வருடியது. பலவித உணவுகள் அடுக்கடுக்காய் குவிந்திருந்தன.அந்தக் காட்சியைப் பார்த்தவுடனே, யாரோ என் கன்னத்தில் அறைந்தது போல உணர்ந்தேன். இவருக்குச் சாப்பாடு போடுவது நான்தான், வேற யாராலும் முடியாது என்ற எனது அகங்காரம் சிதறி நொறுங்கியது.

நம்மால் செய்யப்படும் ஒவ்வொரு உதவியும் இறைவன் நமக்கு கொடுத்த பணியே; நாம் கருவி மட்டுமே என்ற எண்ணம் ஞானத்தில் உதித்து சிந்தனையில் மூழ்கி ஸ்தம்பித்து நின்றிருந்தபோது, பெரியவர் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

“கருணையுடன் இவ்வளவு நாட்கள் என் பசியாற்றிய அம்மையே, கவலைப்படாதே,” என்று தொடங்கினார் அவர்.

“அன்னதானம் என்பது தானங்களில் மிக உயர்ந்தது. பசி என்பது உடலை மட்டுமல்ல, மனதையும் தளரச் செய்கிறது. பசியாறியவனின் முகத்தில் மலரும் சிரிப்பு — கொடுப்பவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம்.அன்னம் தருவது வெறும் உணவல்ல; அது உயிர்க்கும், நம்பிக்கைக்கும், கருணைக்கும் உயிரோட்டம் அளிக்கிறது.ஆனால் செய்யும் உதவிக்கு பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதே உண்மையான தானம். தானம் என்பது திரும்ப வராதது அல்ல; எப்பொழுது கிடைக்க வேண்டுமோ, அந்த நேரத்திற்கு இறைவனின் அருளாக வந்து சேரும்.”என்று சொல்லி ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் ஒரு கதை சொல்ல தொடங்கினார்.

ஒரு ஊரில் தாய் தந்தையற்ற சிறுவன் ஒருவன் இருந்தான். வயிற்றுப் பசிக்காகவும், அறிவு பசிக்காகவும் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தான்.“கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற வரிகளுக்கு உயிர்ப்பாக இருந்தான். அவன் வீதியிலுள்ளவர்களுக்கு காய்கறி, மளிகை, ரேஷன் பொருட்களை வாங்கி கொடுப்பான். அதில் கிடைக்கும் சிறு தொகையில் பள்ளிப்படிப்பிற்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்வான்.ஆனால் அந்தச் சம்பளம் வயிற்றுப் பசியை போக்க போதவில்லை. ஆங்காங்கே கிடைக்கும் மிஞ்சிய உணவைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தான். ஒருநாள், மிகுந்த பசியால் வாடிய அவனுக்கு எங்கும் உணவு கிடைக்கவில்லை. அப்போது தெருக்கோடியில் இருந்த குடிசை வீட்டின் கதவைத் தட்டினான்.

மூன்று சிறு குழந்தைகள் கிழிந்த உடையுடனும் சாறு வழிந்த முகத்துடனும் இருந்தனர். அந்த வீட்டு பெண்மணி கதவைத் திறந்தாள்.அவளது குழந்தைகளும் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

“அம்மா… பசிக்கிறது… ஏதாவது சாப்பாடு கிடைக்குமா?” என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை, அங்கிருந்து சூழலைப் பார்த்து, அப்படியே அடக்கிக் கொண்டான் சிறுவன்.ஆனால் அவளும் தாய்தானே? அவனது முகச் சோர்வைக் கண்டு, அவன் பசியால் வாடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.அவளிடம் இருந்த அரிசி மிகக் குறைவு — தன் பிள்ளைகளுக்கே போதாது. ஆனால் அந்தச் சிறுவனின் பசியை அவள் புறக்கணிக்கவில்லை.

சமைத்த உணவில் இருந்து சிறு பகுதியை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள். பசியாறிய சிறுவன் நன்றியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.பிறகு, அவனை காணவில்லை. அவனைப் பற்றி கவலைப்படவும் யாரும் இல்லை. ஆனால், அவன் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பெரிய மனிதர்களின் உதவியால் மேல்படிப்புக்குச் சென்றான் என்று சிலர் கூறினர்.

சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அதிகாலை மௌனத்தையும் தாண்டி, அந்த ஊரின் அரசு மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் கூச்சல் குழப்பமாக இருந்தது.முகம் முழுவதும் ரத்தத்தில் மூழ்கிய இளைஞன் ஒருவனை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விரைந்து வந்து கொண்டிருந்த மருத்துவர், தலையில் அடித்துக்கொண்டு கதறிக் கொண்டிருந்த பெண்மணியை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். ஒரு நொடி கூட தாமதிக்காமல், அவர் விரைந்து அவசரச் சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தார்.சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்கு பின் மருத்துவர் வெளியில் வந்தார்.

அழுது அழுது துவண்டுபோய் அமர்ந்திருந்த அந்த அம்மாவின் அருகில் குனிந்து, ஆதரவாக தோள்களைத் தொட்டு,“தங்கள் மகன் காப்பாற்றப்பட்டுவிட்டார்,” என்ற செய்தியைச் சொல்ல, அந்தத் தாய் கண்ணீரோடு கைகூப்பி தன் நன்றியைத் தெரிவித்தாள். மருத்துவரோ அவரிடம் தன் கரங்களைப் காட்டி அமைதியாக புன்னகைத்து.ஒரு நாள் இந்த அன்னையிடம் அன்னம் வாங்கிய கரம், இன்று உயிரைக் காப்பாற்றும் கரமாக மாறி இருந்ததை சொல்லி அன்னமிட்ட அன்னைக்கும் ஆண்டவன் கருணைக்கும் நன்றி சொன்னார். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது,” என்ற வள்ளுவரின் வாக்கு நிஜமே என்றார்.

சிறு உதவி கூட தக்க நேரத்தில் செய்தால் உலகத்தையும் விட உயர்ந்ததாகிறது. “தர்மம் தலையை காக்கும்” என்ற வார்த்தை மெய்யானது என்று சொல்லிய பெரியவர் என்னை உற்று நோக்க, நான் மெய்சிலிர்த்துப் நின்றேன். 

அவர் சிரித்தபடி, “அந்த மருத்துவரால் காப்பாற்றப்பட்டவன் நானே,” என்றார்.

"நான் உயிருக்கு போராடியபோது, எனது தாய் ஒவ்வொரு வியாழனும்  யாசித்து உண்ண வேண்டும் என்று  என்னிடம் சொன்னதால், அதையே இன்றும் தொடர்கிறேன்,” என்றும் கூறி, புன்னகையோடு எழுந்து சென்றார்.

அவர் கைகளில் இருந்த டிபன் பாக்ஸ், இப்போது என் வீட்டுத் திண்ணையில் அமைதியாக அமர்ந்திருந்தது.என் மனமும் வயிறும்  நிரம்பி இருந்தது. 

(ஈரோடு வாசல்- படைப்புக் குழுமத்தின் பயிற்சியாக செப்டம்பர் மாதத்திற்கான தொடர்கதை சங்கிலியில் கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன், உமா மகேஸ்வரி மூவரும் இணைந்து எழுதிய சிறுகதை)

கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 6 - ஆனந்தி ஆரூரன்

பகுதி 6 : உற்பத்திக்கு உச்சவரம்பு வைக்க முடியாத உலகம் – ஜெனீவா பேச்சுவார்த்தை (INC 5.2) ஒப்பந்தம் இல்லாமல் முடிவடைந்தது 

பிளாஸ்டிக் மாசுபாடு இன்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதன் பாதிப்புகள் சூழலை மட்டும் அல்லாமல், மனிதர்களின் உடல்நலம் மற்றும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) வெளியிட்ட அறிக்கைகள், மற்றும் 'தி லான்செட்' இதழில் வெளியான ஆய்வுகள், பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு ரசாயனங்களால் உலகளவில் ஆண்டுதோறும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (அதாவது 126 டிரில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல்) உடல்நலம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்குக் காரணம் என்று தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைக் குலைக்கும் ரசாயனங்களான பிஸ்பினால் A (BPA), பித்தலேட்டுகள் (phthalates), பெர்- மற்றும் பாலி-ஃப்ளூரோஅல்கைல் பொருட்கள் (PFAS- Forever Chemicals) போன்றவை புற்றுநோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு நோய், குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகள் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுக்கு காரணமாகி அதற்கான சிகிச்சைகளில், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகின்றன. சர்வதேச மருத்துவ அமைப்பான 'தி எண்டோக்ரைன் சொசைட்டி' இதை உறுதிப்படுத்துகிறது. 

பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மகப்பேறு குறைபாடுகள், மன வளர்ச்சி சிக்கல்கள் (உதா: ஆட்டிஸம் autism) மற்றும் மரபணுவில் (DNA) ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல தலைமுறைகளை பாதிக்கும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. மேலும், மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்களான நுண்துகள்கள் (microplastics) மனித ரத்தம், நுரையீரல், மூளை, நஞ்சுக்கொடி, தாய்ப்பால் போன்ற பல உடல் பாகங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் நாளமில்லா சுரப்பிகளின் சீர்கேடு, கல்லீரல் பாதிப்பு, மற்றும் நரம்பியல் குறைபாடுகள் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. இத்தகைய கடுமையான விளைவுகள் இருந்தாலும், பிளாஸ்டிக் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 1950 ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் உற்பத்தி 200 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2060-க்குள் அது மேலும் மூன்று மடங்கு உயரும் என்றும் Global Plastics Outlook: Policy Scenarios to 2060 என்ற தனது அறிக்கையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development-OECD) எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி இதே வேகத்தில் அதிகரித்தால், அது சுகாதாரச் செலவுகளைப் பன்மடங்கு பெருக்குவதுடன், வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்ககூடுவதாக இருப்பதால், சர்வதேச அளவில் வலுவான சட்டப்பூர்வ பிணைப்பு ஒப்பந்தம் இல்லையெனில், இந்தப் பாதிப்புகள் அடுத்த தலைமுறையினரை ஆபத்தில் ஆழ்த்தும் என தெரிவிக்கிறது.

இந்த உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியைத் தீர்க்க, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கீழ், சர்வதேச பேச்சுவார்த்தை குழு (INC- Intergovernmental Negotiating Committee) சுமார் மூன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டப்பூர்வ பிணைப்பு கருவியான ஒப்பந்தத்தை உருவாக்கும் இலக்குடன், INC 1 முதல் INC 5.2 வரையிலான, ஆறு அமர்வுகள் – பூண்டா டெல் எஸ்டே, பாரிஸ், நைரோபி, ஒட்டாவா, பூசன், ஜெனீவா போன்ற நகரங்களில் தொடர்ச்சியாக சர்வதேச பேச்சுவார்த்தை குழுவின் (INC) அமர்வுகள், ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றன.


கடந்த ஆகஸ்ட் 5 முதல் 15, 2025 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் (பலாய்ஸ் டெஸ் நேஷன்ஸில்), நாடுகளை சட்டப்பூர்வமாக பிணைக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான, ஐந்தாவது அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் இரண்டாம் அமர்வின் INC-5.2 பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டபூர்வமான பிணைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இந்த அமர்வில் 184 நாடுகளைச் சேர்ந்த 1,400 பிரதிநிதிகள், 400-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 1,000 பார்வையாளர்கள், 70 அமைச்சர்கள், மற்றும் 30-க்கும் மேற்பட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகள், ஆகஸ்ட் 15, 2025 அன்று அதிகாலை 6:30 முதல் 9:00 மணி வரை நடந்த இறுதி அமர்வுடன் முடிவடைந்தன. இருப்பினும், பிளாஸ்டிக் உற்பத்திக்கு வரம்பு நிர்ணயிப்பது, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கட்டுப்படுத்துவது, மற்றும் நிதி ஆதாரங்களை திரட்டுவது போன்ற முக்கியமான அம்சங்களில், நாடுகளிடையே உடன்பாடு ஏற்படாத காரணத்தால், ஒப்பந்தத்தின் இறுதி உரை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மிகுந்த எதிர்பார்ப்புடன், உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கான இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் (INC-5.2) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆகஸ்ட் 5, 2025 அன்று தொடங்குவதற்கு முந்தைய தினம், ஆகஸ்ட் 4, 2025 அன்று, பிராந்திய ஆலோசனை கூட்டங்கள் (Regional Consultations) நடைபெற்றன. இது அரசியல் களத்தை அமைக்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த நாளில், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP – United Nations Environment Programme) தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், INC-ன் தலைவர் (Chair) மற்றும் நிறைவேற்றுச் செயலாளர் (Executive Secretary) ஆகியோர் இணைந்து, பல்வேறு பார்வையாளர் அமைப்புகளுடன் உரையாடல்களை நடத்தினர். இதில் சுற்றுச்சூழல் குழுக்கள், பழங்குடி மக்கள், இளைஞர்கள், கழிவு சேகரிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சுவிட்சர்லாந்து அரசும் ஒரு பலதரப்பட்ட பங்குதாரர் மன்றத்தை (Multi-stakeholder Forum) நடத்தியது. இந்த உரையாடல்கள், பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் ஒப்பந்தத்தின் செயல்பாடு குறித்த சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படையாகப் பதிவு செய்ய உதவின. ஆகஸ்ட் 4-இல் நடந்த ஆலோசனைகளில், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த அனைத்து அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டு, அடுத்த நாள் தொடங்கவிருந்த முறையான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தன.



அந்த நாளின் அரசியல் மேடையில், பிளாஸ்டிக் உற்பத்தியை சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி, நாடுகளை தெளிவாக இரு அணிகளாகப் பிரித்தது. ஒரு புறம், பிளாஸ்டிக் மாசுபாட்டை 2040-க்குள் முழுமையாக ஒழிக்க வேண்டுமென வலியுறுத்திய நாடுகள் இருந்தன. இந்த அணியின் முன்னணியில் நார்வே மற்றும் ருவாண்டா இருந்தன. இவர்கள் தலைமையில், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், பெரு, செனெகல், மற்றும் சில பசிபிக் தீவு நாடுகள் இணைந்து “உயர் லட்சியக் கூட்டமைப்பு” (High Ambition Coalition to End Plastic Pollution – HAC) எனப்படும் வலுவான கூட்டமைப்பை உருவாக்கின. 65-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்று, பிளாஸ்டிக் மாசுபாட்டை அதன் மூலத்தில் தடுக்க வேண்டும் என்பதையே தங்கள் அடிப்படை நோக்கமாகக் கொண்டன.


இதற்கு மாறாக, அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா, இந்தியா போன்ற பெட்ரோகெமிக்கல் உற்பத்தி நாடுகள் அடங்கிய ஒத்த மனப்பான்மை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு (Like-Minded Group - LMG) முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தது. இக்கூட்டமைப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டை “கழிவு மேலாண்மைச் சிக்கல்” எனக் கருதி, உற்பத்தி கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதையே தீர்வாக வலியுறுத்தியது.

உயர் லட்சியக் கூட்டமைப்பு நாடுகளின் (HAC) “உயர்ந்த லட்சியம்” மற்றும் ஒத்த மனப்பான்மை கொண்ட நாடுகளின் (LMG) “பொருளாதார நியாய வாதம்” எனும் இரு துருவங்களின் மோதலே ஜெனீவா அமர்வின் (INC-5.2) உண்மையான கருவாக அமைந்தது. உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் எந்தத் திசையில் செல்லும் என்பது இம்மோதலிலோ அல்லது சமரசத்திலோ தீர்மானமாகும். உயர் லட்சியக் கூட்டமைப்பு (HAC) நாடுகள், பிளாஸ்டிக் உற்பத்தியிலிருந்து அதன் முழு வாழ்க்கைச் சுழற்சி வரை கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வமான உலகளாவிய ஒப்பந்தம் உருவாக்குவதை மைய நோக்கமாக கொண்டிருந்தன. இந்த 'வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறை' அடிப்படையில், பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர, உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் (High-Ambition Coalition) ஏழு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.


முதலாவது, பிளாஸ்டிக் உற்பத்திக்கு உலகளாவிய உச்சவரம்பு (global production cap) விதிக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும். மறுசுழற்சி மூலம் மட்டும் பிளாஸ்டிக்கின் மாசுபாட்டைக் குறைக்க முடியாது என்றும், அதன் மூல வேரான உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் அக்கூட்டணி வலியுறுத்துகிறது. மேலும், பிளாஸ்டிக் தயாரிப்பு என்பது எண்ணெய், எரிவாயு, நாப்தா (Naphtha) போன்ற புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வருவதால், இது காலநிலை மாற்றத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தியைக் குறைப்பது கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் உதவும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இரண்டாவது கோரிக்கையாக, புதியதாகப் பயன்படுத்தப்படும் முதன்மை பிளாஸ்டிக்கின் (virgin plastic) பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டைக் கட்டாயமாக்குதல் (recycled content mandate) இருக்க வேண்டும் என்று உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன. இதைச் சட்டத்தால் கட்டாயமாக்குவது அவர்களது மையப்புள்ளி. இந்த நடவடிக்கை மூலம் மறுசுழற்சி மையங்கள், பிளாஸ்டிக் சேகரிக்கும் அமைப்புகள் மற்றும் இரண்டாம் சுற்று சந்தைகள் ஆகியவை பொருளாதார ரீதியாக வலுப்பெறும் என்று கருதப்படுகிறது.

மூன்றாவது, பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான இரசாயனங்களுக்கான உலகளாவிய கட்டுப்பாடு ஆகும். தற்போதைய தரவுகளின் படி, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் தயாரிப்பில் 16,000-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன; இதில் சுமார் 4,200 ரசாயனங்கள் மனித உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை என PlastChem Report (2023) குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில், உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் (High Ambition Coalition) பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் பாலிமர்கள் மீது, ஐரோப்பிய ஒன்றியத்தின் REACH (Registration, Evaluation, Authorisation and Restriction of Chemicals) விதிமுறை போன்று, ஒரு கடுமையான உலகளாவிய கட்டுப்பாட்டு முறைமை அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன.

நான்காவது கோரிக்கை, பிளாஸ்டிக்கின் முழு வாழ்க்கைச் சுழற்சிக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதாகும். எந்தெந்த நாடுகள் எவ்வளவு பிளாஸ்டிக் தயாரிக்கின்றன, அவற்றை எங்கே ஏற்றுமதி செய்கின்றன, அவற்றில் என்னென்ன ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன, சுற்றுச்சூழலுக்குள் எந்த அளவில் கசிகின்றன போன்ற தகவல்களை, உலகளாவிய அளவில் பின்தொடரக்கூடிய ஓர் ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை (integrated database) உருவாக்க வேண்டும் என்று இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

ஐந்தாவது, அனைத்து நாடுகளும் சட்டபூர்வமான தேசிய பிளாஸ்டிக் இலக்குகளை (legally binding national targets) உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் தங்களுடைய உற்பத்தி, இறக்குமதி, மறுசுழற்சி விகிதங்கள் மற்றும் கழிவு குறைப்பு இலக்குகள் போன்றவற்றைத் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். இது வெறும் "தன்னார்வ முயற்சி" அல்ல, சட்டபூர்வமான கட்டாயப் பொறுப்பு (legally binding obligation) என்று உயர்-லட்சியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

ஆறாவது கோரிக்கை, கழிவு ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகும். பெரும்பாலான உயர் வருமான நாடுகள் தங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது சுற்றுச்சூழல் நீதிக்கு எதிரானது. எனவே, உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை (plastic waste trade ban) உறுதிப்படுத்தும் ஒரு வலுவான ஒப்பந்தப் பிரிவைச் சேர்க்கக் கோருகின்றன.

ஏழாவதாக, நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அவசியம் என்பதை உயர் லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துவதும், மாற்றுப் பொருட்களை உருவாக்குவது, திறம்பட்ட மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகளை உருவாக்குவது, ஆகிய அனைத்தும் பெரிய முதலீடும் தொழில்நுட்ப திறனும் தேவைப்படும் பணிகளாகும். இத்தகைய முயற்சிகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொள்வதால், அவர்களுக்கு சர்வதேச அளவில் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் என உயர் லட்சிய கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இதற்காக “பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்கும் உலகளாவிய நிதி அமைப்பு” (Global Financial Mechanism to End Plastic Pollution) உருவாக்கப்பட வேண்டும்; அது பிளாஸ்டிக் மாசுபாடு ஒப்பந்தத்தின் கீழ் செயல்பட்டு, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் மாற்றுத் துறைகளுக்கான முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

ஆனால், ஒத்த மனப்பான்மை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு (Like-Minded Group - LMG) முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தது. உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது என்பது, பல வளரும் நாடுகளின் வளர்ச்சி உரிமையை மீறுவதற்கு ஒப்பாகும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது. மேலும், மருத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளுக்கு பிளாஸ்டிக் ஒரு மலிவான, அத்தியாவசியமான பொருள் என்றும், இதை முழுமையாகத் தடை செய்ய இயலாது என்றும் அவை வலியுறுத்தின. ஐரோப்பிய ஒன்றியம் கோரும் முழு வாழ்க்கைச் சுழற்சி (Full Life Cycle) கட்டுப்பாடுகள் தங்களது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையை ஏற்படுத்தும் என்றும் LMG நாடுகள் வாதிட்டன. பிளாஸ்டிக் உற்பத்தி மூலத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், கழிவு மேலாண்மை, மறுசுழற்சி மற்றும் கடல் மாசுபாடு தடுப்பு போன்ற பின்நிலை நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை LMG நாடுகள் வலுவாக வலியுறுத்தின. இந்த அணுகுமுறை பிளாஸ்டிக் தொழிலின் வளர்ச்சிக்கு எந்தவிதமான தடையும் இல்லாமல் செல்வதை உறுதிசெய்யும். இதைத் தவிர, ஐ.நா.வின் ஒப்பந்த முடிவுகள் அனைத்தும் ஒருமித்த கருத்து (Consensus) அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற விதியை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் ரீதியாகச் சிறிய எண்ணிக்கையிலான நாடுகளைக் கொண்டிருந்தாலும், LMG குழு ஒரு பெரிய தடையாக உருவெடுத்தது. ஏனெனில், ஓர் ஒற்றை நாடு கூட ஒப்புதல் அளிக்காவிட்டால், உயர் லட்சிய நாடுகளின் கூட்டமைப்பு ஏற்பாடுகள் (HAC வலியுறுத்தும் உற்பத்திக் கட்டுப்பாடு போன்றவை) பலமுறை நிறைவேறாமல் போவதற்குக் காரணமாக அமைந்தது.

ஆகஸ்ட் 5, காலை 10 மணிக்குத் தொடங்கிய ஐ.நா. தலைமையிலான பிளாஸ்டிக் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஒரு புதிய, முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்தது. இதற்கு முந்தைய நாட்களில் அனைவருக்கும் திறந்த முழு அமர்வுகள் (open plenary) இருந்தபோதிலும், அமர்வின் பெரும்பாலான நேரம், ஐக்கிய நாடுகளின் (UN) பன்னாட்டுக் கூட்டங்களில் பின்பற்றப்படும் ஒரு உத்திசார்ந்த நடைமுறையான ரகசியமான ‘மூடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு’ (closed negotiation phase) ஒதுக்கப்பட்டது. ஆகஸ்ட் 5 முதல் 15 வரை, இந்தப் பேச்சுவார்த்தைகள் தினமும் இரவு 8 மணி வரை நீடித்து, சில நாட்களில் நள்ளிரவு 2 மணி வரையும் தொடர்ந்தன. இங்கு பங்கெடுப்போர் குறைவாகவும், விவாதங்கள் தீவிரமாகவும் இருந்தன.

அதிகாரப்பூர்வமாக, இந்த மூடப்பட்ட கட்டம் "தொடர்பு குழுக்கள்" (Contact Groups) எனப்படும் சிறிய குழுக்களின் வடிவில் நடைபெற்றது. வெளியுறவுப் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் (NGOs) இதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதன் முக்கிய நோக்கம், பொது அரங்கில் சாத்தியமில்லாத ஆழமான மற்றும் நுணுக்கமான சட்டப்பூர்வ உரையாடலை (legal textual negotiation) நிகழ்த்துவதே ஆகும். ஒவ்வொரு குழுவும் ஒப்பந்தத்தின் வெவ்வேறு பிரிவுகளைப் பற்றிச் செறிவாக விவாதிக்க உருவாக்கப்பட்டது — சிலர் பிளாஸ்டிக் உற்பத்தி வரம்பு குறித்தும், சிலர் நச்சு சேர்மங்கள் (chemicals of concern) குறித்தும், மற்றோர் குழுக்கள் நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் செயலாக்கத்தின் சட்டபூர்வ அம்சங்களைப் பற்றியும் விவாதித்தனர். இந்தக் குழுக்களுக்குள், நாடுகள் தங்கள் நலன்களையும், சிவப்புக் கோடுகளையும் (red lines) உறுதியாகப் பதிவு செய்தன.

இந்தத் தொடர்புக் குழுப் பேச்சுவார்த்தைகள் பொதுமக்கள் பார்வையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதால், என்ன விவாதிக்கப்படுகிறது, எந்த நாடுகள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன, அல்லது சமரசம் செய்ய யார் முயற்சிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே வெளிவந்தன. குறிப்பாக, எண்ணெய் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் சில நாடுகள், பிளாஸ்டிக் உற்பத்தி வரம்பு போன்ற கடுமையான சட்டப்பூர்வ தீர்மானங்களை எதிர்த்ததாக அறிக்கைகள் பின்னர் வெளிவந்தன. இருப்பினும், அந்த அறிக்கைகள் அதிகாரபூர்வமானவை அல்ல; மாறாக, வெளியேறிய குறிப்புகள், பங்கேற்பாளர்களின் கூற்றுகள் அல்லது கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அறிக்கைகள் மூலமாகவே உலக சமூகம் இப்பேச்சுவார்த்தையின் போக்கை அறிந்துகொள்ள முடிந்தது.

இந்தக் குழுக்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்னர் "சட்ட வடிவமைப்பு குழுக்களுக்கு" (Legal Drafting Groups) அனுப்பப்பட்டன; இவை அந்த விவாதங்களைச் சட்ட ரீதியாகத் துல்லியமான ஒப்பந்த மொழியாக வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றன. அதாவது, தொடர்பு குழுக்கள் விவாதத்தின் திசையை நிர்ணயம் செய்ய, சட்ட வடிவமைப்பு குழுக்கள் அந்த விவாதத்தைச் சட்ட ஒப்பந்த வடிவமாக மாற்றின.

இந்த "மூடப்பட்ட பேச்சுவார்த்தை" (closed negotiation) என்ற நடைமுறை, பிளாஸ்டிக் ஒப்பந்தம் போன்ற உலகளாவிய, அரசியல் நுணுக்கம் மிக்க விவகாரங்களில் நாடுகள் நேர்மையாகவும் நுட்பமாகவும் பேசும் சூழலை உருவாக்குவது இதன் நோக்கமாகும். ஆனால் மறுபுறம், இது வெளிப்படைத்தன்மை பற்றாக்குறை கவலையை எழுப்புகிறது. ஏனெனில் இத்தகைய மூடப்பட்ட குழுக்களில் என்ன தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன, எந்த நாட்டின் நலனுக்காக எவை மாற்றப்படுகின்றன என்பதில் உலகப் பொதுமக்களுக்குத் தெளிவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP) வழங்கிய “பார்வையாளர் விளக்க அமர்வுகள்” (observer briefing) மட்டுமே வெளியிலிருந்து பின்பற்றும் மக்களுக்கு தகவல் அளித்தன. ஆனால் அவை பொதுவாக விளக்கக் கூட்டங்களாக இருந்தன; உண்மையான பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் அங்கே வெளிப்படவில்லை. ஆகவே, ஆகஸ்ட் 5 முதல் தொடங்கிய அந்தப் பேச்சுவார்த்தை, பிளாஸ்டிக் ஒப்பந்த வரலாற்றில் "மூடப்பட்ட கதவுகளுக்குள் நடந்த முக்கியமான திருப்புமுனை நாட்கள்" என்று பலரும் வர்ணித்தனர். உலக நாடுகள் மெல்ல மெல்ல தங்கள் உள் நோக்கங்களை வெளிக்கொணரும் வகையில் பேசிக்கொண்டிருந்தன; ஆனால் அந்த உரையாடல்கள் பக்கங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உலகிற்கு அவை கதைகளாக மட்டுமே வந்தடைந்தன.


அதே சமயம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் வளாகத்திற்கு முன், கனடியக் கலைஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான, பென்ஜமின் வான் வாங் (Benjamin Von Wong), எஸ்.எல்.எஸ். இல்லுஷன்ஸ் (SLS Illusions) என்கிற கனடிய வடிவமைப்பு குழுவுடன் இணைந்து, 6 மீட்டர் (20 அடி) உயரமுள்ள "சிந்தனையாளரின் சுமை" (The Thinker's Burden) என்ற கலை நிறுவலை அமைத்தார். இந்தக் கலைப் படைப்பில் உள்ள சிந்தனையாளர், வெறுமனே சிந்தனையில் ஆழ்ந்திருக்காமல், ஒரு கையில் பாதுகாக்கப்பட வேண்டிய குழந்தையையும், மறு கையில் நசுக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலையும் ஏந்தி, கவலையடைந்த பூமித்தாயின் மீது அமர்ந்திருந்தார். மேலும், பிளாஸ்டிக்கின் நச்சு இரசாயனங்களுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையேயான தொடர்பைக் குறிக்கும் இரட்டைச் சுழல் 'டிஎன்ஏ'ஆல் (DNA) சுற்றப்பட்டிருந்தார். உள்ளூர் கழிவு பிளாஸ்டிக்குகளாலும், நிலைத்தன்மை வாய்ந்த பொருட்களாலும் கட்டப்பட்ட இந்த நிறுவல், பேச்சுவார்த்தைகள் நீடிக்கும் போது பிளாஸ்டிக் கழிவுகளால் தினமும் சூழப்பட்டு, வளர்ந்தது. இது எதிர்கால சந்ததியினர் மீதான — நெறிமுறை, சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல சுமையின் அதிகரிப்பைச் சுட்டிக் காட்டியது. இந்தச் சுமையைத் தணிக்க கொள்கை, புதுமை மற்றும் கூட்டு விருப்பம் தேவை என்று வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தின் கலாச்சார மற்றும் சமூக அவசரத்தை ஆழப்படுத்தியது.

ஜெனீவா அமர்வில் "சட்ட வடிவமைப்பு குழுக்கள்" (Legal Drafting Groups) வேலை செய்யத் தொடங்கியபோது, பேச்சுவார்த்தையின் மொழி (language of negotiation) படிப்படியாகத் தளர ஆரம்பித்தது. இதுவே முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தது. ஆரம்ப வரைவில் இருந்த "shall" (செய்யவேண்டும்) என்ற கட்டாயச் சட்ட வார்த்தை, சமரச அழுத்தங்களால் பல இடங்களில் "should" (செய்யலாம்) அல்லது "encourage" (ஊக்குவிக்கப்படுகிறது) போன்ற மென்மையான சொற்களாக மாற்றப்பட்டது. இதனால், நாடுகளின் சட்டபூர்வமான கட்டாயப் பொறுப்பு (legal obligation) “விருப்பமான நடவடிக்கை” போல மாறியது. "plastic production reduction" (பிளாஸ்டிக் உற்பத்தி குறைப்பு) என்ற நேரடிச் சொல்லுக்குப் பதிலாக, "management of plastic lifecycle" (பிளாஸ்டிக் வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை) என்ற பொதுவான சொல் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. இதன் மூலம், உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதிலிருந்து கவனம் கழிவு மேலாண்மைக்கு (waste management) மாறியது. அதேபோல், "legally binding measures" (சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள்) என்பது சில இடங்களில் "policy approaches" (கொள்கை வழிமுறைகள்) என மாற்றப்பட்டு, சட்டத்தின் வலிமை குறைக்கப்பட்டது. இந்த மாற்றப்பட்ட தளர்வான மொழியை உயர்-லட்சியக் கூட்டமைப்பு நாடுகள் நிராகரித்தன. ஏனெனில், ஒரு வலுவான ஒப்பந்தத்தால் மட்டுமே, பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அவர்கள் உறுதியாக இருந்தனர். 

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் (Global Plastic Pollution Treaty – INC-5.2) இறுதி நாளான ஆகஸ்ட் 15, 2025 அன்று, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்ட அறிக்கையில், “இந்த சந்திப்பு ஒருமித்த கருத்து எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது” (“This meeting adjourned without consensus.”) என்று குறிப்பிடப்பட்டது. அதே நேரத்தில், UNEP தலைவர் இங்கர் ஆண்டர்சன் (Inger Andersen) தனது அறிக்கையில், “இந்த சிக்கல்கள் இருந்தபோதிலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: அனைத்து நாடுகளும் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருக்க விரும்புகின்றன” (“However, one thing remains clear: despite these complexities, all countries clearly want to remain at the table.”) எனக் கூறினார். இதன் பொருள், ஒப்பந்தத்தின் மீதான ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படாதிருந்தாலும், அனைத்து நாடுகளும் தீர்வை நோக்கி உரையாடலைத் தொடர விரும்புகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது .

பிளாஸ்டிக் மாசு எல்லைகளைத் தாண்டி கடலையும் காற்றையும் மாசுபடுத்தி, மனித உடலுக்குள் நுழைகிறது. ஆனால் தீர்வுகள்? ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள், நிதி ஆதரவு என அரசியல் எல்லைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன. பிளாஸ்டிக் மாசு, காலநிலை மாற்றத்தின் நிழல்; அது எல்லை நாடகங்களைப் பார்க்காது. பசுமை எதிர்காலம் எல்லை தெரியாத ஒரு கனவு. அதை நனவாக்க, எல்லை மீறிய ஒற்றுமை தேவை.

புரிதல்கள்+ மௌனங்கள்= அன்பு (யசோதா பழனிச்சாமி)

 


படிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பிரகாரச் சுற்றில், சாமி தரிசனம் செய்வதற்காக, ஆன்மீக சுற்றுலா வந்திருந்த நாங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். அர்ச்சகர்களின் உபயத்தால் அன்றைய கட்டளைதாரருக்கு மட்டும் கடவுள் அபிஷேக சிறப்பு தரிசனக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். 

எங்களுக்கு முன்பாக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் ஒரு குழுவாக வந்திருந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் அறுபது, எழுபது  வயது கடந்தவர்கள். அவர்களிடம் பேசிய போது அரியலுர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்று  கூறினார்கள். எங்களைப் போலவே அவர்களும் பேருந்தில் பல திருத்தலங்களுக்கு  பயணம் செய்ய வந்துள்ளவர்கள். 

நேரம் கடந்து கொண்டிருந்தது. லட்சுமி நரசிம்மர் எங்களுக்கு காட்சி அளிப்பதற்கு காலத்தை தாமதமாக்கினார். சரி பரவாயில்லை எல்லாம் நன்மைக்கே என்று அங்கே நின்றிருந்த பெரியவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் என்னிடம் பேச ஆரம்பித்தார். எனக்கு 95 வயதும்மா என்றார். அவர் மனைவி இவரை விட குறைவான வயதுடையவராக அருகில் நின்றார். அவர் மனைவியாக இருக்குமோ என நான் யோசிப்பதை புரிந்து கொண்டவர் போல், அவரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். "எனக்கு 67 வயசும்மா. இவருக்கு நான் மூணாந்தாரம்" என்றார். நான் சிரித்துக் கொண்டேன். 

சுற்றுலா  பேருந்தில் பயணம் செய்து,  ஒவ்வொரு கோவிலிலும் கூட்ட நெரிசலில் நின்று 95 வயது நிரம்பியவர் கடவுளை வழிபாடு செய்ய வந்துள்ளார் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. ஐம்பது வயதில் நாம்மால் பஸ் படிகட்டு ஏறி இறங்க முடியலைனு பல நேரங்களில் புலம்புவதை நினைத்து சற்றே வெட்கமாக இருந்தது. அவரின் மனைவி தன் கடந்த காலத்தை பேச ஆரம்பித்தார். 

"அவருக்கு முதல்ல கல்யாணம் செஞ்ச இரண்டு பேரும் இறந்துட்டாங்க. அவருடைய மூணு குழந்தைகளை பார்த்துக்க இவருக்கு என்னைய கல்யாணம் செய்து கொடுத்தாங்க. அந்த மூணு பசங்களோடு, எனக்கு ஒரு புள்ள என்று ஆசுவாசப்பட்டவர் தன்னுடன் வந்திருக்கும் அந்த ஊர்க்காரப் பெண்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘எங்கிட்ட இருந்த நகைகளை எம் புள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்துட்டு எனக்கு 12 பவுன் வச்சுகிட்டேன்’ என அந்தம்மா சொல்லி முடித்தார். 

அந்தப் பெரியவர் அவர் பேசியதை கேட்டு விட்டு தன் பங்குக்கு பேச தொடங்கினார். ‘அப்ப நல்ல வசதியா இருந்தேன். எங்க பேர்ல சரஸ்வதி வடிவேல்ங்கிற பேரில் இரண்டு லாரி ஓடிட்டு இருந்தது. என்ன கஷ்டகாலமோ என்னவோ தெரியலைங்க எல்லாம் கொஞ்சம் லாஸ் ஆகிப் போச்சு. அதுக்கப்புறம் பசங்க வந்து தலையெடுத்து தொழில் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு பையன் வெளிநாட்டில் இருக்கிறான். மீதி ரெண்டு பேரும் இங்க தான் இருக்காங்க.  எங்களுக்கு எந்த குறையும் இல்லை அந்த 12 பவுனை  உள்ளூரில் இருக்கிறவனுக்கே குடுத்துற சொல்லி சொல்லிட்டாங்க’ என அந்த பெரியவர் பேசி முடிக்கிறார். நகை விடயங்கள் எல்லாம் முன்பின் தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொண்டது அவர்களின் வெகுளியான மனமா? அல்லது அங்கே வந்திருக்கும் அவங்க சொந்தகாரங்களுக்கு  தெரியப்படுத்தவா  என்று எனக்கு புரியவில்லை.

அந்தப் பெண்மணி  மூக்கில் இரண்டு பக்கமும் மின்னக்கூடிய தங்க  மூக்குத்தியைத்  தொட்டு, "வாழ்க்கையில எல்லாம் நிறைவா இருக்கு. இந்த வயசான காலத்துல நம்மளுக்கு வேற என்ன வேண்டும். இந்த மூக்குத்தியை நான் உசுரோட இருக்கும் வரை போட்டு இருக்கணும் அது போதும். மூக்குத்தி இல்லாம எப்படி இருக்கிறது" என்று பேசினார். கணவர் இறந்து விட்டால் அவர்களுடைய வழக்கம் மூக்குத்தியை கழற்றி விடுவதாக இருக்கலாம். தன் கணவருக்கு முன் தன் இறப்பு நடக்கணும் என்ற அர்த்தத்தில் அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். இரண்டு நாட்கள் யோசித்தபிறகும் அவர்களுடைய அன்புதான் என் மனக்கண்ணில் நின்றது. 

தீபா சதீஷ்குமார் அவர்கள் ‘கம்மஞ்சூழ் எழிலி’ நூலில், இரயில்பயணத்தில் தான் சந்தித்த தம்பதியர்கள் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. வயது முதிர்ந்த தம்பதியர்கள் நூலாசிரியர் பயணம் செய்யும் இரயிலில் ஏறுகிறார்கள். ஆசிரியர் அவர்கள் ஏதாவது பேசினால் நாமும் பேசலாம் என ஆவலுடன் காத்திருக்கிறார். ஆனால், அவர்கள்  கண்கள் மட்டுமே பேசிகிறது. கணவர் தேநீர் வாங்கி வரக் கேட்கிறார். வாய் பேசாமல் தலையாட்டல் மட்டும் செய்கிறார் அவர் மனைவி. அஞ்சு மணி நேரமாகியும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் எந்த விதமான உரையாடலுமே  நடக்கல என்று எழுதியிருந்தார். அந்தத் தம்பதியர்கள் தங்களுடைய காதலைப் புரிஞ்சுகிட்டு மௌனத்தில் வாழ்க்கையை நடத்துகிறார்களா? அல்லது அன்று அவரின் மனைவி மௌன விரதமாக இருந்திருக்கலாமோ? இவர்களுக்குள் இருக்கும் தடை என்னவாக இருக்கும்? அதை எப்படி சரி செய்வார்கள்?இப்படி இருப்பது ஒருவகையில் நன்றாகத்தானே போய்க்கொண்டும் இருக்கிறது என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தேன். இருவரும் முதுமையில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

சிறிது நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் வந்த வீடியோ ஒன்றில், நடக்கத் தடுமாறும் வயது முதிர்ந்த கணவனை, தன் தோள் கொடுத்து நடத்திச் செல்லும் வயதான மனைவியைப் பார்த்தேன். 'வாழ்ந்தால் இப்படி வாழணும்ப்பா', 'ஆஹா ஓஹோ', 'சிறந்த தம்பதி' என்று எண்ணற்ற பேர் வாழ்த்தியும், அவர்களைப் புகழ்ந்தும் எழுதித் தள்ளி இருந்தார்கள். லைக்குகளை, ஹார்ட்டின்களை அள்ளி வழங்கியும் இருந்தார்கள். நம் வாழ்க்கையும் முதுமையில் இப்படி இருக்குமா என்ற ஆசை அவர்களுக்குள்ளும் எட்டிப் பார்த்திருக்கலாம்.

கணவன், மனைவிக்குள் புரிதல்கள் இருந்தால் எந்தக் காலத்திலும் அந்த உறவுக்குள் சிக்கல்கள் விழுவதற்கு வாய்ப்பில்லை. ஒருவருக்கொருவர் குறை சொல்லியும், விட்டுக் கொடுத்தல் இல்லாமல் போவதுமே வாழ்வை நரகத்தில் தள்ளுகிறது. 

இன்றைய பெண்களின் கல்வியறிவு ஆணைவிட நான் தாழ்ந்தவள் இல்லை என்று அவர்களை உணர வைக்கிறது. ஆண் பிள்ளைகளை வீட்டிலும், சமுதாயத்திலும் நீ மேலானவன் என்று சொல்லியே வளர்த்து விட்டதால்,  பெண் தன்னைவிட சற்றே தாழ்ந்திருப்பதை அவன் விரும்பலாம். இதனால் தான் பெரும்பாலன கணவன், மனைவி உறவுகளுக்குள் அவர்களை அறியாமலே இடைவெளி ஏற்படுகிறதோ?மனம்விட்டுப் பேசினாலே பல பிரச்சனைகள் தீரும். இந்த பேசாநிலை தான் மேலும் பல நேரங்களில் பிரச்சினைகளை பெரிதுபடுத்தி விடுகிறது.

ஒருவர் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் ஒருவர்  அறிந்து கொள்ள இயலாது. அப்படி அறிந்து கொள்ள முயற்சித்தால் அவர் வாழ்க்கையை அவர் வாழமாட்டார். மனைவி என்ன நினைப்பாள் என்று கணவனும் கணவன் என்ன நினைப்பான் என்று மனைவியும் யோசித்து வாழ்வதில் வாழ்க்கை சலிப்பையும், சங்கடத்தையும் உருவாக்கும். அவரவர் இயல்பை அவரவர் ஏற்றுப் பழகும் வரை எல்லா உறவுகளிலும் புரிதலின்மை தொடரத்தான் செய்யும்.

அழகிய சிங்கர் எழுதிய சுவர் என்ற சிறுகதையை நீங்கள் வாசித்ததுண்டா? அதில் வரும் எழுத்தாளர் முதுமை நாயகன் எனும் கதாபாத்திரம் எப்போதும் உரையாடுவது சுவரிடம் தான். அவர் மனைவியும் சுவரிடம்தான் பேசுவார்.’ நான் போயிட்டு வரேன்’ சுவரைப் பார்த்து சொல்வார். ‘போயிட்டு வாங்க சாப்பாடு வச்சுடறேன்’ மனைவியும் சுவரைப் பார்த்து சொல்லி விடுவார். இந்தத் தம்பதியருக்கு மணம் முடித்த பிள்ளைகளும் , பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். 

ஆனால், இவர்களுக்குள் எந்த விதத்திலும் உரையாடல்கள் இல்லை. இவர் எழுத்தாளர் என்பதால் எந்த நேரமும் புத்தகம் படிப்பது, எழுதுவது இவரது வேலை..மனைவியோ எப்போதும் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கிறார்.

தன் குருவான எழுத்தாளர் அசோகமித்திரனை எழுத்தாளர் சந்தித்துப்  பேசுகிறார்., அவர்  “உன் வொய்ஃபிடம் பேசுகிறாயா?”

”இல்லை இன்னும் சுவரைப் பார்த்துதான் பேசுகிறேன். ஆனால் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை” என்கிறார்.

 “இனிமேலாவது  உன் மனைவியிடம் உரையாடுப்பா” என்று சொல்கிறார். எழுத்தாளர் சிரித்தபடியே விடைபெற்று வந்து விடுகிறார்.

ஒரு நாள் அவரின் மனைவிக்கு  உடல்நலம் சரியில்லாமல் படுத்து இருக்கிறார். இவர் சுவரிடம் ‘என்னாச்சு’ என்கிறார். ‘என்னால் எழுந்திரிக்க முடியவில்லை”என்று சுவரைப் பார்த்து சொல்கிறார் மனைவி. 

“எனக்கு காஃபி குடிக்கணுமே”

 “அசடு ஒரு காஃபி கூட வைக்கத் தெரியல’ என்று மனைவி சொல்லும் போது, அசடு என்ற சொல் அவருக்கு கோபத்தை வரவழைக்கிறது. அதன் பிறகு அவர் வெளியே சென்று காஃபி குடிக்கிறார். மனைவிக்கு வாங்க நினைப்பார். அவள்  திட்டி விட்டால் என்ன செய்வது என்று வாங்காமல் வருவார். 

மனைவி எழவில்லை.  “டாக்டரிடம் போலாம்” என்று சுவரைப் பார்த்து சொல்வார். “எனக்கு எதுவும் இல்லை தலைவலி சரியாகும்” என்று மனைவி சுவரைப் பார்த்து சொல்வார். 

“சாப்பாடு கடையில் வாங்கி வரட்டுமா என சுவரிடம் கேட்பார்..

 “வாங்கிட்டு வாங்க”னு சுவரிடம் சொல்வார் மனைவி.

 மனைவி படுத்தபிறகுதான் அவரைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பார். ஏன் நாம் பேசுவதே இல்லை. அவளுக்கு பிடிச்ச மாதிரி டி.வி பார்த்துட்டு போகட்டுமே என்று தன்னை சமாதனப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் வருவார்.

இறுதியில், சுவரிடம் சொல்லாமல் “மல்லிகா சாப்பிடலாமா?” என்று மனைவியின் பெயரைச் சொல்லி கூப்பிடுவதாக சிறுகதை முடியும். இங்கே அவர்களுக்குள் சுவராக இருந்தது ஒருவரிடம் ஒருவர் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத அன்பு.

முதியோர்களுக்கிடையே  உரையாடல்கள் இல்லையென்றால்  அவர்கள் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகி விடுகின்றனர் என்ற சமீபத்திய ஆராய்ச்சி பற்றி படித்த செய்தியும் என் நினைவில் நிறைந்தன. பரிக்கல் கோவிலில் பார்த்த அந்த முதிய தம்பதியர்களுக்குள் இருக்கும் அந்யோன்யமும் மனதை நிறைக்கிறது. 

ஒரு முறை வாய்த்த இந்த வாழ்க்கையில் மகிழ்வாகப் பேசுவதற்கான விடயங்கள் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாலே, மனம் மகிழ்ந்து நிறைக்கும். பிறரைப்பற்றிய குற்றங்களை சுமந்து கொண்டு இருப்பதை விட அவரவருக்கான புரிதல்களை ஏற்றுக் கொள்ள பழகினால் அகம் நிறைவாகும்.



குடும்பத்தின் பங்களிப்பு - ரிதன்யா ஷங்கர்

பரபரப்பாக போகும் இந்த வாழ்க்கையில் நம்மைப் பற்றி யோசிக்கவே நேரம் இல்லை. ஆனால், நேரம் கிடைக்கும் போது தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தில் உள்ளவர்களையும் பற்றியும் யோசிப்பது மிகச் சிறந்த செயலாகும். அதை அன்றும், இன்றும், என்றும் தாய் தந்தையினர் செய்து கொண்டுதான் உள்ளார்கள். ஆனால், இக்கதையில் தாய் தந்தையினர் மட்டும் அல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தின் நலனுக்காக யோசித்தால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

அவள் பெயர் மயூரா. அவர்கள் குடும்பம் கூட்டு குடும்பம் ஆகும். இவர்கள் குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மயூரா, கனிகா மற்றும் சூர்யா என மொத்தம் ஏழு பேர் உள்ளனர். மயூரா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்; கனிகா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்; சூர்யா LKG செல்கிறான். அப்பாவும், அம்மாவும் வேலைக்கு செல்பவர்கள். அப்பா காவல் துறையில் வேலை செய்கிறார்; அம்மா ஆசிரியராக பணியாற்றுகிறார்.

ஒருநாள், அம்மா தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் பணியிலிருந்து விலகுகிறார். மயூரா கேட்கிறாள்:
“அம்மா, இது உங்களுக்கு பிடித்த வேலை அல்லவா? ஏன் வேலையிலிருந்து விலகினீர்கள்?”

அம்மா கூறுகிறார்:“ஆம் மயூரா, எனக்கு பிடித்த வேலைதான் இருந்தாலும், உங்களை நான் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே!”

பின்னர் அம்மா கேட்டார்:“உனது இலட்சியம் என்ன மயூரா?”

அதற்கு மயூரா, “நான் அப்பாவைப் போல காவல் துறையில் பணியாற்றி, மக்களுக்கு நிறைய உதவி செய்ய வேண்டும்,” என்றாள்.

அம்மா மகிழ்ச்சியுடன்,“மிகவும் சிறந்த முடிவு மயூரா! கனவிலிருந்து திசை திரும்பக்கூடாது. என்றும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்,” என்றார்.

ஆனால் மயூரா அம்மாவை மீண்டும் ஆசிரியராக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள். அம்மா வீட்டுப் பணியால் தான் வேலையை விட்டார். நானே எல்லா வேலைகளையும் செய்தால், அம்மா மீண்டும் ஆசிரியராக போவார் என்று அவள் யோசித்தாள்:

அடுத்த நாள் காலையில், அம்மா எழுந்திருக்கும் முன்பே மயூரா எழுந்து, தன்னால் தெரிந்த வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். ஆனால் முழுமையாக செய்ய முடியவில்லை. அவள் குளித்துவிட்டு, மற்றவர்களுக்கு சூடுநீர் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பானையில் நீரை சூடாக்கினாள். நீர் கொதித்ததும், அதை பக்கெட்டில் ஊற்ற முயன்றாள். ஆனால் பானையின் கனத்தை தாங்க முடியாமல், அது கையிலிருந்து வழுந்து விழுந்தது; சுடுநீர் அவள் காலில் விழுந்தது.

சத்தம் கேட்டவுடன் அம்மாவும் அப்பாவும் ஓடிவந்து, அவளை தூக்கி மெத்தையில் உட்கார வைத்தனர். காயத்துக்கு மருந்து தடவினார்கள். அப்போது மயூரா அழுதுகொண்டே 
“அம்மா, நான் வீட்டின் மூத்த பிள்ளை. வீட்டு வேலைகளை நான் செய்தால், நீங்க மீண்டும் ஆசிரியர் பணிக்கு போவீர்கள் அல்லவா?” என்றாள்.

அம்மா பாசத்துடன், “நீ சின்ன பிள்ளை மயூரா. நீ நன்றாகப் படி. உன்னால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்தாலே போதும்,” என்றார்.

அன்றிலிருந்து மயூரா அம்மா மடித்த துணிகளை அலமாரியில் வைப்பது போன்ற சிறு வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். ஆனால் மனதில் ஒரே எண்ணம் — அம்மாவை மீண்டும் ஆசிரியராக ஆக்க வேண்டும்!

நாட்கள் கடந்தன. மயூரா இன்னும் கொஞ்சம் பெரியவளானாள். வேலையிலும் சுறுசுறுப்பாக இருந்தாள். அவளின் எண்ணம் வீட்டிலுள்ள அனைவருக்கும் புரிந்தது. தாத்தா, பாட்டி, அப்பா, கனிகா, சூர்யா என வீட்டிலுள்ள அனைவரும் சேர்ந்து வேலையைப் பகிர்ந்து கொண்டனர்.

தாத்தா வீட்டில் உள்ள பொருட்களை தூசி தட்டி வைப்பார். பாட்டி வீடு கூட்டுவார். மயூரா துணிகளை மடித்து வைப்பாள். அப்பா பாத்திரம் கழுவினால் கனிகாவும் சூர்யாவும் கழுவிய பாத்திரங்களை எடுத்து வைப்பார்கள். இவ்வாறு வேலைகளைப் பகிர்ந்ததால், வீட்டில் வேலை சுமை குறைந்தது.

ஒருநாள் அம்மா கேட்டார்,“ஏன் நீங்கள் எல்லோரும் இவ்வளவு வேலைகளைச் செய்கிறீர்கள்?”

அதற்கு குடும்பத்தினர் சொன்னார்கள்: “அம்மா, நீ மீண்டும் ஆசிரியர் பணிக்கு போகணும். அது உனக்கு பிடித்த வேலையல்லவா? வீட்டு வேலைகள் பற்றி கவலைப்பட வேண்டாம்; அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.”

இதைக் கேட்டவுடன் அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பாட்டி கூறினார்:
“நீ காலை, மதிய உணவை மட்டும் செய். மீதியெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இரவு உணவை மாறி மாறி செய்வோம். முதல் நாள் நான், மயூரா; இரண்டாம் நாள் தாத்தா, கனிகா, சூர்யா; மூன்றாம் நாள் நீ, அப்பா என்று மாற்றி மாற்றி வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வோம்.”

அம்மா நெகிழ்ந்து, எதுவும் சொல்ல முடியாமல் ஆனந்தக் கண்ணீருடன் சிரித்தார். அம்மாவின் வேலைச் சுமை குறைந்தது. மயூரா மற்றும் குடும்பத்தினர் நினைத்தது போலவே, அம்மா மீண்டும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

மயூராவும்  நன்றாகப் படித்து காவல் துறையில் சேர்ந்தாள். மக்களுக்கு ஆற்றிய உதவி மற்றும் நற்செயலால் பதவி உயர்வுகள் கிடைத்து கொண்டே இருந்தது.

குடும்பம் என்றால் வேலைகள் இருக்கத்தான் செய்யும். வீட்டில் உள்ளவர்கள் வேலைகளைப் பகிர்ந்துகொண்டால், வேலைச் சுமை தெரியாது; வெளியில் நாம் சாதிக்க நினைப்பதையும் சாதிக்க முடியும். “நான்” என்று சுயநலத்தோடு யோசித்திருந்தால் வெற்றி இல்லை. “நாம்” என்று யோசித்து, பண்பு, பரிவு, மனிதநேயம், குடும்ப பங்களிப்பு ஆகியவற்றினால்  அவர்கள் குடும்பமும், சமூக வாழ்க்கையும் வெற்றியடைந்தது.