ஆதி தேவி - ராதா மனோகரன், லோகேஸ்வரி & கோதை

 


கதிரவன் பரவலாகப் பிரகாசிக்கத் துடித்துக் கொண்டிருந்த  மிதமான காலை வேளை. தேவியின் நீண்ட கூந்தலின் இறுதியில் இருந்த முடிச்சின் வழியே நீர்த்திவலைகள் சொட்டுச் சொட்டாக  அவளது பூப் போட்ட  இரவிக்கையில் விழுந்து நழுவிக் கொண்டிருந்தன. 

முதன் முதலாக திருவிழாப் பெருவெளியைப் பார்க்கும் குழந்தையைப் போல் அந்தப் பூங்காவில் மரங்களையும், பூக்களையும், செடிகளையும் இரசித்துக் கொண்டே நடந்தாள்  அவள். கூண்டை விட்டு விடுபட்டது போல் இருந்தது 42 வயது தேவிக்கு.

தூரத்தில் ஒரு மரத்தின் அடியில் கல் இருக்கையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த அவன் மீது அவள் பார்வை படிந்தது. நரையும் கருமையும் கலந்த சீராக்கப்பட்ட தாடி, கண் கண்ணாடி, சந்தன நிற பைஜாமாவில் ஒரு தீர்க்கமான உருவம்.

அவள் கடந்து செல்வதைக் கவனிக்காமல் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான் அவன். இரண்டாம் நாள் அவள் கடந்து செல்கையில்  அவளது புன்னகைக்குப் பதில் புன்னகை புரிந்தான் அவன். இப்படியாக நான்காம் நாள், ஐந்தாம் நாள் என சினேகப் புன்னகை  சினேகிதமாக மலர்ந்தது. 

தினமும் காலை பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டுச் செல்வது அவர்களின் நடைப் பயணத்தின் நோக்கமானது. அவர்கள் பேச்சு மெதுவாக ஆழமடையத் தொடங்கியது.
 அவனிடம் பேசும் பொழுது தன்னை மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் தேவி.

 "பேசப் பேச  உங்களிடம் ஏற்கனவே பழகிய உணர்வு ஏற்படுகிறது ஆதி" என்றாள் தேவி.  மெதுவாகப் புன்னகைத்து விடை பெற்றான் ஆதி.

அன்றைக்குப் பகலவன் முழுவதுமாக வெளிவராமல் மேகமூட்டத்துடன் இருந்தது வானம். பூங்காவில் தேவியின் கையில் ஒரு டைரியைக் கொடுத்தான் ஆதி. அதை விரித்துப்  பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். சற்றே ஓரம் மடங்கிய  புகைப்படத்தில் இதேபோன்று ஏதோ ஒரு பூங்காவில் ஆதி அமர்ந்திருக்க அவன் தோள்கள் மீது கைகளைப் போட்டு தலையைச் சாய்த்து பூச்செண்டு போல் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் தேவி.
மழை லேசாகத் தூறல் போட்டது.

அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் மழையில் நனைந்தவாறே ஆதியின் கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் ஏதோ ஒன்றை அறிந்தவளாய், அது என்னவென்று சொல்லத் தெரியாதவளாய்.  அப்படியான ஒரு நிலை தேவியிடம். 

"உன் மனதில் இப்பொழுது ஆயிரமாயிரம் கேள்விகள் எழும். அது அனைத்திற்கும் பதில் இந்த டைரியில் உள்ளது. இதை உன்னோடு எடுத்துச் செல். நாளை மாலை இதே வேளையில் இங்கு சந்திப்போம்" என்று கூறிச் சென்று விட்டான். மறுவார்த்தை ஏதும் பேசாமல் நின்ற தேவி, ஆதி கண்களிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றவள் குழப்பத்தோடு வீடு திரும்பினாள்.  

அன்று இரவு உறக்கம் வராமல் தவித்தாள். 'நான் எப்படி அந்தப் புகைப்படத்தில்? அதுவும் ஆதியோடு?!...இது எப்படி நடந்திருக்கும்?' வேறு ஏதேதோ கேள்வி மனதில் எழ அந்த டைரியை வாசிக்கத் துவங்கினாள். 

"நான் நிச்சயம் அறிவேன். இது உனக்குப் புதிய அனுபவமாகத்தான் இருக்கப் போகிறது. உன் கதையை நீயே வாசிக்கப் போகிறாய். உன் பெயர் தேவி. அதை நீ அறிந்திருப்பாய். ஆதியாகிய நான் உன்னுடைய  காதலன்.  இப்படியாக அந்த டைரியில் இருந்ததை வாசிக்கத் துவங்கினாள்.

ஆனால், தேவிக்கு இதைப் படிக்கும் பொழுது முன்னதாக அவனைக் காதலித்ததாக எந்த உணர்வும் அவளுக்குத் தோன்றவில்லை. மீண்டும் பெரிய மனக் குழப்பத்தோடு அந்த டைரியை படிக்கத்  துவங்கினாள். இரவு முழுக்க அந்த டைரியை படித்து முடித்தாள். அப்படியே உறங்கிப் போனாள்.

ஜன்னல் வழியாகக் கதிரவன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருப்பதை யாரோ தன்னை பார்ப்பதாக உணர்ந்த அவள் திடுக்கென எழுந்தாள். மீண்டும் அந்த டைரியைக் கையில் எடுத்தாள். 'இதில் உள்ள அனைத்தும் உண்மையா?! நான் ஆதியின் மனைவியா?! நாங்கள் இவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தோமா?! ஆனால், ஏன் இதில் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை?' ஆனால் ஆதியை எப்பொழுதோ பார்த்தது போலான உணர்வு மட்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. 

இப்படி அவளே கேள்விகளையும் கேட்டுப் பதில்களையும் கூறி மீண்டும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தாள். 

இவை அனைத்திற்கும் விடை ஆதியிடம்தான் உள்ளது. இன்று மாலை நிச்சயம் அவனைச் சந்தித்து தன் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்து கொள்ள வேண்டும் என மாலை வரை காத்திருந்தாள். ஆனால் அன்று மாலை வருவதாகக் கூறியிருந்த ஆதி வரவே இல்லை. காத்திருந்து காத்திருந்து பிறகு ஏமாற்றத்தோடு அங்கிருந்து புறப்பட்டாள்.

ஒரு வாரம் கடந்தது. அவளால் ஆதியைச் சந்திக்கவே முடியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அந்த எண் உபயோகத்தில் இல்லை.

எழும் கேள்விகள் அத்தனைக்கும் விடை தெரியாமல் குழம்பிப் போனாள். எப்படியாவது இவை அத்தனைக்கும் விடை தெரிந்தாக வேண்டும் என்று அந்த டைரியை முழுவதுமாகப் புரட்டிப் பார்த்தாள். அதில் ஆதியின் விலாசம் இருந்தது. தன் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்ததாய் பெரும் உற்சாகத்தோடு அந்த விலாசத்தை தேடிப் பயணித்தாள்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் அந்த விலாசம் இருந்தது. இவள் இருப்பதோ சென்னையில். அவளுக்கு தொலைவு குறித்தோ, நேரம் குறித்தோ எந்தச் சிந்தனையும் இல்லை. எப்படியாவது விடை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமே இருந்தது. ஒரு வழியாக அந்த விலாசத்தை அடைந்தாள்.  அப்பொழுது நேரம் சரியாக இரவு 9 மணி 30 நிமிடம். கதவைத் தட்டக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இருப்பினும் விடை தெரிந்தாக வேண்டுமே, கதவைத் தட்டினாள். பாதிமுகம் தீக்காயம்பட்டு சுருங்கிய நிலையில் இன்னும் ஆற வேண்டிய பாக்கியுடன் இருந்தது. அந்தக் காயங்கள் முகத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளம் பெண் கதவை திறந்தள். அந்த நேரத்தில் அவளை அப்படி பார்த்ததும் பயத்தில் கண்களை விரித்தபடியே எதற்கு வந்தோம், என்ன பேச வந்தோம், எதற்குக் கதவைத் தட்டினோம் இப்படி எதுவுமே ஞாபகத்தில் இல்லாமல் அவளது முகத்தையே உற்றுப் பார்த்தபடி நின்றாள். எதிரில் நின்ற அந்தப் பெண்ணோ ஏதும் பேசாதவளாய் இவள் வருவாள் என ஏற்கனவே அறிந்தவளாய் அவளிடம் ஒரு துண்டுச் சீட்டை மட்டும் கொடுத்துப் பிறகு கதவைச் சாத்திக் கொண்டாள்.

அதில் ஆதியின் பெயர் குறிப்பிட்டு ஒரு விலாசம் இருந்தது. கடற்கரையிலிருந்து  ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய கிராமம் அந்த விலாசம். 

ஏற்கனவே நேரம் பத்து மணியைக் கடந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல்  நின்று கொண்டிருந்தாள். அந்த நேரம் அவளுக்காகவே வந்தது போல அங்கு  ஒரு ஆட்டோ வந்து நின்றது. அவரிடம் சென்று, "சினேகவல்லிபுரம் போகணும்" என்றாள். 

எந்தக் கேள்வியும் கேட்காமல், "ஏறுங்கம்மா" என்ற ஒற்றைப் பதிலுடன் ஆட்டோவைக் கிளப்பினான் அந்த ஆட்டோ டிரைவர். 

"அண்ணா, இந்த அட்ரஸ்"... என்ற இவளது குரல் காதில் விழுந்தும் விழாதவனாய் அமைதியாய் இருந்தான். சிறிது நேரம் கழித்து, "உங்கள சரியான இடத்துக்கு நான் கூட்டிட்டு போயிருவேன், வாங்க" என்று விலாசத்தை ஏற்கனவே அறிந்தவனாய் சினேகவல்லிபுரத்திற்கு அவளைக் கூட்டிச் சென்றான். 

ஒரு வீட்டிற்குச் சற்றுத் தொலைவிலேயே ஆட்டோவை நிறுத்திவிட்டு,  "ஆதி ஐயா உங்களுக்காக அங்கு காத்திருக்காரு, நீங்க போங்க" என்று சொல்லிவிட்டு காசு கூட ஏதும் வாங்காமல் ஆட்டோவைத்  திருப்பிக் கொண்டு கிளம்பி விட்டான். ஏற்கனவே மனதில் பல கேள்விகளுடன் இருந்த அவளுக்கு இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் எழும்பிக் கொண்டே இருந்தன. 

பெரிய பயமும் பதற்றமும் மனதில் தொற்றிக்கொள்ள இந்த இருட்டு அவளை இன்னும் பயமுறுத்தியது. அந்த வீட்டை நெருங்கச் சென்றவளை எதிர்பாராத விதமாய் இருட்டில் இருந்து ஏதோ ஒரு கை சட்டென இழுத்துக் கொண்டது.

"நான் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது  பதில் தேடாதே. என்னை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், உன்னை நான் நன்றாக அறிவேன். உனக்கு எச்சரிக்கை விடுக்கவே இங்கு வந்தேன். நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பி போய்விடு. நீ எதைத் தெரிந்து கொள்ள நினைக்கிறாயோ அது அவ்வளவு அழகியதல்ல".

"மீண்டு வந்த நீ மீண்டும் வந்திருப்பது எங்கே தெரியுமா? மீள முடியாத  பெரும் துன்பத்தைத் தேடி!""

இப்படியாக அவள் காதுகளுக்குள் உரக்கக் கூறிவிட்டு அந்தக் கை அவளை விடுத்து அங்கிருந்து காணாமல் போனது. 

தூரத்தில் அந்த வீட்டின் கதவு திறப்பது தெரிந்தது. உள்ளிருந்து வெளியே வந்த ஆதி மிகச் சாதாரணமாக "வா தேவி" என அழைத்தான்.

மந்திரம் போல் அழைத்த அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டவளாக கால்களை அந்த வீட்டை நோக்கி நகர்த்தினாள் தேவி. நான்கைந்தடிகள் வைத்திருப்பாள். வலிய கரம் ஒன்று அவள் வாயைப் பொத்தியது. மிரண்ட தேவியின் உடல் முழுவதும் அந்த முரட்டுப் பிடிக்குள் சிக்கியது. ஏதோ ஒரு ஒவ்வாத வாசனை அவள் நினைவை இழக்கச் செய்தது. 

மிகவும் சிரமப்பட்டு இமைகளை விரித்த தேவியின் பார்வையில் எழுதி விவரிக்க இயலாத கொடூரமான இடமும் பலிபீடமும் மங்கலாகத் தெரிந்தன. எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் கால்கள் தள்ளாடின.‌ சற்றே அலங்கோலமான‌ ஆடை அவளுள் பெருங்கவலையை உண்டு பண்ணியது. சுற்றிச் சுழன்ற கண்களில் பளபளவென்று  கூர்மையான நுனியுடன் கூடிய மிகப் பெரிய வாளை ஏந்தி, ஒரே வீச்சில் தலை வேறு முண்டம் வேறாக வெட்டிச் சாய்க்கும் முரட்டு உருவம் இருட்டின் நிறத்தில் நின்று அச்சுறுத்தியது.

சூழ்நிலையின் தீவிரம் புரியத் தொடங்கியபோது மீண்ட நினைவு தப்பத் துவங்கியது. அந்த நிலையிலேயே தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட அவளின் தலை பலிபீடத்தில் பொருத்தப்பட்டது. ஏதேதோ சப்தங்கள், கெக்கலிப்புகள், வினோதமான ஒலிகள் தேவியின் காதில் மோதியது. ஓங்கிய வாள் 'ஹோ' வென்ற சத்தத்துடன் அவளின் கழுத்தில் இறங்கியது.

'ஐயோ! அம்மா!' என்று அலறியபடி கட்டிலிலிருந்து உருண்டு விழுந்த தேவியின் ஆடைகள் வியர்வை வெள்ளத்தில் குளித்திருந்தன. 

தேவியின் அலறல் சத்தம் கேட்டு அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த தேவியின் வேலைக்காரம்மா அஞ்சலை பதறியபடி ஓடி வந்தார். கீழே விழுந்து கிடந்த தேவியை வாரி அணைத்து, பதற்றம் குறையாமல் "என்னம்மா, என்ன ஆச்சு? கனாகினா கண்டியா?" என்று கேட்டபடி முதுகைத் தடவிக் கொடுத்தார்.

நடுங்கிக் கொண்டிருந்த தேவியின் மனமும் உடலும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட நேரம் எடுத்துக் கொண்டன. இயல்பு நிலைக்குத் திரும்பிய அவள், தான் கண்ட கனவையும், ஆதியுடனான சந்திப்பையும் பற்றி அவரிடம் கூறினாள். 

"என்ன?! ஆதியா?!... இங்க வந்திருந்தாரா?! என்னம்மா சொல்ற?" என்று இன்பம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்ட அவரை ஆச்சரியத்துடன் ஏறிட்டு நோக்கினாள்.

"அம்மா, ஆதியை ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா?" திகைப்புடன் கேட்டாள்.

" ம்ம்... தெரியும்மா. ஆதி உன்னோட கணவர்" என்று அமைதியாகக் கூறினார்.

"என்ன சொல்றீங்க? ஆதி... ஆதி... ஆதி என்னோட கணவரா?" என்று ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகக் கேட்ட தேவி, "தயவுசெஞ்சு என்ன நடந்துதுன்னு விளக்கமா சொல்லுங்க, எனக்கு ஒண்ணுமே புரியல" என்று கதறினாள்.

"சொல்றேம்மா சொல்றேன். உனக்கும் ஆதிக்கும் கல்யாணமாகி ஒரு வயசுல ஒரு பெண் குழந்தையும் இருந்துது. உங்க வாழ்க்கையும் நல்லா மகிழ்ச்சியாப் போய்ட்டிருந்துது. 2004 ல வந்த சுனாமி உன்னோட வாழ்க்கையையே பொரட்டிப் போட்ருச்சு. 

நீ, ஆதி, கொழந்த, உன்னோட அம்மா எல்லாரும் சுனாமி வந்த அன்னிக்கு பூம்புகார் போயிருந்தீங்க. களிப்பும் கொண்டாட்டமுமா நீங்க இருந்த நேரத்துல திடீர்னு எதிர்பாராம வந்த ஆழிப் பேரலைல சிக்கித் திணறின கூட்டத்துல நீங்களும் தத்தளிச்சிங்க. கோரத்தாண்டவம் ஆடன ஆழிப் பேரலை உங்க எல்லாரையும் திக்குக்கு ஒருத்தராத் தூக்கி வீசிருச்சு. அலை ஆடி அடங்கனப்பறம் கரையொதுங்கிக் கெடந்தவங்கள ஊருக்குள்ள கொண்டு வந்து சேத்தாங்க. மீனவக் குடும்பத்தச் சேந்த நானும் அங்க இருந்தேன். நீயும் உங்கம்மாவும் உயிர் பொழச்சதே பெரிய விஷயமா இருந்துது. உங்க ரெண்டு பேரையும் என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். 

உன் கொழந்தையும் ஆதியும் என்ன ஆனாங்கன்னே தெரியல. அந்த அதிர்ச்சில உனக்கு நினைவு தப்பிப் போச்சு. திரும்ப நினைவு வந்தும் யாரையும் உனக்குத் தெரியல. ஓரளவு குணமான உன்னோட அம்மா, என்னையும் கூட்டிக்கிட்டு உங்க ஊருக்கே வந்துட்டாங்க. அப்பத்தான் உன்னப் பத்தின எல்லா விஷயங்களையும் எங்கிட்ட சொன்னாங்க. உன்ன நெனச்சு நெனச்சே படுத்த படுக்கையா ஆய்ட்டாங்க. அவங்க இறக்கற தருவாயில நீங்கதான் இனி இவளுக்கு எல்லாம்னு சொல்லி உன்னைய எங்கிட்ட ஒப்படைச்சாங்க. அனாதையான எனக்கும் உறவா நீ வாய்ச்ச" என்று சொல்லி கேவிக்கேவி அழுதார்.

என்ன சொல்வது, செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் இருந்த தேவி அப்படியே உறங்கியும் விட்டாள்.

மறுநாள் காலை மணி ஒன்பது. வீடு முழுவதும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் மணக்க, காஃபியுடன் வந்து எழுப்பினார் அஞ்சலை. "எந்திரிச்சு குளிச்சுட்டு வாம்மா சாப்பிடலாம்" என்றார்.

குளித்து முடித்து உடை மாற்றி, பொட்டிட்டுப் பூ வைத்து, முன்னறைக்கு வந்தவள் ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்றாள். அறையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் 21 வயது மதிக்கத்தக்க அழகும் அறிவும் ஒருங்கே மிளிரும் இளம் பெண்ணும், அவள் அருகில் ஆதியும் அமர்ந்திருந்தனர்.  இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். வார்த்தைகள் ஊமையாகிப் போயின. பேரமைதி மௌனம் காத்தது. அங்கே வந்த அஞ்சலையின் சிரிப்பில் பொதிந்து கிடந்தன ஆயிரம் அர்த்தங்கள். தேவியின் கண்களில் நீரும் நன்றியும் வழிந்தன. தன் பெண்ணை நெருங்கிச் சென்று அணைத்து நெற்றியில் இதழிட, அவள் கரம் கோர்த்தான் ஆதி. 

"வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் 
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு 
உருண்டையும் உருளுதடி"

தூரத்தில் 'உன்னி கிருஷ்ணன்'  பாடிக் கொண்டிருந்தார்.

(ஈரோடு வாசல் - படைப்பு குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் ராதா மனோகரன், லோகேஸ்வரி & கோதை ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)

No comments:

Post a Comment