- வீட்டில் உரம் தயாரிக்கும் முறைகள், அதற்கான உபகரணங்களோடும் மேம்பட்ட மண்புழு உரமாக்கும் முறைகளோடும், பயிற்சி வகுப்புகள் அல்லது செயல்முறை விளக்கங்களுக்கான விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட வேண்டும்.
- அன்றாட வாழ்வில் கழிவுகளை குறைப்பதற்கான நடைமுறை ஆலோசனைகள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கலாம்.
- மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை படங்களுடன் கூடிய விரிவான பட்டியலை வெளியிடுவது.(பிளாஸ்டிக் எண்கள் உட்பட).
- ஒவ்வொரு பொருளையும் மறுசுழற்சிக்கு தயார் செய்யும் முறைக்கான திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் வழங்கும் வரையறைகளை பட்டியலிடுவது.
- மறுசுழற்சி செயல் முறைக்கான சேகரிப்பு முதல் புதிய பொருள் உருவாக்கம் வரை எளிய விளக்கங்கள் (படங்கள்/வீடியோக்கள்). மறுசுழற்சியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை விளக்குவது.
- உள்ளூர் மறுசுழற்சி மையங்களின் முகவரி, வரைபடம் மற்றும் செயல்பாட்டு நேரங்கள், அங்கு ஏற்றுக் கொள்ளப்படும் பொருட்களின் விவரங்களை எடுத்துரைப்பது.
- உள்ளூரில் மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்தி புதிய பொருட்கள் தயாரிக்கும் வணிகங்கள் பற்றிய தகவல்களை தரலாம். அத்தகைய முயற்சிகளுடன் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் இடம்பெறலாம்.
- உள்ளாட்சி அமைப்பின் மறுசுழற்சி இலக்குகள் மற்றும் இதுவரை அடைந்த முன்னேற்றத்தின் புள்ளிவிவரங்கள், மக்களை ஊக்கப்படுத்துபவை.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஈரோடு மாநகராட்சியின் கழிவு மேலாண்மை முயற்சிகளில் முழுமையாக ஈடுபடுத்த, இணையதளம் கல்விப் பொருட்களையும் (PDF, வீடியோக்கள்), விழிப்புணர்வு பிரச்சார விவரங்களையும் பகிரும் ஒரு செயல்முனைப்பு தளமாக மாறுவது அவசியம். இது மாணவர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும். அவர்களை ஊக்குவிக்கும் போட்டிகளை முன்னெடுக்கலாம்.
- பேட்டரிகள், மின்னணு கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவற்றை அகற்றுவதற்கான சரியான முறைகளுடன், சிறப்பு சேகரிப்பு மையங்களின் விவரங்கள் அவசியம்.
- திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகளில் தன்னார்வலராக சேருவதற்கான வழிகளை வகுப்பதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பை ஊக்கப் படுத்தலாம். கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான தளங்களை உருவாக்கலாம்.
- சட்டவிரோத கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் மற்றும் தண்டனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய தேவையாயிருக்கிறது. சட்டவிரோத கழிவுகளைப் புகாரளிப்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கலாம்.
- திடக்கழிவு மற்றும் மறுசுழற்சி தொடர்பாக பொதுமக்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ) தொகுத்து வழங்கலாம்.
- திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப் படலாம்.
- குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறவில்லை அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் (Complaint Redressal): இருந்தால் ஆன்லைனில் புகார் பதிவு செய்யும் முறையை எடுத்துரைக்கலாம்.
- திடக்கழிவு மேலாண்மை தொடர்பான உள்ளாட்சி அமைப்பின் சட்ட விதிகள் (Bye-laws) மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய தகவல்கள் வழங்கலாம்.
- திடக்கழிவு மேலாண்மையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை குறிப்பிடலாம்.
- திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சமூகங்களின் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
- இணையதளங்கள் பொதுமக்கள் புகார்களைப் பதிவு செய்யவும், ஆலோசனைகளை வழங்கவும், மாநகராட்சி திட்டங்கள் குறித்த கருத்துக்கணிப்புகளில் பங்கேற்கவும் ஒரு தளமாக அமைய வேண்டும். இதன் மூலம், நகரின் வளர்ச்சிப் பணிகளில் பொதுமக்கள் நேரடியாகப் பங்காற்ற முடியும்.
- மாநகராட்சியின் பட்ஜெட், செலவினங்கள், திட்ட அறிக்கைகள், டெண்டர் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக வெளியிடுவதன் மூலம், பொதுமக்கள் நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும், பொறுப்புணர்வை நிலைநாட்டவும் உதவும்.
- தொழில்துறை நகரங்களில் இணையதளம் என்பது ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை அமைப்பை (Integrated Waste Management System) உருவாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது தகவல்களை வெளிப்படையாக்கி, செயல்பாடுகளைத் திறம்பட மாற்றி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி, சுற்றுச்சூழல் ரீதியாக நிலைத்தன்மை கொண்ட ஒரு தொழில் நகரத்தை உருவாக்க வழிவகுக்கும்.
- தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, மரம் நடுதல் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு தகவல்களை தொடர்ச்சியாக இணைய தளத்தில் பதிவிட வேண்டும். இது தூய்மை மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்க மக்களை ஊக்குவிக்கும்.
- பொது சுகாதார அவசரநிலைகள் போன்ற சமயங்களில், உடனடி மற்றும் நம்பகமான தகவல்களைப் பொதுமக்கள் பெறுவதற்கான ஒரு முக்கிய கருவியாக இணையதளம் செயல்பட வேண்டும்.
கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 1 - ஆனந்தி ஆரூரன்
சம்பாத்தியம் - கௌசல்யா பாஸ்கர்
பதினொரு வருடங்களுக்கு முன்பு, ஹேமாவிற்கு வரன் தேடும் பணியை சரவணனும், லட்சுமியும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்தனர். குடும்ப பின்னணி (குடும்பப் பழக்கம் தான் பையனுக்கும் வந்திருக்கும்), வரப்போகும் மருமகனின் சம்பாத்தியம் (மகளுக்கு பண கஷ்டம் வந்து விடக்கூடாது), பையனின் பழக்கவழக்கம் (மது பழக்கத்தினால் மகள் பாதிப்படைந்து விடக்கூடாது), வீடு, வாசல், சொத்து, சுகம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து வரப்போகும் மருமகனின் உடல்நலம் முதலாக விசாரணை போய்க் கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஹேமா நமக்காகத்தான் எல்லாம் என்று மனதிற்குள் நினைத்த படியே நாணத்துடன் அவ்விடத்தை கடந்து சென்றாள்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சரவணனும், லட்சுமியும் அவர்கள் நினைத்தபடியே மாதம் ஒன்றரை லட்சம் சம்பாத்தியத்தில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு வரனை தேர்வு செய்து மணமுடித்தனர். தன் மகளுக்கு நல்ல வாழ்க்கைத்துணை கிடைத்துவிட்டது என்ற மனநிறைவுடன். இதுவரை பாதுகாத்து வந்த பொக்கிஷம் இன்று முதல் வேறொருவடையது என்று கண்களில் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர். அந்த பொக்கிஷம் இன்னொருவரிடம் பாதுகாப்பாக இருக்கும் என்ற தைரியத்தில்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாக உருண்டோடியது. ஹேமாவிற்கு செய்ய வேண்டிய சீர், சிறப்புகள் எல்லாம் வந்து கொண்டே இருந்து தாய் தந்தையிடம் இருந்து. ஹேமா ஒரு இல்லத்தரசியாக தன் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தாள் தன்னை மறந்து.
ஹேமா, ரமேஷ் இருவருக்கும் ஹர்ஷா என்ற பெண் குழந்தை பத்து வயது எட்டிக் கொண்டிருந்தாள். எத்தனையோ கொடுமைக்கார கணவன்களுக்கு மத்தியில் தான் என்ன கேட்டாலும் மறுப்பேதுமின்றி செய்து கொடுக்கும் கணவர்தான் தனக்கு கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ந்து கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள் ஹேமா.
இந்நிலையில் தான் ஒரு நாள் காலை வேளையில் "ஹேமா, சின்ன உதவி" என்று வீட்டிற்கு வந்திருந்தார் முருகேசன் அண்ணாச்சி. காலையில் உதவி கேட்டு வந்திருக்கிறாரே!! என்ன உதவியாக இருக்கும்? என்ற கேள்விகளை மனதிற்குள் அடுக்கிக் கொண்டே ஆச்சரியம் கலந்த கேள்விக்குறியுடன் அண்ணாச்சியைப் பார்த்தனர் ரமேஷும், ஹேமாவும். ஹேமாவோ நம்மால் ஆக வேண்டிய உதவியா? என்று மனதிற்குள் எண்ணியவாறே சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவரை ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர வைத்தான் ரமேஷ். வழக்கமான நலம் விசாரிப்புகள் தொடர்ந்தன.
அதற்குள் இரண்டு தேநீர் கோப்பைகளுடன் வெளிவந்த ஹேமா அண்ணாச்சியைப் பார்த்து, "சொல்லுங்க அண்ணாச்சி, என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்??" என்று கேட்டாள். அதற்கு அவர் "தான் புதிதாக துவங்கி இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில், பில்லிங் செக்ஷனில் ஆள் இல்லை என்றும், ஒரு மாதம் மட்டும் உதவி செய்யுங்கள் என்றும், அதற்கான சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும்," தரையைப் பார்த்துக்கொண்டே தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கோ நன்றாகவும், பொருளாதார பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு குடும்பத் தலைவியை நன்றாகப் படித்திருக்கும் பெண்ணை பில்லிங் வேலைக்கு அழைப்பதில் பெரும் தயக்கம். ஆக, தரையைப் பார்த்துக்கொண்டே தன் இயலாமையை மறைத்துக் கொண்டிருந்தார் தயக்கத்துடன்.
ஆனால் ரமேஷ், தெரிந்த நண்பரின் கடை தானே என்று, "அதனால் என்ன அண்ணாச்சி, கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்" என்றான். இடைமறித்த ஹேமாவோ, "ஒரு மாத காலம் மட்டுமே என்னால் வர இயலும். அதற்கு மேல் கண்டிப்பாக என்னால் வர முடியாது" என்று கூறினாள். அவரோ, "சரி, அதற்குள் நான் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஹேமா கொடுத்த தேநீரை அருந்திவிட்டு, நன்றி கூறி நகர்ந்தார்.
ஹேமா மறுநாள் காலையில் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு அண்ணாச்சியின் கடைக்குச் செல்வதும், வீட்டிற்கு வந்து தன் பணிகளை கவனிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். இதுவரை பாத்திரம் மட்டுமே துலக்கிக் கொண்டிருந்த கைகள், இன்று பணப் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது. முடியாத பொழுது அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டாள்.
நாள்காட்டி தன் பணிகளைச் செவ்வனே செய்து ஒரு மாத காலத்தை கடத்தி இருந்தது. அதற்குள் அண்ணாச்சியும் எப்படியோ அலைந்து தன் கடைக்கு தேவையான வேலை ஆட்களைப் பணியில் அமர்த்தி இருந்தார்.
அவர் ஹேமாவிடம், நன்றியுடன் ஒரு மாதத்திற்கு உண்டான தொகையை, ஹேமா "வேண்டாம் அண்ணாச்சி, இதற்கு எதற்கு சம்பளம்? இந்த உதவி கூட செய்ய நான் தகுதியற்றவளா?" என்று கூறி மறுத்தும் கேட்காமல், வலுக்கட்டாயமாக கைகளில் திணித்தார். ஹேமாவின் மனமோ சங்கடத்துடன் அதை பெற்றுக் கொண்டாலும், தொகையை எண்ணிப் பார்க்கக் கூட மனம் இன்றி சிறு குழந்தையைப் போல் உலகம் மறந்து துள்ளிக் குதித்தது.
ஆம், திருமணம் முடிந்து பதினொரு வருடங்கள் கடந்து தன் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் ஒன்று, சிறு தொகையாய் மடிக்கப்பட்டு அவள் கைகளில் திணிக்கப்பட்டு இருந்தது. "அந்த சிறு தொகையில் தனக்கு பிடித்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை குறைவான விலையில் வாங்கிவிட வேண்டும்" என்று நினைத்திருந்ததால் வந்த சந்தோசம் தான் அது.
"எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் கணவன் ரமேஷ் ஏன் இதை வாங்கி கொடுக்கவில்லை??" என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. ஆமாம்… வாங்கித் தரவில்லை, அவள் ரமேஷிடம் தன் விருப்பத்தைக் கேட்கவும் இல்லை.
தன் குடும்பத்தினரின் தேவைகளையும், குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காகவும், தன் அத்தியாவசிய தேவைகள் என அனைத்தையும் பூர்த்தி செய்யும் தன் கணவன் ரமேஷிடம் இந்த சிறு ஆசையைப் பற்றி அவள் பேசியதில்லை. காரணமும் பெரிதாக இல்லை என்றாலும், தன்னால் ஒரு வீண் செலவு வேண்டாம் என்ற எண்ணமாகவும் இருந்திருக்கலாம். அதுமட்டுமின்றி, அவர்கள் குடும்பத்தில் ஹேமா மட்டுமே இசைப்பிரியை, மற்றவர்கள் இதில் அதிகம் விருப்பம் இல்லாதவர்கள். அதனால், தேவையற்ற வீண் செலவு என்று கூட நினைத்திருக்கலாம்.
இருப்பினும், அந்த தேவையற்ற செலவில் மனம் என்னவோ காற்றில் பறந்து மகிழ்ந்தது உண்மைதான். அந்த ஸ்பீக்கரைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹேமா.
ஏதோ யோசனையுடன் எழுந்தவள், தன் மகள் ஹர்ஷாவை பொக்கிஷமாக வளர்ப்பதை விட, உணர்வுகளை சரியான முறையில் கையாள தெரியும் பக்குவம் கொண்டவளாகவே வளர்க்க வேண்டும் என்ற முடிவுடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.





