வாழ்க்கை செல்லும் பாதை - ரிதன்யா ஷங்கர்

                                



"வாழ்க்கை எங்கே செல்கிறது?" - இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அனைவரின் மனதில் தோன்றுவது தனிப்பட்ட வாழ்க்கையா அல்லது சமூக வாழ்க்கையா என்பதுதான். வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை என்றும் சமூக வாழ்க்கை என்றும் ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்? தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் செய்யும் சில செயல்கள் சமூக வாழ்க்கையைப் பாதிக்கும். அதேபோல், சமூக வாழ்க்கையில் நாம் செய்யும் சில செயல்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, அதை இரண்டு பிரிவாகப் பிரிக்காமல், ஒன்றாகவே கருத வேண்டும். நமது பண்பாடு, பேச்சு, நாம் நடந்துகொள்ளும் விதம் என அனைத்தும் எப்போதும் ஒருமித்து இருக்க வேண்டும். மனிதர்களிடத்தில் வேறுபாடு காட்டாமல், அனைவரிடத்திலும் சமமாகவே நடந்துகொள்ள வேண்டும்.
இதைப் படிப்போரின் மனதில் "இதைச் சொல்வது எளிது, செய்வது கடினம்" என்ற எண்ணம் தோன்றும் என்பது எனக்குப் புரிகிறது. நாம் சிறு வயதிலிருந்தே நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்றும், தீய செயல்கள் செய்யக் கூடாது என்றும் கற்றுக்கொண்டோம். அதனுடன் ஒரு வாக்கியத்தையும் சேர்த்துக்கொண்டோம்: "நல்ல செயல்களைச் சொல்வது எளிது, ஆனால் அதைக் கடைப்பிடிப்பது கடினம்". இதனால்தான், நல்ல குணமும் தீய குணமும் கலந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

குணமும் எண்ணங்களும் மன அமைதிக்கான வழி
எண்ணங்கள் இரண்டு வகைப்படுகின்றன;  தேவையான எண்ணங்கள் மற்றும் தேவையில்லாத எண்ணங்கள். தேவையான எண்ணங்கள் என்பவை நாம் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயலுக்கு அவசியமான எண்ணங்கள். மற்றவை தேவையில்லாத எண்ணங்கள். ஒருவர் ஒரு காரியத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால், தன் மனதை 5 நிமிடம் அமைதியாக வைத்திருந்தால் வெற்றி நிச்சயம். இந்தக் கூற்று எவ்வளவு பேர் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துள்ளார்கள்? எனவே, நாம் வாழ்க்கை முழுவதும் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, தேவையானவற்றுக்கு மட்டும் நம் மனதைப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

வாழ்வின் நோக்கம் - மகிழ்ச்சி
நாம் இந்தப் பூமியில் கால் வைத்ததற்குக் காரணம் நாம் மகிழ்ச்சியாகவும், பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். நாம் அதை மறந்துவிட்டு, நமது குழந்தை போன்ற மனதில் அன்பையும், மகிழ்ச்சியையும் நிரப்பாமல், கோபத்தையும், எரிச்சலையும், பொறாமையையும் நிரப்பியுள்ளோம். சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3000 எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன. அவற்றில், மகிழ்ச்சியான எண்ணங்களைத் தவிர தேவையில்லாத எண்ணங்களையே மனிதர்கள் அதிகம் யோசிக்கிறார்கள். இவ்வாறு எண்ணினால் எவ்வாறு வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும்?

வாழ்க்கை வாழ்வதற்கே !
"வாழ்க்கை கிடைத்துவிட்டது" என்று கடமைக்காக வாழ்பவர் பலர்;  "கிடைத்ததே இந்த ஒரு வாழ்க்கை" என்று ஒவ்வொரு கணத்தையும் அழகான மலைகளினூடே செல்லும் சாலைப்பயணம் போல ரசித்து, உணர்ந்து வாழ்பவர் வெகுசிலர்.  என்றும் நம் மனதை நேர்மறையான சிந்தனைகளால் நிரப்பி, மலரைப் போன்று சிரித்த முகத்துடன் வாழ்ந்துவிடில், செல்லும் வழியெங்கும் சந்தோஷமே !


No comments:

Post a Comment