நூறு ரூபாய் - தாரணி தேவி


தாயி லட்சுமி, நேரம் ஆச்சு பாரு. இப்போ புறப்பட்டா தானே நேரத்துக்கு போக முடியும் என்ற வெங்கடேஷின் அன்பு அழைப்புக்கு, "இதோ வந்துடனுங்க மச்சான்" என்று காதலோடு, பிள்ளையை ஒரு கையிலும் கூடையை மறு கையிலும் எடுத்துக் கொண்டு வீட்டின் வாசல் கதவின் முன் வந்து நின்றாள் லட்சுமி.

மச்சான், இன்னிக்கு வேலைக்கு வரலனு முதலாளிக்கிட்ட சொன்னீங்களா? என்ற லட்சுமியைப் பார்த்துத், "தாயி, பொழுது கிளம்புனதும் போய்ச் சொல்லிவிட்டு, இந்த மாத சம்பளம் இருநூறு வாங்கிட்டு வந்தேன். நூறு ரூபாயை பொண்ணு படிப்புக்கான சேமிப்பில் போட்டுட்டேன், மீதியை நம்ம செலவுக்கு வச்சிருக்கேன்" என்று முழு விவரத்தையும் சொல்லி முடித்தான்.

"கதவ நல்லா பூட்டு தாயி. வாரதுக்கு பொழுது ஆயிடும்" என்று சொல்லிக்கொண்டே தனது மகள் பொன்னியை வாங்கி, மிதிவண்டியின் முன்னால் அமர வைத்து விட்டு லட்சுமியை பின்னால் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான் வெங்கடேஷ்.

திருமணமாகி இன்றுடன் எட்டு வருடங்கள் ஆகிறது. இருந்தும் பாசத்திற்கு பஞ்சமில்லாத வாழ்க்கை. "கிறுக்குப்பய, பொண்டாட்டி முந்தானையில மயங்கிக் கிடக்கானு ஊரே கேலி செய்தாலும், என் தாயி அவ" என்று விட்டுக் கொடுக்காமல் மனைவிக்கு மகுடம் சூட்டும் பெரும் காதலன் அவன்.

"மச்சான், கொஞ்சம் வெரசலா மிதீங்க. வெயில் வந்தா புள்ள கிறங்கிப் போயிடும்" என்றாள் லட்சுமி. "சரி தாயி" என்று வேகத்தை அதிகப்படுத்தினான் வெங்கடேஷ். சரியாக காலை பூஜைக்குக் கோவிலை அடைந்தனர்.

தான் கொண்டு வந்த பூக்கூடையை எடுத்துக் கொண்டு, தன் மகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கோவில்  உள்ளே சென்றனர். பொன்னிக்கு ஏழு வயது. அங்கு இருந்த ராட்டினதைப் பார்த்ததும் விளையாட வேண்டும் என்று தன் அப்பாவிடம் சொன்னாள்.

"சரி தங்கம், சாமி கும்பிட்டு வந்து விளையாடலாம்" என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றான். திருமண நாளிற்காக தன் மனைவிக்கும், மகளுக்கும் புதுத் துணி வாங்கிக் கொடுக்க வேண்டும், நல்ல ஹோட்டலில் மதிய உணவு, லட்சுமிக்கு மெட்டி என்று மனதிற்குள் பல கணக்குகளைப் போட்டபடி முன் சென்றான். லட்சுமி பின் தொடர்ந்தாள்.

"மச்சான், எனக்குப் பச்சை கலர் ரிப்பன் வாங்கித் தாங்க" என்று கேட்ட லட்சுமியை பார்த்துச் சிரித்துக்கொண்டே கோவிலின் மூலவர் சன்னதியை அடைந்தனர்.

கூட்டம் நிரம்பி வழிந்தது. லட்சுமி பெண்கள் வரிசையில் நின்று கொண்டாள். அவளுக்கு எதிரில், ஆண்கள் வரிசையில் மகளுடன் வெங்கடேஷ் நின்றான். பால், தயிர், இளனி என்று மூலவரை அபிஷேகத்தால் குளிர வைத்து, திருநீறு, சந்தனம், மஞ்சள் பூசி மனம் மகிழ வைத்து, தாமரை மலர்களால் மாலை இட்டு, தங்கம், வெள்ளி என்று அகம் முழுதும் நிரப்பி ஒப்பனை செய்து, அலங்காரம், ஆரத்தி என்ன அனைத்தும் சிறப்பாக முடித்து, அர்ச்சகர் தீபாராதனைத் தட்டுடன் வெளியே வந்தார்.

கூட்ட நெரிசலில் திருநீறு, குங்குமம் வாங்க வரிசையில் நின்ற பக்தர்களை ஒரு நோட்டம் விட்டபின், பிரசாதம் கொடுக்க ஆரம்பித்தார். தட்டில் காணிக்கை விழுந்தால், பூ, பழம், திருநீறு என்று அள்ளி வைத்தார். தட்சணை போடாதவர் கையில் திருநீறை மட்டும் கில்லி வைத்தார்.

லட்சுமியிடம் வந்தது தீபாராதனைத் தட்டு. அவள் ஒரு ரூபாய் காணிக்கையை போட, அர்ச்சகருக்கு முகம் முப்பது அடி இழுத்துக் கொண்டது.

"இந்தாமா, இந்த ஒத்த ரூபாய் எல்லாம் அரசாங்கம் கூடிய சீக்கிரம் தடை பண்ணப் போகுது, இன்னும் இதையே வெச்சுட்டு வரீங்களே!" என்று வசை பாடிக்கொண்டே திருநீறை எடுத்து வீசாத குறையாய் கையில் போட்டு விட்டு முனுமுனுத்துக் கொண்டே அடுத்து நகர்ந்தார்.

ஒவ்வொருவராகச் சென்று வெங்கடேஷிடம் தட்டை நீட்டினார். அவன் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு 50 ரூபாய் தாள், இரு 10 ரூபாய் தாள், ஒரு 20 ரூபாய் தாள், இரண்டு 5 ரூபாய் நாணயம் என எடுத்துத் தட்டை நிரப்பினான்.

"இந்த மனுசனுக்கு கிறுக்குப் புடிச்சுப் போச்சு! இருந்த 100 ரூபாயையும் இப்படி கொடுக்கிறார்" என்று லட்சுமி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஐயருக்கு சிரிக்கத் தெரியும் என்பதே அப்பொழுதுதான் தெரிந்தது.

"அண்ணா, ஷேமமா இருங்கோ! இந்தாங்கோ!" என்று ஒரு ரோஜா மாலையை எடுத்து நீட்ட, "வெங்கடேஷ், லட்சுமியை காட்டி, என் குல சாமிட்ட கொடுத்திடுங்க ஐயரே" என்று சொல்ல, அர்ச்சகரின் முகம் வெளுத்துப் போனது.எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டு கோவிலின் வெளியே வந்தாள் லட்சுமி. எதுவும் பேசவில்லை, வெங்கடேஷிடம் எதுவும் கேட்கவுமில்லை. அவளுக்குப் புரியாதா என்ன அவனின் மனதை?

அவளின் அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத காதல் கணவன். அவளும் சளைத்தவள் அல்ல. தனது முன்தானையில் முடிந்து வைத்த 5 ரூபாயை எடுத்து மகளிடம் கொடுத்து ராட்டினத்திற்கு அனுப்பி வைத்தாள்.

"அய்யோ, மச்சான்! மறந்தே போய்விட்டேன். போன வாரம் சந்தையில்தான் பச்சை ரிப்பன் வாங்கிட்டு வந்தேன்" என்று சொல்லி, "வெயில் அதிகம் ஆகுது, வாங்க போகலாம்" என்று அவனை பேச விடாமல் அழைத்துச் சென்றாள்.

அவசரப்பட்டு பணத்தைத் தூக்கி கொடுத்துவிட்டோம் என்று அவன் சற்றும் எண்ணவில்லை.

"ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதத்திற்கு கிடைக்கும் மதிப்பு, இரத்தமும் சதையும் உள்ள மனிதனுக்கு இல்லையே?" என்ற ஆதங்கம் அவனுள் பற்றி கொண்டது.

தன் ஆசைகளை இழந்து, தன் மனைவியின் அவமானத்தை துடைக்கும் நிலை, அவன் மனதை கூர்வாளால் துளைப்பது போல் இருந்தது.

"கடவுளின் கருணை வேண்டும் என்றாலும், கப்பம் கட்ட வேண்டி இருக்கிறது. காணிக்கைக்காக கடவுளையே விற்கும் மனிதர்கள் மத்தியில், மனிதத்திற்கான மரியாதையை தேடுவது தவறுதான்" என்று அவனுக்கே சமாதானம் சொல்லிக்கொண்டு வீடு திரும்பினான், தன் மனைவி மகளுடன்.

"மச்சான்..." என்ற லட்சுமியின் சத்தம் கேட்டு உறக்கத்தில் இருந்து எழுந்தான் வெங்கடேஷ்.

"நேரம் ஆகுது, கிளம்புங்க! பொன்னி ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கோவிலுக்கு வந்திடுவா. டிரைவர் வந்துட்டாரு. நீங்க ரெடி ஆனதும் கிளம்பிடலாம்" என்று அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லிவிட்டு, சமையல் அறைக்குள் சென்றாள்.

அச்சம்பவம் நடந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தும் திருமணநாள் அன்று‌ அதை அவன் நினைக்காமல் இருந்ததில்லை. அதுவே அவனுள் வெறியாய் மாறி ஓர் நல்ல நிலைக்கு வர வித்திட்டது. இன்று அவனிடத்தில் தன் தேவைக்கேற்ப அனைத்தும் உள்ளது. பொன்னியும் அரசு மருத்துவமனையில் பொது நல மருத்துவர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது, இன்று வரை ஒரு முறை கூட‌ இருவரும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டதே இல்லை. இருவருக்கும் புரிதல் இருந்தது. 

காதலும், புரிதலும் உறவின் அடித்தளம்; அதில் கணக்குகள் இல்லை, கேள்விகளும் இல்லை. என்றும் அவளுக்காக இவனும்‌, அவனுக்காக இவளும்....

No comments:

Post a Comment