காதல் என்பது யாதெனில்… - அன்புமணி, உமா மகேஸ்வரி R, மகேஸ்வரி மதன்



பார்க்கிங் ஏரியாவிலிருந்து அவசரமாகத் தனது வண்டியை வெளியே எடுத்துக் கொண்டிருந்தவன்,  “மோகன்!”,  என்று தன்னை அழைத்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் சொந்தக்காரர் திலகராஜனை ஒரு அமைதியான புன்னகையுடன் எதிர்கொண்டான். 

“வாங்க சார். வணக்கம். சொல்லுங்க. என்ன விஷயம்?”, என்றான்.

“என்னப்பா? அவசரமா கிளம்பிட்டு இருக்கியா? சமையலுக்கு காய் வாங்கப் போறியா? இல்லாட்டி உன்னோட பாட்டு கிளாசுக்குப் போறியா? ஆனாலும் நீ ரொம்ப கொடுத்து வச்சவன்பா. ஆபீஸ் டென்ஷன் இல்ல பாரு. இல்லத்தரசன் என்று கொஞ்சம் கூட ரோஷம் இல்லாம ஜாலியாக இருக்க.. பொண்டாட்டி வேற உன்னை உள்ளங்கைல வச்சுத் தாங்கறா”, என்றார் நக்கலாக.

இது போல் கடந்த ஏழு வருடங்களில் பல முறை பல பேர் வாயிலிருந்து கேட்டதுதான் என்பதால் அவன் புதிதாகக் காயப்பட ஏதும் இருக்கவில்லை..

“ஆமாங்க சார். கண்டிப்பாக. நீங்க எதுக்குக் கூப்பிட்டீங்கன்னு இன்னும் சொல்லவில்லையே”, என்றான் புன்னகை மாறாமல் நாற்பது வயதுக்குரிய பக்குவத்துடன்.

“நீ கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தால் தண்ணீர் மோட்டார் ஓட மாட்டேங்குது.. ரிப்பேர் பார்க்கிறாயா என்று தான் கேட்ட வந்தேன்”, என்றார்.

“இப்போ கொஞ்சம் அவசரமாகப் போகிறேன் சார். மதியம் வந்து பார்த்துத் தருகிறேன்”, என்று விட்டு பைக்கைக் கிளப்பினான்.

கோவையின் மிகப் பெரிய குடியிருப்புப் பகுதியான சாய்பாபா காலனியில் தான் அவனது அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு மனைவி ரேகாவின் வேலை காரணமாக மாற்றலாகி  வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன் அவர்கள் சென்னையில் 
வசித்து வந்தார்கள். 

மோகனுக்கும் ரேகாவிற்கும் திருமணமாகி 15 வருடங்களாகின்றன. 14 வயதில் ஒரே மகள் மதிமலர் இருக்கிறாள். அருகில் உள்ள அவிலா கான்வென்ட்டில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாள். ரேகாவின் பெற்றோர் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் காலமானார்கள். அதை மறக்கத்தான் இந்தப் பணி மாற்றலே. கேட்டுப் பெற்றதுதான்.

மோகனின் பெற்றோர் மதுரை அருகே கிராமத்தில் இருக்கிறார்கள். குடும்பத்தில் அவன்தான் முதல் தலைமுறை பட்டதாரி. அதுவும் பொறியியல் பட்டதாரி. பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவனைப் படிக்க வைத்தார்கள். அவனும் அதை உணர்ந்து நன்றாகப் படித்து நல்ல வேலையில், உயர் பதவியில் அமர்ந்தான். கை நிறைய சம்பளம் வாங்கினான். 

பெற்றோர் பார்த்து தேர்வு செய்த பெண் தான் ரேகா. மென்பொருள் பட்டதாரியான அவள் தமிழ்நாட்டின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிக நல்ல பதவியை வகித்து வருகிறாள். இருவரும் மனமொத்த தம்பதியர். திருமணமான அடுத்த வருடமே மகள் மதியும் பிறக்க எந்தவிதக் குறையும் இல்லாமல் அவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. 

எல்லாம் இருந்தும் அவனது மனதில் நிறைவு என்ற ஓர் உணர்வு ஏற்படவே இல்லை. அதற்குக் காரணமும் இருந்தது. சிறு வயது முதல் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்த காரணத்தினால் படிப்பு ஒன்றுதான் தன்னையும் தன் குடும்பத்தையும் உயர்த்தும் என மனதை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்து, கருமமே கண்ணாகப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தான் மோகன். 

திருமண வாழ்க்கையிலும் வேறு எந்த சிக்கல்களும் இல்லாததால் வாழ்க்கை மிகவும் தெளிந்த நீரோடை போல ஓடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் சிறு வயதில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் மோகனுக்கு நிறையவே இருந்தது. அதில் ஒன்றுதான் பாட்டு கற்றுக் கொண்டு பாடகனாக வேண்டும் என்பது. நிறைவேறாத ஒரு லட்சியம் என்று கூட சொல்லலாம். 

ஒரு முறை கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அதைப்பற்றி ரேகாவிடம் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தான் என்று சொல்வதை விட அவனது ஆதங்கத்தை எல்லாம் அவளிடம் அந்தத் தருணத்தில் கொட்டியிருந்தான் என்று சொல்லலாம்.

அதன் பின் ஒரு வாரம் கடந்து போனது.  ஒரு நாள் மாலை, ரேகா, அவனை அலுவலகத்தில் இருந்து நேரே சென்னையில் உள்ள பிரபல கர்நாடக இசைப்பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். மிகப் பெரிய இசை மேதையின் பள்ளி அது. அவரது செயலரைத்தான் அன்று அவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

ஏற்கனவே அவரிடம் வகுப்பு தொடர்பாக பேசி இருப்பாள் போலத் தெரிந்தது. அவரும் அவனிடம் சில விஷயங்களைக் கலந்து பேசினார். முறையாகக் கர்நாடக இசையை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முழு நேரமாக வந்து கற்றுக் கொண்டால் இயலும் என்றார்.

அது தொடர்பாக அவனது எந்த சந்தேகத்தையும், கேள்வியையும்  கேட்பதற்கான சந்தர்ப்பத்தையே ரேகா வழங்கவில்லை. அவன் கைகளை அழுத்திவிட்டு நல்ல நாள் பார்த்து விரைவில் வந்து வகுப்பில் இணைந்து கொள்வதாகத் தெரிவித்து விட்டு அவனுடன் வெளியே வந்தாள்.

அதற்குப்பின் மளமளவென அனைத்தும் நடந்தேறின. அவனது வாழ்வின் இலட்சியத்தை, கனவை நிறைவேற்றியே தீருவேன் என்று விடாப்பிடியாக நின்றாள் ரேகா. 

“உற்றார், உறவினர் யார் என்ன சொன்னாலும் சரி. உங்களின் வெற்றி அவர்களது வாயை எல்லாம் அடைத்து விடும். அதனால் யார் என்ன சொன்னாலும் அதுவரை பொறுமையாக இருப்போம். குடும்பத்தை நடத்துவதற்கான ஊதியத்தை எனது வேலை தரும். அதுவே போதும். உங்கள் வேலையை விட்டு விட்டு உங்கள் கனவை நோக்கிய பயணத்தைத் தொடங்குங்கள். இனி உங்கள் கனவை நனவாக்குவது மட்டுமே எனது லட்சியம்”, என்று உறுதியாக சொல்லி விட்டாள் அவனது இணையாள். 

அவனது வாழ்வின் மிக முக்கியமான அந்த முடிவை அவனுக்காக அவளே எடுத்தாள். ஐந்து வருடங்கள் தொடர்ந்து அந்த இசை மேதையிடம் அவன் இசையை கற்றுக்கொள்ளத் தொடங்கினான். இசைத்தவம் இருந்தான் என்று கூடச் சொல்லலாம். அப்போதுதான் இருவருக்கும் உற்ற துணையாக இருந்த ரேகாவின் பெற்றோர் விபத்தில் காலமானார்கள். எதற்கும் மனம் தளராத ரேகாவால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவளது நிலை புரிந்து அவன்தான் கட்டாயமாக அவளை பணி மாற்றல் வாங்க வைத்தான். அவனது இசைத் தவத்திற்கு சிறிது தடங்கல் ஏற்பட்டது என்றாலும் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு ரேகாவை இழப்பிலிருந்து மீட்டெடுப்பது ஒன்றே குறிக்கோளாக இருந்தது.

கோவைக்கு வந்து இந்த இரண்டு வருடங்களாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாள். கடந்த இரண்டு வருடங்களில், ஒரு இல்லத்தரசனாக வீட்டுக்குத் தேவையான அனைத்தையும், மகளின் தேவை அனைத்தையும், காதல் மனைவியையும் அவனே பார்த்துக் கொள்ளத் துவங்கினான்.  கடந்த சில மாதங்களாகத்தான் முழு நேரம் என முடியா விட்டாலும் முடிந்த வரை தனது சங்கீத வகுப்புகளுக்கும் நேரம் ஒதுக்கிக் கொண்டு போய் வருகிறான். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து சங்கீதத்தைத் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறான். சங்கீத வகுப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

கடந்த ஏழு வருடங்களில் கடும் முயற்சி மற்றும் பயிற்சியினால் இசையில் ஓரளவு நல்ல தேர்ச்சி பெற்று விட்டான் என்று சொல்லலாம். ஒரு சில மேடைக் கச்சேரிகளில் பாட வாய்ப்பும் கிடைத்தது. தனது கனவை நிறைவேற்ற, அதன் அடுத்த நகர்விற்கான முயற்சியில் தான் கோவையில் உள்ள ஆவாஸ் ஸ்டூடியோவில் சென்று பாட அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான். அப்போது தான் திலகராஜன் அவனை நிறுத்திப் பேசினார்.

நினைவலைகளில் மிதந்தபடி காந்திபுரம் வந்து சேர்ந்ததை வாகன ஓசைகளிலிருந்து புரிந்து நிகழ்காலத்திற்கு மீண்டான் மோகன்.

நிகழ்காலத்திற்கு வந்த மோகன் 11 மணிக்குள் ஆவாஸ் ஸ்டுடியோவில்  இருக்க வேண்டும் என்பதை நினைவு கூர்ந்தான். சற்றே வாகன நெரிசல் குறைவதை உணர்ந்த அவன் தனது பைக்கை சிறிது வேகமாக ஓட்டி ஸ்டுடியோ வந்தடைந்தான். கச்சேரிகளில் பாடிய அனுபவம் இருந்தாலும் திரைப்படத்திற்கு பாடுவது இது தான் அவனுக்கு முதல் முறை.

உள்ளே சென்று ரிசப்ஷனில்....”மேடம்! நான் மோகன். இங்கு வெற்றிவேல் சாரைப் பார்க்கணும்”, என்றான்.

“அங்க உட்காருங்க சார். கூப்பிட்றேன்”, என்றாள் அந்தப் பெண்.

மோகன் எதிரில் இருந்த சோஃபாவில் அமர அவன் பக்கத்தில் இன்னும் மூன்று பேர் அமர்ந்திருப்பதைக் கண்டு முகம் வேர்த்தது. எழுந்து அந்த ரிசப்ஷன் பெண்ணிடம், “எக்ஸ்கியூஸ் மீ. வேர் இஸ் த வாஷ்ரூம்?” என்று கேட்டுச் சென்றான். கண்ணாடியைப் பார்த்து, கண்களை மூடி, நன்றாக மூன்று முறை மூச்சு இழுத்து விட்டு தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான். 

“உன்னால் முடியும்டா மோகா.. உன்னால் முடியும்”,  என்று கண்ணாடியைப் பார்த்து தனக்குத் தானே தைரியம் சொல்லி தனது தலை முடியை வாரி விட்டுக் கொண்டு வெளியே வந்து ரிசப்ஷனை நோக்கி நடந்தான். எதிரே வெற்றிவேல் சார் வந்தார். 

“மோகன்! சரியான நேரத்திற்கு வந்து விட்டாய். உள்ளே ஆடிஷன் தொடங்கி விட்டது. தயாராக இரு”, என்று சொல்லி விட்டு ஆடிஷன் ரூமிற்குள் சென்றார்.

மோகனின் சங்கீத வகுப்பில் வெற்றிவேலின் மகள் பயில்கிறாள். வெற்றிவேல் ஒரு வயலின் கலைஞர். பல திரைப்படப் பாடல்களுக்கு அவர் வாசித்திருக்கிறார். தற்போது வளர்ந்து வரும் ஒரு பிரபல இசையமைப்பாளருடன் இசைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த ஆடிஷனுக்குத் தான் மோகனும் வந்திருக்கிறான். 

முன்னர் இருந்த மூவரும் பாடி முடித்து விட்டனர். மோகன் இப்போது பாட வேண்டும். சிறப்பாகப் பாடியும் முடித்தான். அங்கிருந்த அனைவரும் அவனைப் பாராட்டினர். இசையமைப்பாளர் உட்பட. மோகனுக்கு சந்தோஷத்தில்  குதிக்க வேண்டும் போல் இருந்தாலும் இடம் பொருள் உணர்ந்து அவன் அடக்கமாய் இருந்தான். வெற்றிவேலிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். 
 
வெளியே வந்து கைக்கடிகாரத்தை பார்க்க, “அச்சோ! குட்டிமாக்கு ஸ்கூல் விட அரைமணி நேரந்தானே இருக்கு”, என்று பதறியபடி பைக்கை எடுத்து பள்ளிக்கு விரைந்தான். சரியாக நான்கு மணிக்கு பள்ளி மணி ஒலித்தது. சிறிது நேரத்தில் மதியும் வெளியே வந்து, “அப்பா” என்றாள். 

“என்னப்பா, முகத்தில சந்தோஷம் டான்ஸ் ஆடுது. ப்ராஜக்ட் சக்ஸஸா?”, என்றாள். 

“ஆமாம் குட்டிமா. என் கனவு நனவாகிற மாதிரி இருக்கு. நாளைக்குள்ள ரிசல்ட் தெரிஞ்சிரும். சரி, வா போகலாம்”, என்று பைக்கில் ஏறி இருவரும் அங்கிருந்து கிளம்பினர். தினமும் மோகன் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு போகும் வழியில் காந்திபுரத்தில் ஒரு சிற்றுண்டிக் கடையில் சாப்பிடுவது வழக்கம். அன்றும் அதே போல் இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர். போகும் போது இருவரும் அன்றைய நாள் கழிந்த விதம் பற்றி பகிர்ந்து கொண்டனர். 

அபார்ட்மெண்டிற்குள் நுழைந்து பைக்கை நிறுத்தும் போது திலகராஜன் எதிரே வந்தார். “மோகன்! பொண்ண ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வந்துட்டீங்களா..அப்புறம் அந்த மோட்டரக் கொஞ்சம் பாக்குறீங்களா?” என்றார்.

“நாளைக்குக் காலைல பார்க்கறேன் சார்”, என்று கூறி அங்கிருந்து நழுவினான் மோகன்.

இரவு 7 மணிக்கு ரேகா வந்தாள். 

“என்ன ரேகா இன்னிக்கு வேலை ரொம்ப அதிகமா..லேட்டா வந்து இருக்க”,  என்று மோகன் கேட்க. உற்சாகமாக ரேகா, “ஆமாம்”, என்றாள்.

“அம்மா! அப்பா இன்னிக்கு ரொம்ப ஹேப்பி, அந்த மியூசிக் டைரக்டரே அப்பாவைப் பாராட்டினாராம்”, என்றாள் மதி. 

அம்மாவும் மகளும் மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருக்க இந்த இடைவெளியில் மோகன் ரேகாவிற்கு சூடாக காஃபி போட்டுக் கொண்டு வந்தான். காஃபி குடித்துவிட்டு,  “என்னங்க! நானும் ஒரு சந்தோஷமான செய்தி சொல்லணும்” என்றாள் ரேகா.

“எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்குங்க. அதுவும் ஜெர்மனி போகவும் வாய்ப்பு கெடச்சிருக்குங்க”, என்றாள்.

“வாவ்! கங்கிராஜுலேஷன்ஸ்!, என்று மோகன் சொல்ல, “இது நல்ல ஆப்பர்ச்சுனிட்டி”, என்றாள் ரேகா.

“அம்மா, நாம எல்லாரும் போறோமாம்மா? எனக்கு ஆசையா இருக்குமா’ என்றாள் மதி.

ரேகாவுக்கு இந்த விஷயம் எவ்வளவு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது என்பதை உணர்ந்தான் மோகன். சொல்லப் போனால் ரேகா இவ்வளவு சந்தோஷமாக இருப்பது இரண்டு வருடத்திற்குப் பிறகு இப்பொழுது தான். அதற்குள் ரேகா எழுந்து சென்று கிச்சன் வேலைகளைப் பார்க்கத் துவங்கினாள்.

மறுநாள் அவரவர் தங்கள் வேலைகளுக்குக் கிளம்பினர். காலை பத்து மணிக்கு திலகராஜனுக்கு ஃபோன் செய்து, “மோட்டர் பாக்கலாமா சார்”, என்றான் மோகன். 

பின்னர் பார்க்கிங்கில் இருக்கும் மோட்டரின் பழுதைக் கண்டறிந்து சரி செய்தான். “பலே ஆள்பா நீ. எல்லா வேலையும் தெரிஞ்சி வச்சிருக்க”, என்று திலகராஜன் சிலாகிக்க, “சின்ன வயதில் கஷ்டப்பட்டு வளர்ந்ததால இப்படி வீட்டு வேலைகளைக் கத்துக்கிட்டேன் சார்” என்றான் மோகன். 

சுமார் மணி 12 இருக்கும் . மோகனின் அலைபேசி ட்ரிங்... ட்ரிங்... என்றழைக்க, ஃபோனை எடுத்து அழைத்த நபர் யார் என்று கூடப் பார்க்காமல், “ஹலோ!” என்றான் மோகன்.

“நான் வெற்றிவேல் பேசுறேன். உன் வாய்ஸ்தான்பா செலக்ட் பண்ணி இருக்காரு மியூஸிக் டைரக்டரு. கங்கராஜுலேஷன்ஸ்”, என்ற வெற்றிக்கு “தேங்க் யூ சோ மச் சார், உங்களை மாலையில் வந்து பார்க்கிறேன்”, என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

அருகில் இருந்த திலகராஜன், “என்னப்பா...என்ன விஷயம்? ஏதும் மகிழ்ச்சியான செய்தியா?” என்று வினவினார்.

“ஆமாம் சார்”, என்றவன் அவரிடம் திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பகிர்ந்தான். பின் மனைவிக்குக் கிடைத்த பிரமோஷன் பற்றியும் கூறினான்.

“பலே! ரெண்டு பேருக்கும் நல்ல வாய்ப்பு கெடச்சிருக்கு. வாழ்த்துக்கள்பா” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் திலகராஜன். 

மோகன் வீட்டிற்குச் சென்று நேரம் போவதே தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தான். இருவரது கனவும் மெய்ப்பட நல்ல சூழல் உருவாகியுள்ளது. ஆனால் ஒருவர் கனவே மெய்ப்பட சாத்தியம். இதில் யார் விட்டுக் கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். மதியை அழைத்து வரும் நேரம் ஆனதால் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அலுவலகத்தில் இருந்த ரேகா மனதில் ஏதோ இனம் புரியா குழப்பம். தன் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டும் கணவன். நிறைவானதொரு குடும்ப வாழ்க்கை. தன் கனவு நிறைவேறும் தருணத்தில், கணவனின் கனவும் நிறைவேற வாய்ப்பு வந்துள்ளது. என்ன செய்வது? இப்படி இருந்தால் என்னவாகும், அப்படி முடிவு செய்தால் என்னவாகும் என்று தன் மனதில் எழும் கேள்விகளுக்குப் பதில் ஏதும் கூறமுடியாமல் தவித்தாள். அவளுக்கு வேலை ஓடவே இல்லை. மற்றவர்களோடு இயல்பாய் இருக்க முடியவில்லை.

மகள் மதிமலருக்கோ ஜெர்மனி போகவும் ஆசை, அப்பாவைப் பாடகராகப் பார்க்கவும் ஆசை. அம்மா அப்பா இருவரும் என்ன முடிவெடுப்பார்கள், ஆளுக்கு ஒரு திசையிலிருந்து விடுவோமோ என்ற பயமும் வந்தது. இருவரையும் விட்டு, அவளால் இருக்கவே முடியாது. அப்பா மோகனின் சொந்த ஊருக்குப் போனாலும் கூட, தாத்தா பாட்டி இருந்தாலும், அவளுக்கு அப்பா, அம்மா இருவரும் தூங்கும் போது அருகில் இருக்க வேண்டும். இல்லையெனில்  தூக்கம் வரவில்லை என யாரையும் தூங்க விடமாட்டாள்.

மாலை மதிமலரை அழைத்துச் செல்ல முற்படும் போது, மோகனின் முகம் வாடி இருந்ததை வண்டியின் கண்ணாடி காட்டியது. என்ன செய்வதென்று தெரியாமல், குழம்பிப்போய் இருந்தான். உற்சாகத்தைப் பிரயத்தனப்பட்டு வரவழைத்துக்கொண்டு கிளம்பினான். 

மதிமலர் மோகனின் முகத்தை உற்றுப்பார்த்தாள். “என்ன அப்படி பார்க்கிற?” என்று கேட்டு, “வா போகலாம்.. பசிக்குது..” என்று அவளை வேகமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான். எப்போதும் சாப்பிடும் சிற்றுண்டிக் கடையை அடைந்ததும், வழக்கம் போல பள்ளியில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் மதிமலர். செயற்கை உற்சாகம் இன்னும் மோகன் முகத்தில் இருந்தாலும், கேள்விகள் ஏதும் கேட்காமல் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்னப்பா தோணுது?” என்றாள்.

கேள்வி எதைப் பற்றியது என்று தெரிந்தாலும், அதுதானா என்ற குழப்பத்தில் புருவம் சுருக்கிப் பார்த்தான். 

“ரெண்டு பேருக்கும் நல்ல வாய்ப்பு வந்திருக்கு. என்ன பண்ணப் போகிறோம்?” என்று உடைத்துக் கேட்டாள் மதி. 

மகள் இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாளா என்ற கேள்வி தான் எழுந்தது அவனுக்கு. பதில் சொல்லாமல் கேள்வியைத் தவிர்க்கப் புன்னகைத்து, பேச்சை மாற்றினான்.

மாலை ஏழு மணி. அலுலகத்தில் இருந்து வரும்போதே ரேகா சூடாக டாமினோஸ் பீசா வாங்கி வந்தாள். எப்படி ஆரம்பிப்பது என்ன செய்வதென்று குழம்பி இருந்த ரேகா ஒரு வழியாக ஒட்டு மொத்தக் குடும்பமும் ஆசுவாசமாய் இருக்க, தான் எடுத்த முடிவுதான் சரி என்றெண்ணினாள். 

குளித்து உடைமாற்றி இருவர் முன்னும் வந்து நின்றாள். தொலைக்காட்சி முன்பு எல்லாம் தயாராக வைத்திருந்தான் மோகன். சூழ்நிலையைச் சகஜமாக்க, “திரைப்படம் பார்க்கப் போகலாமா”, எனக் கேட்டாள். 

“வேண்டாம்”, என்றாள் மதிமலர். 

மூவரும் செய்திச் சானல்களைப் பார்க்க ஆரம்பித்தனர்.

“அம்மா.. என்ன பண்ணப் போறோம்?” கேள்வியை  இப்போது அம்மாவை நோக்கிக் கேட்டாள் மகள்.

“எதுக்கு மதி?” கேள்வி புரிந்தும் புரியாதது போலக் கேட்டாள்.

“எப்படித்தான் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களோ” என்று சொல்லிவிட்டு  நெற்றியில் அடித்துக் கொண்டாள் மகள். 

“மோகன், என்ன ஓடுது மனசுல?”

“ஒன்னும் இல்ல ரேகா, நீ விசா பிராசஸ் ஆரம்பி”
 
“பாட்டு ரெக்கார்டிங் எப்போ?”
 
“இன்னும் ஒரு மாதம் ஆகுமுன்னு சொன்னாங்க”
  
நீள் மௌனம் வீட்டை அசௌகரியம் ஆக்கியது. ரேகா பேசத் துவங்கினாள். “மோகன்.! உங்களைப் பாடகராகப் பார்க்க நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ஆசைப்படுகிறோம். என் ஆன்சைட் பத்தி யோசிச்சு குழப்பிக்காதீங்க. பார்த்துக்கலாம். மதிமலருக்கு இன்னும் நாலு மாசம் ஸ்கூல்  இருக்கும். ஏப்ரலுக்கு மேல் சென்னை போகலாம். ரெக்கார்டிங் ஸ்டுடியோ  எல்லாம் சென்னையில் அதிகம். வாய்ப்புகள் வரும்போது நாம அங்கே இருப்பது அவசியம். எனவே மீண்டும் சென்னைக்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்”, என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் ரேகா.
 
“என்ன ரேகா சொல்லற? நீ ரொம்ப நாளாகக் காத்திருந்த ஒரு வாய்ப்பு. நாம் எல்லோரும் விரும்பிய ஒரு தருணமும் கூட. மதி அங்கே படிக்கனும்ன்னு நாம ஆசைப்பட்டோம். எனக்காக ஏதும் மாற வேண்டாம். லெட்ஸ் மூவ் அஸ் ஃபேமிலி”. 

“நமக்காகத் தான் எல்லாமே. இங்கே உங்க ஆசை நிறைவேறுச்சா, இல்லை என் விருப்பம் நிறைவேறுச்சா என்பது விசயம் இல்லை. நாம ரெண்டு பேரும் மேல வரலாம். உங்க முதல் வாய்ப்பு நல்லபடியா கிடைக்கட்டும். தொடர் வாய்ப்புகள் வரும் போது அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கலாம். ஆன்சைட் வாய்ப்பு வராமலே போகாது. இட்ஸ் எ மேட்டர் ஆஃப் இயர்ஸ். அவ்வளவு தான். ஏதும் குழப்பிக் கொள்ளாமல் பாட்டில் கவனம் செலுத்துங்க. மேலும், உங்கள் கனவுதான் இனி என் லட்சியம் என்று முன்பே சொல்லி இருந்தேனே. எனவே, நம் இருவரின் கனவும் லட்சியமும் நிறைவேறப் போகுது என்பது தான் உண்மை. அப்புறம், நீங்க பெரிய பாடகர் ஆகி விட்டால் கண்டிப்பாகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்யத்தான் போகிறோம். மதியையும் மேற்படிப்பிற்கு அனுப்பி வைக்க முடியுமே. அப்புறம் என்ன?” என்றாள் தன்னை முன்னிலைப்படுத்தாமல்.

மதிமலர் அம்மாவை வியந்து பார்த்தாள். 

“என்னடி அப்படி பார்க்கிற?” என்று கேட்டு, செல்லமாய் அவள் தலையைத் தட்டினாள். 

மதியோ அப்பாவைப்   பார்த்தாள். அவனது கண்களோ காதல் மனைவி ரேகாவின் மீதே இருந்தது. 

“ஏற்கனவே நிறையச் செய்திட்ட ரேகா..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,  அவன் வாயைத் தன் கைகளால் மூடி மீண்டும் சொன்னாள், “இன்னும் நிறைய இருக்கு”.

மோகன் எழுந்து வந்து கட்டிக் கொண்டான் அவளை. பெற்றோர் இருவரையும் மிகுந்த பெருமையுடன் மகிழ்ச்சி பொங்க நெகிழ்ச்சியுடன் கட்டி அணைத்துக் கொண்டாள் மதி.

(ஈரோடு வாசல் - படைப்பு குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் அன்புமணி, உமா மகேஸ்வரி R,மகேஸ்வரி மதன் ஆகியோர் மூவரும் சேர்ந்து வெளியிட்ட சிறுகதை)

No comments:

Post a Comment