காசி பார்க்கப் போறோம் (பகுதி 9) - யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 9) காசி தரிசனம் நிறைவு பெற்ற நாளில்.. ****

அன்று தில்கேஷ்வர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் காலை ஆறரை மணிக்கே கிளம்பி தங்கும் விடுதியை விட்டு வெளியே வந்தோம். பேட்டரி ஆட்டோக்கள்  வரிசையில் நின்றன.  ஓட்டுநர்களிடம் கட்டணம் பேசி  பயணத்தை தொடங்கினோம். சாலைகளில் சிலர் கழுதைகள் மீது மணல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.  இங்கு பாரம் சுமந்து செல்லும் கழுதைகளை அதிகம் காண முடிந்தது. குறுகலான தெருக்களிலும் குப்பைகள் குவிந்து கிடந்தன. பல சிறிய தெரு இடுக்குகளில் நுழைந்து ஆட்டோ ஓட்டுநர் வேகமாகச் சென்றாலும், பேட்டரி ஆட்டோ என்பதாலோ என்னவோ டீசல் ஆட்டோக்களை விட வேகம் குறைவாக இருந்தது பாதுகாப்பு உணர்வை தந்தது.

காலை நேரத்தில் சாலை நேர உணவுக் கடைகளின் முன் எண்ணெயில் போட்டு எடுத்த கச்சோரியும், சப்ஜியும் பொறித்தெடுக்கப்பட்ட மொறுமொறுப்பான ஜிலேபியும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  காலையில் தேநீரோடு மொறுமொறு ஜிலேபியை சிலர் சுவைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கடைகளுக்கு முன்பு  தமக்கு கச்சோரி கிடைக்குமா என்று ஏக்கத்தோடு தெருநாய்கள் நின்றிருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டே வந்ததில் தில்கேஷ்வர் ஆலயம் வந்து விட்டது.

கோவிலின் வடிவமைப்பு  செட்டிநாடு வீடு போன்று இருந்தது. தாழ்வாரத்தில் நின்று பார்த்தால் கோபுரம், சிவலிங்கம், நந்தி —இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசிக்கும்படி கோவில் கட்டப்பட்டிருப்பது இந்தக் கோவிலின் சிறப்பு எனக் கூறினார்கள்.


தில்கேஷ்வர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் தினமும் ஒரு எள் முனை அளவு வளர்ந்து வருவதாகக்  கூறுகின்றனர். சிவலிங்க வடிவத்தின் ஒரு புறம் சந்திரன், மற்றொரு புறம் சூரியன் உள்ளது. அந்த சிவலிங்கத்திற்கு நீர் ஊற்றி நாமே அபிஷேகம் செய்யும் வகையில் சிறிய குவளையும் வைத்திருந்தார்கள்.

சிவனை வணங்கி வெளியே வந்தபோது “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை சொல்ல வைத்து, காசிக்கு வந்ததன் பலனை அங்கே இருந்த அர்ச்சகர் விளக்கினார். அதன் பிறகு விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு அதே ஆட்டோவில் அறைக்குத் திரும்பினோம்.

அன்று காலை உணவின் போது,  ஒரு வாரமாக சமைத்துக் கொடுத்த பணியாளர்களுக்கும் அங்கே இருந்த ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தோம். எங்களால் முடிந்த சிறு தொகையை வழங்கி வாழ்த்துகளுடன் உணவை முடித்தோம்.

அதன்பின், உறவினர்கள் மற்றும் நாகப்பன் தம்பதியருடன் காசி விஸ்வநாதர் கோவில் தரிசனத்திற்கு மீண்டும் கிளம்பினோம். ஆட்டோவில் சென்று பி.டி.ஆர் மாலில் இறங்கி அங்கிருந்து, நந்தி சதுக்கம் வழியாக சிவனை நோக்கி நடந்து சென்றோம். காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் நுழைவாயில் முன்பு பேப்பர் கப்பில் பால் விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிக் கொண்டு சென்றால் விஸ்வநாதருக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து வரலாம்.

அன்று பொது தரிசன வரிசையில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் இணைந்து கொண்டோம். அங்கே வரிசையில் நின்றிருந்த மூன்று வயது குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று இறைவன் நாமத்தை உரக்கச் சொல்லியபடியே நகர்கிறார்கள். நம் மனமும் உள்வாங்கி இறைவனின் நாமத்தை  நம்மையறியாமலே உச்சரிக்க ஆரம்பிக்கிறது.

வரிசையில் நகர்ந்து விஸ்வநாதர் அருகில் சென்றபோது,  லிங்கத்தை பெரிய குழாய் மூலம் நீர் பாய்ச்சி தூய்மை செய்து கொண்டிருந்தனர். அங்கே பொருத்தப்பட்ட பெரிய திரைகளில் ஏற்கனவே எடுத்திருந்த விஸ்வநாதர் தரிசனக் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இறைவனின் சிரசில் நாம் கொண்டு சென்ற பால், இளநீர் ஆகியவற்றை நாமே ஊற்றலாம். அந்த இடத்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால், பணம் அளித்தவர்கள் அருகில் சென்று தொட்டு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு பெற்றனர். பணம் அளிக்காதவர்கள் தள்ளி நின்று இறைவனின் நாமத்தை உரக்கச் சொல்லி வெளியே வந்தனர்.

எங்களுடன் வந்த நாகப்பன் தம்பதியர் அன்னபூரணி அம்மன் கோவில் செல்லலாம் என்றனர். நாமும் செல்வோமா என உறவினர்களுடன் யோசித்துக் கொண்டிருக்கையில் தம்பதியர்கள்களை விட்டு பிரிந்து வழித்தடம் மாறிவிட்டோம். எது வழி என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. எங்களுடன் வந்த பாட்டியம்மாவையும் அழைத்துக் கொண்டு ஒருவழியாகத் தேடி ஆலயத்தைக்  கண்டடைந்தோம்.

ஆலயத்திற்குள் சென்ற நேரத்தில் அன்னபூரணி தாயாருக்கு சிறப்பான தீபாராதனை நடந்தது. மனமுருக வழிபட்டு, பிரசாதமாக வழங்கிய லட்டுவை வாங்கி கொண்டு வெளியே வந்தோம். கோவிலிருந்து திரும்பி வரும் வழியெங்கும் பாசி மணிகளை கையில் வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறார்கள். பத்து ரூபாய்க்கே பாசிகள் கிடைத்தன. திருட்டுப் பயம் இருக்கும் சூழலில் இலகுவாக வாங்கி அணியலாம்.

எங்களுடன் வந்த பாட்டி, “அன்னபூரணி சிலை வேண்டும். புடவை, மற்றும் தோடு வாங்கிக் கொடுங்கள்” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்தார்.  அவரை அழைத்துச் சென்று தேவையானவற்றை சாந்தி அக்கா வாங்கிக் கொடுத்தார். அவர் வாங்கிய புடவை, கவரிங் நகைகள் அனைத்தும் தன் ஊரிலுள்ள அம்மனுக்காக என்றார். அவரின் பக்தி எங்களை ஆச்சரியப்பட வைத்தது. ஒன்றரை மணிக்குள் அறையை காலி செய்ய வேண்டியிருந்ததால் விரைவில் திரும்பினோம்.

மதிய உணவு முடித்து, எங்கள் பொருட்களை இரண்டு அறைகளில் சேர்த்தோம். மாலை வேளையில் சிலர் மீண்டும் தரிசனத்திற்குச் சென்றனர். நாங்கள் கடைவீதிக்குச் சென்றோம். கடைவீதியில்  கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. சாலையோரங்களில் வியாபரிகள் பொருட்களைப் பரப்பி விற்றனர். காவல்துறை வாகனம் வருகிறது என்ற செய்தி பரவ ஆரம்பித்ததும் விற்பனையாளர்கள் பொருட்களைச் சுருட்டிக் கொண்டு ஓடினார்கள். காவல்துறை வாகனம் கடந்ததும் மீண்டும் வந்து கடை அமைத்தனர்.  காவல் துறை அதிகாரிகள்  வந்துட்டு போயிட்டார்கள் இனி வரமாட்டார்கள் என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பரவுவதை பார்க்க முடிந்தது.

கவரிங் நகை, பாத்திரங்கள், பொம்மை, ஜவுளிகடைகள்  ஸ்வெட்டர், குல்லா,  என பலவகை விற்பனை பொருள்களின் கடைகள் நிறைந்து இருந்தன. சாலையோரங்களில் பொருள்களை விற்பவர்களிடம் விலை குறைவாக பேரம் பேசி வாங்கலாம். பெண்களுக்கான சுடிதார் பேண்ட், டாப் வகைகளையும் கைகளில் வைத்துக் கொண்டு விற்பனை செய்கிறார்கள். அவர்களிடமும்  பேரம் பேசி வாங்கலாம். கடைத்தெருக்களில் உள்ள சில உணவுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கே  லஸ்ஸி நன்றாக இருக்கும் என்றார்கள். பால், பாதாம், மசாலா கலந்த பானத்திற்கு தண்டாய் என்றும் பெயர் சொன்னார்கள்.

பொருட்கள், உணவுகள் தவிர வண்ணமயமான மிட்டாய்களும் கடைகளில் குவிக்கப்பட்டிருந்தன. வாங்கிய சில மிட்டாய்களில் வண்ணங்கள் வேறாக இருந்தாலும் அதை உண்ணும் போது இலந்த வடையின் சுவை இருந்தது. இந்தி தெரிந்து இருந்தால் பேரம் பேச வசதியாக இருக்கும். தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரிகளும்  இந்தியில் பேசவே விரும்பினர். வீட்டிலுள்ள குழந்தைகள், பிள்ளைகளுக்கான சில பொருட்களை வாங்கிக் கொண்டோம்.

அறைக்குத் திரும்பி இரவு ஏழு மணிக்குள் உணவு முடித்து, இரண்டு வாகனங்களில் பண்டிட் தீனதயாளன் உபாத்யாய ஜங்ஷன் நோக்கி கிளம்பினோம். சுமார் 15 கி.மீ தூரம். அன்று முகூர்த்த நாளாக இருந்திருக்க வேண்டும். வழியெங்கும் திருமண ஊர்வலங்கள், பட்டாசுகள், மின் அலங்காரங்கள் கண்களைக் கவர்ந்தன. உத்தரப் பிரதேசம் பெரிய மாநிலம், அதில் நாம் பார்த்தது ஒரு துளி மட்டுமே.

ரயில்நிலையம் சென்று இறங்கிய பிறகு,  லக்கேஜ்களை எடுத்துச் செல்ல எங்களுடன் வந்த பழனிசாமி அவர்கள் உதவினார். அறிமுகம் தெரியாத நண்பர்களோடும், தோழிகளோடும் உருவான நட்பு, பயணத்தை இன்னும் இனிமையாக்கியது. எங்களுடன் பயணத்தில் இணைந்திருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் மகிழ்வைப் பரிமாறிக் கொண்டு மனநிறைவோடு விடைபெற்றோம். 

11:30க்கு சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் வந்தது. எங்கள் ஐந்து பேருக்கும் ஒரே கோச் என்பதால், சென்று வந்த பயண அனுபவங்களை  இரண்டு நாட்கள் பேசி ஓய்வு எடுத்துக் கொண்டு, இரண்டு நாள் ரயில் பயணத்தை சுமூகமாக முடித்தோம். காட்பாடியில் இறங்கி ரயில் மாற்றி,  ஆன்மீகத் தலமான காசிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறிய மனநிறைவோடு இரவு 7.30 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தோம்.

பயணிகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, உணவு ஏற்பாடுகளையும், தங்கும் விடுதியையும் சிறப்பாக ஏற்பாடு செய்து,  பயணத்தை இனிமையாக அமைத்துக் கொடுத்த ஜெயக்குமார் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் இருந்து உதவிகள் செய்த நண்பர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

இந்தக் கட்டுரை வழியாக உங்களையும்,  திரிவேணி சங்கமம், கயா, காசி விஸ்வநாதர் கோவில், கங்கா ஆரத்தி, அயோத்தி ராமர் கோவில் என தரிசனம் செய்த புண்ணியத் தலங்களை, என் எழுத்தின் வழியாக உங்களையும் தரிசிக்க வைத்திருப்பேன் என்ற மகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும் ஈசனருள் கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்.



ஈரோடு வாசல் சிறுகதைப் போட்டி 2026



ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி முதல் முறையாக இந்த வருடம் நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாளிலிருந்தே கதைகள் வரத் தொடங்கின. போட்டியின் இறுதி நாளான 28 பிப்ரவரி 2026 இரவு 12 மணி வரை அனுப்பப்பட்ட 283 சிறுகதைகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

போட்டியாளர்கள் அனைவருக்கும் இந்த வலைதளத்தின் சுட்டி (ஈரோடு வாசல் – தமிழ்முற்றம்) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026 தொடர்பான தகவல்கள், அடுத்தடுத்த சுற்றுகளுக்கான அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகளை அறிய இந்த வலைதளத்தை தொடர்ந்து பின்தொடருங்கள்.

ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் கதைகளை அனுப்பிய அனைவரின் ஏகோபித்த ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த அன்பும் நன்றியும். போட்டியின் அடுத்த சுற்று பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்.

காசி பார்க்கப் போறோம் (பகுதி 8) - யசோதா பழனிச்சாமி

*****(பகுதி 8) காசி பலன் என்னதம்மா சோழிபலன் உன்னதம்மா****

அயோத்தியிலிருந்து காசியில் தங்கும் அறைக்கு வந்ததும், நிறுவனர் ஜெயக்குமார் சார் "காலையில்  6:00 மணிக்கு  எல்லோரும் தயாராகி வந்துடுங்க முக்கியமாக பார்க்க வேண்டிய கோவில்களை தரிசிக்கச் செல்கிறோம்" என்று கூறினார். அடுத்த நாள் காலையில் அவர் சொல்லிய நேரத்தில் அனைவரும் தயாராகி வந்தோம். காலபைரவர் கோயில் , சங்கட் மோட்ச ஆஞ்சநேயர்,  துளசி மானச மந்திர், துர்கா சக்திபீடம் மற்றும் ஸ்படிக லிங்க கோவில்களுக்கு பேட்டரி வாகனங்களை ஏற்பாடு செய்து கிளம்பினோம்.

 காலபைரவர்
காசிக்கு செல்கிறவர்கள் அவசியம் காசியில் இருக்கும் காலபைரவரை தரிசனம் செய்தால் தான் காசி யாத்திரை முழுமைபெறும் என்று  கூறினார்கள். காசி மாநகரத்தின் தீய சக்திகளை வென்று காக்கக்கூடிய காவல் தெய்வமாக வழிபடப்படும் காலபைரவர் இங்கே கருநிறக் கல் சிலையாக, வெள்ளி முகமூடி அணிந்த வடிவில் காட்சி தருகிறார்.

 
பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக தன் நெற்றிக் கண்ணில் இருந்து காலபைரவரை சிவன் தோற்றுவித்தாக புராணக் கதைகளில் கூறப்படும் இந்த கோவில் கி.பி 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கால பைரவரின் வாகனமாக நாய் சிலை உள்ளது. காலபைரவரை தரிசனம் செய்ய வருபவர்கள் கருப்புக் கயிறு மற்றும் எண்ணெய் வழங்கி வழிபடுகின்றனர்.
 
காலையில்   7:00 மணிக்கு  கோவிலுக்குச் சென்று விட்டோம். அங்கு சென்ற நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது.  இரண்டு மூன்று நிமிடங்கள்  என்றாலும்  சிறப்பான தரிசனம் கிடைத்தது. தரிசனம்  முடித்து வெளியே வரும் பொழுது பக்தர்கள் கூட்டம் அதிகமாகி, வரிசை நீண்டு இருந்ததால் சலோ சலோ” என்று  வேக வேகமாக தள்ளி விடுகிறார்கள். கோவில் பிரகாரத்தில் விற்பனை செய்யப்படும் காலபைரவருடைய எந்திரங்கள், கயிறுகளை வாங்கி நம் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் திருஷ்டி கழிக்க முன்வாயிலில் கட்டலாம். 

பூ விற்கும் கடைகளில் பூக்கள்  வாடி இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வாங்கி பைரவருக்கு சாற்றுகிறார்கள் பக்தர்கள். 
 
காசி கிளம்புவதற்கு முன் எங்கள் நிறுவனர், உங்கள் ஊரில் உள்ள பிள்ளையார் கோயில், குலதெய்வக் கோவில், மற்றும் காலபைரவரிடம் சென்று நல்லபடியாக பயணம் முடித்து வர ஆசிர்வாதம் பெற்று வாருங்கள் என்றார்.  பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று அவர் கூறியபடி கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். இங்கே காலபைரவரைப் பார்த்ததும் எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு எங்களை சிறப்பாக அழைத்து வந்ததற்கு நன்றி  சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
 
சங்கட்மோட்ச ஆஞ்சநேயர்
அடுத்து  சென்ற சங்கட் மோட்ச ஆஞ்சநேயர் கோவில், நுழைவு வாயிலிலிருந்து சிறிது தூரம் உள்ளே நடக்க வேண்டியிருந்தது. வழி நெடுக அடர்ந்த மரங்கள் நிறைய இருந்தன. கோயிலின் உள்ளே  இயற்கையும்,  அமைதியும் நிறைந்து இருந்தன. பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் துளசிதாசரால் அசி ஆற்றங்கரையின் அருகில் நிறுவப்பட்டுள்ளது இந்த ஆலயம். சங்கடங்களைப்  போக்குபவர் என்பதால், இவர் 'சங்கட மோட்சன்' என்று அழைக்கப்படுகிறார். 
 
கோவிலின் உள்ளே நுழையும்முன் பெரிய தலவிருட்சம்  500, 600 வருடங்கள் பழமையும் பெருமையும் வாய்ந்த  அத்திமரம் உள்ளது.  இந்த அத்தி மரத்தின் கீழே அமர்ந்து துளசிதாசர் ராமசரிதமானஸ வரிகளை எழுதியதாக சொல்லப்படும் மரத்தைச் சுற்றி வந்து  வணங்கினோம்.
 
சனிக்கிழமையில் கூட்டம் அதிகமாக இருந்தபடியால் பக்தர்களின் வரிசையில் நாங்களும் விரைந்து இணைந்துகொண்டு  நடந்தோம். அங்கு வரும் பக்தர்கள் ஹனுமன் சாலிசா புத்தகம் வைத்து படித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த புத்தகத்தை வாசித்து விட்டு  கோயிலில் ஒரு இடத்தில் வைக்கிறார்கள்.  அடுத்து வருகிறவர்  அதை எடுத்து வாசிக்கிறார்கள்.  இது ஒரு நல்ல செயலாக இருந்தது. 

எல்லா கோவில்களிலும் இது போன்று பக்திமார்க்க புத்தகங்களை வாங்கி வைப்பதன் மூலம் வீண் பேச்சுக்களைத் தவிர்த்து ஆன்மீகத்தை மட்டுமே உணரும் வகையில் செய்யலாம் . வாசிக்க விருப்பமுடையவர்கள் வாசித்து விட்டு அங்கேயே புத்தகத்தை வைத்து விட்டு செல்ல வேண்டும். (மறந்தும் கூட  வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடக்கூடாது என்று யோசித்துக் கொண்டே வரிசையில் நகர்ந்தேன்.)

கருவறையில்  இருந்த ஆஞ்சநேயர்  பக்தர்கள் அணிவிக்கும் துளசிமாலைகளிலும்  மற்ற பூக்களின் அலங்காரத்திலும் கம்பீரமாக   காட்சி அளித்த ஆஞ்சநேயரை மனமுருக வழிபட்டு, கோயில் பிரகாரம் சுற்றி வெளியில் வரும் போது, எதிரே வரும்  பக்தர்கள் அட்டைப் பெட்டியில் ஸ்வீட் வாங்கி வருகிறார்கள். அதை ஆஞ்சநேயர் முன் வைத்து படைத்து விட்டு வந்து, பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கொடுத்துச் செல்கிறார்கள். வெளியே வரும் பக்தர்களுக்கு அந்த இனிப்புகளையும், துளசியையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
 
துளசிமானஸ மந்திர்
துளசிதாசர்  ராம சரிதா மானச நூலை எழுதிய இடத்திலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. ராமசரிதமானஸ என்பது ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை அவதி மொழியில்  எழுதிய ஆன்மீக காவியம். 

துளசிதாசர் வாழ்ந்த வீட்டை வடிவமைத்து 1964_ல் பிர்லா குடும்பத்தாரால், நவீன வெள்ளைப் பளிங்கு கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் சுவர்களில் ராமசரிதமானஸ பாடல்கள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டு உயிருள்ள நூலகமாக  காட்சி அளிக்கிறது. ராமசரிதா மானஸாவின் மூல கையெழுத்து பிரதிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. கோயில் வளாகத்தினுள் அருங்காட்சியகமும், துளசிதாசர் அவர்கள் வாழ்ந்த நினைவுச் சின்னமும் உள்ளது.
 
துர்க்கை சக்தி பீடம் 
துர்க்கை சக்தி பீடம் கோவிலினுள் நுழைய  படிகட்டுகள் வழியாக ஏறிவந்து உள் பிரகாரம் சுற்றி விட்டு, கருவறையில் இருக்கும் துர்க்கை அம்மனை வழிபட, மீண்டும் படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இந்த தலம் பதினெட்டாம் நூற்றாண்டில், நாகர் அரசி ராணி பவானி அவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. நாகாரா பாணி கட்டிடக்கலை அமைப்பில் இருப்பதாக தகவல் சொல்கிறது. கோயில் வெளிச் சுவர்கள்  முழுவதும் சிவப்பு வண்ணமாக இருந்தன. இதனால் சிவப்புக் கோவில் என்கிறார்கள். இங்கே எழுந்தருளி இருக்கும் துர்கா தேவி சுயம்பு என்று நம்பப்படுகிறது. 


மகிஷாசுரனை வதம் செய்த சக்தியாக கருதப்படும் இந்த துர்க்கை அம்மன் கோவில் அருகில் துர்கா குண்ட் என்ற குளம் உள்ளது.
 
ஸ்படிக லிங்கம்
இந்த கோவில் தனியாரால் கட்டப்பட்டு நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. அங்கே கோசாலையும் பராமரிப்பு செய்து வருகின்றனர். கோவிலினுள் இருக்கும் சிவனுக்கு நாமே நீர் ஊற்றி அபிஷேகம் செய்யலாம். கோவில் வளாகத்தினுள் 1008 லிங்கங்கள் தனித்தனியாக இடம்பெற்றிருந்தன.
 
சோழியம்மன் கோயில்
காசி பயணம் முடித்து விட்டு இறுதியாக சோழியம்மனை தரிசனம் செய்து வந்தால் தான் காசி சென்று வந்ததன் பலன் நமக்கு கிடைக்கும் என்ற ஐதீகம் இருப்பதாக எங்கள் வழிகாட்டி தெரிவித்தார்.  ஒரு உயரமான இடத்தில் சிறிய கருவறையில் சோழிஅம்மன் வீற்றிருக்கிறார். 
 
கோயில் முன் இருக்கும் கடையில் ஜாக்கெட் பிட்டும், அதன் மேல் ஐந்து சோலிகளும் வைத்து விற்கிறார்கள். நாம் அதை வாங்கிச் சென்று சோழிஅம்மன் சன்னதியில் இருக்கும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அவர் இறைவி முன்  நம்மை நிறுத்தி “காசி பலன் என்னதமா சோழிப்பலன் உன்ன தம்மா” என்று நம்மிடம் கூறி திருப்பச் சொல்ல வைக்கிறார். அதன் பிறகு நம்மிடம் வாங்கிய ஜாக்கெட் பிட்டையும்,  நான்கு சோழிகளையும் அங்கேயே வைத்துக் கொண்டு ஒரு சோழியை மட்டும் கொடுத்து வீட்டில் கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். திரும்பவும் அந்த ஜாக்கெட் பிட் கடைகளில் விற்பனைக்கு சென்று விடும் என்பது தெரிந்தாலும் அவர்களுக்கு ஒரு வருவாயை கொடுத்த மனதிருப்தியுடன் வரலாம்.
 
அந்தக் காலத்தில் வயது முதிர்ந்த தம்பதிகள் காசி சென்று சிவனை வழிபட வேண்டும் என்பதற்காக பசி தாகம் மறந்து கால்நடையாக நடந்து வந்து  காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வெளியில் வரும் போது, ஒரு சன்னியாசி  ‘சோழிஅம்மனை பார்த்தீங்களா?’ என்று கேட்டாராம். அவர்கள்  ‘இல்லை’ என்று சொல்ல  ‘அந்த அம்மனை பார்த்து வழிபட்டு போங்கள் நீங்க வந்த காசிப்பயணம் நிறைவேறும்’ என்று அந்த சன்னியாசி சொன்னதாகவும்,  அந்த முதியவர்கள்  அங்கே வந்து அந்த அம்மனை  தரிசனம் செய்துவிட்டுப் போனதாக புராணக் கதை சொன்னார்கள்.
 
இன்னொரு பக்கம் கவுளிபாய் என்ற பக்தை காசி விஸ்வநாதரை சகோதரானாக நினைத்து வழிபாடு செய்து வருகிறார். அவர் மிகவும் தூய்மையை கடைபிடித்து வருபவர்.  காசி சுத்தமானது என்பதால் ஆச்சாரம் பார்க்கத் தேவையில்லை என்று சிவன் கூறி அவருக்காக இங்கே ஒரு அம்மனை வைத்ததாக ஒரு கதை சொல்கிறார்கள். அங்கு சென்ற நேரத்தில் கூட்டம் அதிகமாக இல்லை என்பதால் சோழியம்மனை  விரைவில் தரிசனம் செய்து அறைக்கு வந்தோம். சிலர்  மீண்டும் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்யச் சென்றார்கள். 

காசி தீர்த்தம் வாங்குவதென்றால் நாட்டுக்கோட்டை  நகரத்தார் கடை தான் அங்கே பிரபலம். அவர்கள் விற்பனை செய்யும் தீர்த்தம் அவர்கள் சொல்லும் விலை தான். சிறிய குவளை தீர்த்தம் 45 ரூபாய். காசிக்கு செல்பவர்கள் காசி தீர்த்தம் வாங்கிச் சென்று இராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் இராமலிங்கசாமிக்கு அபிஷேசகத்திற்கு கொடுத்து வழிபாடு செய்து வர வேண்டும் அப்போது தான் முழுமையான காசி பயணம் நிறைவு பெறும் என்றார்கள்.
 
நாட்டுக்கோட்டை நகரத்தார் கடையிலேயே காசி தீர்த்தம், அன்னபூரணி தாயார் சிலை, கோமாதா சிலை, கருங்காலி மாலை என நிறைய பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. நமக்கு தேவையானதை சொன்னவுடன் கணிணியில் பில் தயாரித்துக்  கொடுக்கிறார்கள். இருவர் பொருட்களை எடுத்து தருகிறார்கள். கடையின் அமைப்பு கரைக்குடி செட்டிநாடு வீடு போல் பெரிதாக இருந்தது. வீட்டிற்குள்ளேயே படிக்கட்டு. தீர்த்தம் பேக் செய்வதற்கு தனி இடம். விற்பனை செய்ய தனி இடம். அதற்குள்ளேயே  குடித்தனம் செய்கிறார்கள். ஒவ்வொன்றும்  தனித்தனி மாடியில் இருக்கிறது. அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து பெரிய கேன்களில் தீர்த்தம் எடுத்து வந்து, அந்த நீரை செம்பு பாத்திரத்தில் ஊற்றி பேக்கிங் செய்கிறார்கள். காசியில் இருக்கும் கங்கையின் நீரை தீர்த்தமாக நம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல கூடாது என்றார்கள்.
 
காசியில் பனாரஸ் புடவை மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று ஒரு  ஹோல்சேல் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றார்கள். 1600 புடவையை பேரம் பேசி 600ரூபாய்கு சிலர் வாங்கினார்கள். அது பனராஸாக தெரியவில்லை. அதே புடவை பஜாரில் 400 ரூபாய் இருந்ததாக கூறினார்கள். வெளியே சாலைகளில் நான்கு சுடிதார் டாப்  500 ரூபாய் என விலை பேசி வாங்கினார்கள்.  பேரம் பேசினால் விலை குறைக்கிறார்கள்.
 
பஜார் சுற்றி பார்த்து விட்டு மதிய உணவுக்கு அறைக்கு வந்து சேர்ந்தோம். சிலர் மீண்டும் நான்கு மணிக்கு கங்கா ஆரத்தி சென்றார்கள்.. நாங்கள்  விடுதியில் இருந்து வெளியே வந்து  நடந்து அங்கே இருக்கும் தெருக்களை சுற்றி பார்த்து வந்தோம். ‘வாங்க பனாரஸ் புடவை பார்க்கலாம்’ என்று பல கடை தொழிலாளிகள் நம்மை  கையைப் பிடித்து அழைக்காத தொனியில் கேட்டுக் கொண்டே செல்கிறார்கள். பாலில் செய்த இனிப்பு வகைகள் தள்ளுவண்டிக் கடைகளில் விற்பனைக்கு இருந்தன. பெரிய பெரிய ஜவுளி கடைகளில் பொம்மைகள் பனாரஸ் பட்டில் ஜொலித்தன. அந்த இரவு நேரத்தில் காசியில் ஒளிர்ந்த மின்விளக்குகளின் ஒளிகளை கண்களால் பருகியபடியே அறைக்குத் திரும்பினோம்.
 
 (பயணத்தின் இறுதி நாள் நிகழ்ந்தவை அடுத்த பகுதியில்)