கவிஞர் ஈரோடு தமிழன்பன் - நினைவஞ்சலி - கௌசல்யா ஞானேஸ்வரன்

தமிழின் ஒவ்வொரு சொல்லிலும், உணர்விலும், சுவாசத்திலும் கலந்து வாழ்ந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களை மரியாதையுடன் நினைவுகூரும் இந்தத் தருணம், என் வாழ்க்கையில் மறக்கவியலாத நிகழ்வு. தமிழ்ச் சமூகத்திற்கு இவர் தந்த படைப்புகள்  மிகவும் சக்தி வாய்ந்தவை.  ஈரோட்டிற்கும்  பெயரையும் புகழையும் தந்த பன்முக ஆளுமை படைத்த தமிழன்பன் அவர்கள், காலத்தால் நம்மை விட்டு நீங்கினாலும் தமிழ்ச் சொற்களில் கலந்துவிட்டவர். எளிமையான வார்த்தைகளால் சாமானிய மக்களும் தமிழை நேசிக்கவும், ரசிக்கவும் வைத்தவர்.

"காம்புக்கு வேறென்ன கௌரவம் வேண்டும்? தாங்கிக் கொண்டிருக்க ஒரு ரோஜா பூ இருந்தால் போதாதா?” என்று அழகாய் கவி பாடியவர்.

இயற்கையையும், பருவ காலங்களையும் ரசிக்கக் கற்றுத் தந்த கவிஞர் அவர். “குடை பிடித்து கொண்டாட வந்ததல்ல மழைக்காலம்; கதவடைத்து கொண்டாட வந்ததல்ல நிலாக்காலம்,”என்று மழையையும், நிலாவையும் அனுபவித்து கொண்டாடச் சொன்னவர்.

மக்களின் வாழ்வியலில் ஆழமாக ஊறிக்கிடக்கும் வறுமையை, “தாலியின் பெருமை கணவனுக்கு தெரியும்; கணவனை விடவும் மனைவிக்கு தெரியும்; இந்த இருவரை விடவும் மார்வாடிக்கு தெரியும்,”என்று ஒரு வரியிலேயே உணர்த்தியவர்.

புத்தகம் வாசிப்பின் அவசியத்தையும் அவர் இடையறாது வலியுறுத்தினார். “அரிசி, பருப்பு வாங்குவது போல வாரம் ஒரு முறை ஒரு புத்தகம் வாங்க வேண்டாமா?”என்று கேள்வி கேட்டவர். "விளக்கேற்றி புத்தகம் படிப்பது, வெளிச்சத்தைக் கொண்டு வெளிச்சத்தைப் பிடிப்பது போல!”என்றும், “பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோராவது புத்தகமாகப் படிக்கப்படுவீர்கள்” என்றும் வாசிப்பை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற சொன்னவர்.

அவரது கவிதைகள் கேள்விகளாகவும், வினாக்களாகவும்  தொடர்ந்து சிந்திக்க வைக்கும்.

“ரோஜாப்பூ உடம்புக்கு நோய் என்றால், காத்து நின்ற முட்களின் மனநிலை என்னவாக இருக்கும்?”
“வானத்தோடு பேசுவதற்கு மரம், பூமியில் இருந்து எதை கற்றுக்கொள்கிறது?”என்று புதுமையான சிந்தனைகளை முன்வைத்தவர்.

தமிழுக்கு உலகக் கவிதைகளையும், உலகிற்கு தமிழ் கவிதைகளையும் அறிமுகப்படுத்தியவர் அவர். “என் கவிதையில் நனைந்த மழைக்கு வருத்தம் — என் கையில் குடை,”என்று சொல்லும் போது, கவிஞரின் மென்மையும், மனிதநேயமும் ஒருசேர வெளிப்படுகிறது.

வயது என்பது வெறும் எண்ணிக்கை என்பதில் அவர் உறுதியானவர். “முகத்தின் சுருக்கத்தில் நீ படித்த புத்தகங்களின் வரிகள் இருக்கட்டும்,” என்று கூறி, “முதுமை என்பது வாழ்க்கையின் ஓரம் அல்ல; வாழ்க்கையின் சாரம். மரணத்தின் மார்பில் பால் குடிக்கும் பருவம்  முதுமை.” என்று முதுமையையும் அழகாக வர்ணித்தவர்.

“வாழ்க்கை எனக்குப் பின்னரும் தொடரும். அதன் தொடர்ச்சிக்கு என் பண்புகளும், படைப்புகளும் உதவும். கவிதையே என் அடையாளம்,” என்று தனது வாழ்க்கையின் அர்த்தத்தை சுருக்கமாகச் சொன்னவர்.

தோல்வி கண்டு துவண்டு விடாமல் இருக்க  தாயின் பரிவோடு அவர் சொன்ன வரிகள் ,“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டு சொன்னது பூமி ‘ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ!’”என்று  மீண்டு எழுவதற்கு உற்சாகப்படுத்தியவர்.

கவிதை குறித்து, அவர் கூறியது "கவிதை என்றால் என்ன என்று கேட்காத போது தெரியும்; கேட்டுவிட்டால் தெரிவது கடினம்,”என்று சொல்லி, எதுகை மோனை தெரியாத தாய்மார்களின் தாலாட்டுக்கும் கவிதை சொன்னவர். “எதற்கப்பா எதுகை மோனை மின்னலை பிடித்து வைக்கவா சட்டி பானை?” என்று கவிதையை இயல்பாக்கியவர்.

விண்மீன்கள்,  வானம் என அவரது கற்பனைகள் எண்ணிலடங்காதவை. குறிப்பாக எனக்கு மிக பிடித்த மீன் கவிதைகளில், கவிஞர் ஈரோடு தமிழன்பன் இயற்கையின் நுணுக்கங்களையும் மனித உணர்வுகளையும்  ஒன்றாக்கி விண்மீன்களை கனவுகளாக வும், சிந்தனைகளாகவும், கவிதைபடுத்தி இருப்பது ரசிக்க தகுந்தது. அதில் சில வரிகள்:

“வானம் எழுதிய காதல் வரிகளின் அச்சுக் குலைந்த எழுத்துச் சிதறல், விண்மீன்களாம்"

”மேக மெத்தை மேல் மின்னும் கன்னிகள்" என்று நட்சத்திரத்தை வர்ணிப்பதும் அழகு.

”நிலா விளக்கருகில் படிக்கும் வான வகுப்பு மாணவர்கள்"  என்றும்

"இருட்டுப் பைக்குள் எடுத்துப் போடா சில்லறை செம்பொற்காசுகள்" என்றும்

"பகலில் உருண்ட கதிரோன் உகுத்துச் சென்ற வியர்வைத் துளிகள் விண்மீன்கள்" என்று வர்ணிப்பது என்ன ஒரு அழகான கற்பனை!

"பரந்த வெளியில் நடனம் புரியும் இரவு மயிலின் தோகை விழிகள்"  

"பகலோன் தழுவிய விண்ணின் உடலில் நகக்குறி செய்த ஒளிவடுக்கள்"

"மெருகிட்டு மேகம் துடைத்து வைக்கும் வானக்கடையின் வைரத் துண்டுகள்" 

"இரவு பெண்ணால் நிலா பானையில் கடைந்த தயிரின் சிதறல் துளிகள்" என்றெல்லாம்
அவரது கற்பனைகள் வானத்தில் மின்னும் விண்மீன்கள் போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கின்றன.

இத்தகைய அற்புதமான படைப்புகளையும், ஆழமான சிந்தனைகளையும் தமிழுக்கு அளித்த சாதனையாளர், தமிழின் பெருமைமிகுந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன். அவரது கவிதை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. ரசிக்கவும், வியக்கவும் வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

No comments:

Post a Comment