(பகுதி 3) பிளாஸ்டிக் நெருக்கடி: மறுசுழற்சிக்கு அப்பால் ஒரு ஆழமான பார்வை
நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. உணவுப் பொட்டலங்கள் முதல் குடிநீர் பாட்டில்கள் வரை, அதன் வசதியும் குறைந்த விலையும் நம்மை ஈர்க்கின்றன. ஆனால், இந்த வசதியின் பின்னால், ஒரு இருண்ட உண்மை மறைந்துள்ளது, அது நமது சுற்றுச்சூழலையும், உடல்நலத்தையும், எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது. பிளாஸ்டிக் நெருக்கடி இன்று உலகளவில் ஒரு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதை எதிர்கொள்ள, மறுசுழற்சி மட்டுமல்லாது, அறிவார்ந்த பயன்பாடு, மாற்று வழிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இந்தப் பயணத்தில், நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவும் ஒரு பசுமையான நாளையை உருவாக்கும் விதமாக அமைய வேண்டும்.
"பிளானட் ஆர் பிளாஸ்டிக்?" (Planet or Plastic?) பிரச்சாரம் மூலம், நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை உலகிற்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாகப் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் மறுசுழற்சி சின்னம் இருந்தும் கூட, உலகளவில் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் வெறும் 14% மட்டுமே மறுசுழற்சிக்காகச் சேகரிக்கப்படுகிறது. இது மிகவும் குறைவான விகிதமாகும். அதே சமயம், பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் ஒரு முக்கியமான கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது: தற்போதைய மறுசுழற்சி கட்டமைப்பு மற்றும் அதன் குறைந்த விகிதங்களைக் கொண்டு, நாம் எதிர்கொள்ளும் பிளாஸ்டிக் கழிவு மற்றும் மாசுபாட்டுப் பிரச்சினையிலிருந்து முழுமையாக மீள முடியாது. அதாவது, வெறும் மறுசுழற்சி மட்டும் இந்தப் பெரிய பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மறுசுழற்சிக்கு அப்பால் வேறுபட்ட, விரிவான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச்சூழல் மீது மட்டுமல்லாமல், மனித உடலையும் நேரடியாகத் தாக்குகின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக் உணவுப் பாத்திரங்களை, சூடான உணவுகளுடன் பயன்படுத்தும்போது, பிஸ்பெனால் ஏ (BPA) மற்றும் தாலேட்டுகள் (Phthalates) போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உணவில் கலக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த நச்சுக்கூறுகள், உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதித்து, இனப்பெருக்கப் பிரச்சனைகள் முதல் புற்றுநோய் வரை பலவிதமான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன.
இந்தியச் சூழலில் பார்க்கும்போது, "கறுப்பு பிளாஸ்டிக்" எனப்படும் பிளாஸ்டிக் வகையின் பாதிப்பு மிகக் கடுமையானது. இந்த வகை பல சமயங்களில் மின்சாதனக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்படுவதால், அதில் பல்வேறு கன உலோகங்கள், பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த வகை கறுப்பு பிளாஸ்டிக், உணவு பார்சல் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் போது, குறிப்பாக சூடான அல்லது எண்ணெய் கலந்த உணவுகளுடன் தொடர்பில் இருந்தால், அந்த பாத்திரத்தின் நச்சுகள், உணவில் கலப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஆழமான சுகாதார பாதிப்புகளை உருவாக்கும். சுருக்கமாகச் சொன்னால், கறுப்பு பிளாஸ்டிக்கின் வசதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம். மேலும், கறுப்பு பிளாஸ்டிக்கை நவீன இயந்திரங்களால் கண்டறிய முடியாததால், அது மறுசுழற்சி செய்யப்படாமல் சுற்றுச்சூழலை மேலும் மாசுபடுத்துகிறது. இந்தியாவில் இதன் பரவலான பயன்பாடும், ஒழுங்குமுறை அமலாக்கச் சிக்கல்களும் இந்தப் பிரச்சினையைத் தீவிரப்படுத்துகின்றன.
மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளில் பாலிஎத்திலீன் உயர் அடர்த்தி (HDPE), பாலிஎத்திலீன் குறைந்த அடர்த்தி (LDPE), பாலிப்ரோப்பிலீன் (PP) ஆகியவை அடங்கும். ஆனால் அவையும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றால், ஆபத்தானதாக மாறும் என்று தேசிய சுகாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் டயானா ஜுக்கர்மேன், பிபிசி இணையதளத்தில் பிளாஸ்டிக் பற்றிய தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்துப்படி பிளாஸ்டிக்கின் கூறுகள் நிலையானவை அல்ல, அவை காலப்போக்கில் மாறக்கூடியவை என கூறுகிறார். பிளாஸ்டிக் பாத்திரங்கள், மீண்டும் மீண்டும் கழுவப்பட்டு, சூடான சூழ்நிலைக்கு தொடர்ந்து தள்ளப்படும் போது அதன் கூறுகள் சிதைய துவங்குகின்றன. இது இரசாயன கசிவை அதிகரிப்பதோடு, அதன் நச்சுத்தன்மை உணவுடன் சேர்ந்து நம் உடலுக்குள் சென்று தீங்கை விளைவிக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கிறார்.
நவீன வாழ்க்கை முறையில், மைக்ரோவேவ் (microwave) மற்றும் டிஷ் வாஷர் (dish washer) போன்றவற்றில் பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒரு பிளாஸ்டிக் பாத்திரம் "மைக்ரோவேவ் பாதுகாப்பானது" என்று உற்பத்தியாளர் கூறினால், அது உருகாது என்று மட்டுமே அர்த்தம், அதிலிருந்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உணவில் கலக்காது என்று அர்த்தமல்ல, என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் டயானா ஜுக்கர்மேன் அறுதியிட்டு கூறுகிறார். டிஷ் வாஷரில் பிளாஸ்டிக் உணவு பாத்திரங்கள் சிதையும் வாய்ப்பையும் அவர் கோடிட்டு காட்டுகிறார். மேலும் அவர் கூறுகையில், மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் எதையும் சூடாக்குவதில்லை என்று குறிப்பிடுகிறார். பிளாஸ்டிக், உணவுப் பாத்திரங்களாக தவிர்க்க வேண்டியவை என்பதை விளக்கும் வேளையில், டாக்டர் ஜுக்கர்மேன் கூறும் ஒரு எளிய நடைமுறை மிகவும் நுணுக்கமானது; உணவைக் கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்து, ஒரு தட்டால் மூடி சூடாக்குங்கள். இதில் இரசாயன ஆபத்துகள் இருக்காது என்று பரிந்துரை செய்கிறார்.
மைக்ரோபிளாஸ்டிக் என்பது பிளாஸ்டிக் நெருக்கடியின் மறைமுகமான, ஆனால் மிகச் சிக்கலான மற்றும் தீவிரமான வடிவம். ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் காணப்படும் இந்த நுண்ணிய துகள்கள், பொதுவாக கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் அதன் தாக்கம் சுற்றுச்சூழலிலும், உயிரினங்களிலும் ஆழமாய்ப் பதிந்திருக்கும். பிளாஸ்டிக் பொருட்கள் வெப்பம், ஒளி, காற்றழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் சிதைவடையும் போது, இத்தகைய மைக்ரோபிளாஸ்டிக்குகள் உருவாகின்றன. வசேடா பல்கலைக்கழகத்தைச் (Waseda University) சேர்ந்த பேராசிரியர் ஹிரோஷி ஒகோச்சி மேற்கொண்ட ஆய்வின்படி, தொழிற்சாலைக் கழிவுகள், செயற்கை இழைத் துணிகள், கார் டயர்கள் போன்ற பொருட்கள், மைக்ரோபிளாஸ்டிக்குகளின் முக்கிய மூலங்கள். இத்தகைய துகள்கள் வளிமண்டலத்தில் கலைந்து காற்று வழியாகப் பரவி, நிலம், நீர், உணவுச் சங்கிலி ஆகியவற்றில் ஊடுருவுகின்றன. மனித உடலுக்குள் இவை நுழையும் போது, நீடித்த உள்நோய்கள், ஹார்மோன் மாற்றங்கள், மற்றும் உயிரியல் செயல்பாடுகளின் சீர்கேடுகள் போன்ற தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
மறைமுகமாக மைக்ரோபிளாஸ்டிக் நெருக்கடிக்குக் காரணமாவது, நாம் சுத்தமானது எனக் கருதும் பேப்பர் கப்கள்தான். ஐஐடி காரக்பூர் போன்ற நிறுவனங்களின் ஆய்வுகளின்படி, இந்தக் கப்களில் சூடான பானங்களை (சுமார் 85-90 டிகிரி செல்சியஸ்) ஊற்றும்போது, அவற்றின் உட்புறத்தில் உள்ள மெல்லிய பாலிஎத்திலீன் பிளாஸ்டிக் பூச்சு 15 நிமிடங்களுக்குள் சிதைந்து, கண்ணுக்குத் தெரியாத மைக்ரோபிளாஸ்டிக் துகள்களையும் மற்றும் நச்சு இரசாயனங்களான பிஎஃப்ஏஎஸ் (PFAS) போன்றவற்றை பானத்தில் வெளியிடுகின்றன. மேலும், இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் பல்லேடியம், குரோமியம், காட்மியம் போன்ற கன உலோகங்களையும் தம்மோடு எடுத்துச் செல்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று முறை, சூடான பானங்களை இந்தக் கப்களில் குடிக்கும் ஒருவர், சுமார் 75,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்ள நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாளடைவில் ஹார்மோன் சமநிலையின்மை, இனப்பெருக்கக் கோளாறுகள், புற்றுநோய், மற்றும் நரம்பியல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த பேப்பர் கப்புகளுக்கு மாற்று என்னவென்பதை ஒரு இந்தியருக்கு சொல்லத் தேவையில்லை; அவருக்கு எல்லா மாற்றுப் பொருட்களும் அத்துப்படி.
மைக்ரோபிளாஸ்டிக்குகளைத் தாண்டி, பிளாஸ்டிக் நெருக்கடி பெருங்கடல்களையும் அழிவு நோக்கித் தள்ளுகிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் மாத இதழில் வெளியான "நாம் பிளாஸ்டிக்கைச் சார்ந்து வாழ்கிறோம். இப்போது அதிலேயே மூழ்கிக் கொண்டிருக்கிறோம் ("We Depend on Plastic. Now We're Drowning in It.") என்ற லாரா பார்க்கரின் கட்டுரை, மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதன் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களையும், கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பேரழிவையும், மனித ஆரோக்கியத்திற்கு உருவாகும் ஆபத்துகளையும் வெளிப்படுத்துகிறது. கட்டுரையின் அட்டைப் படத்தில், கடலில் மிதக்கும் ஒரு பிளாஸ்டிக் பை, "பனிப்பாறையின் முனை மட்டுமே" ("Just the tip of the iceberg") என்ற செய்தியுடன், பிளாஸ்டிக் மாசுபாட்டின் உலகளாவிய சின்னமாக மாறியது. இத்தகைய வலுவான காட்சிகளும் எளிமையான தகவல்களும் மக்களைச் சென்றடைய வேண்டும், ஏனெனில் பலர் பிளாஸ்டிக்கைக் குப்பைத் தொட்டியில் போட்டவுடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால், அந்த பிளாஸ்டிக் மறைந்தும், மாறியும் நம்மைச் சுற்றியே இருக்கிறது - நம் நீர், நிலம், காற்று ஆகியவற்றில் நீக்கமற இருந்து நம்மைப் பாதிக்கிறது.
இந்த உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியை எதிர்கொள்ள, ஐரோப்பிய ஒன்றியம் (EU) முற்போக்கான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது, இவை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், மறுசுழற்சியை ஊக்குவித்தல் (எ.கா., PET பாட்டில்களில் 2025-க்குள் 25%, 2030-க்குள் 30% மறுசுழற்சி பொருட்கள்), பிஎஃப்ஏஎஸ் (PFAS -Forever Chemicals),
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைத் தடைசெய்தல் மற்றும் ஓ.இ.சி.டி (Organization for Economic Co-operation and Development) அல்லாத நாடுகளுக்கு கழிவு ஏற்றுமதியை நிறுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி, சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பில் உலகளாவிய முன்மாதிரியை உருவாக்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோடியாகத் திகழும் நிலையில், இந்தியாவும் சில முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 (2021-ல் திருத்தம்) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளைத் தடைசெய்து, உற்பத்தியாளர்களுக்கு கழிவு சேகரிப்பு பொறுப்பை விதிக்கின்றன. இருப்பினும், முறையற்ற அமலாக்கம் மற்றும் முறைசாரா மறுசுழற்சி இந்த முயற்சிகளின் தாக்கத்தை குறைக்கின்றன. இந்த முயற்சிகளை வெறும் ஆரம்ப நிலையோடு நிறுத்திவிடாமல், நிலையான முன்னேற்றமாக மாற்றுவது அவசியம். நம்மிடம் தீர்வுகள் உள்ளன; ஆனால், அவற்றை நிரந்தரமான செயல் திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதே இன்றைய உண்மையான சவால்.
சுருக்கமாக, நேஷனல் ஜியோகிராஃபிக் தகவலின்படி, பிளாஸ்டிக் மறுசுழற்சியின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது. மறுசுழற்சி முக்கியம் என்றாலும், பிளாஸ்டிக் நெருக்கடியைச் சமாளிக்க - பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மற்றும் மேம்பட்ட கழிவு மேலாண்மை எனப் பலதரப்பட்ட அணுகுமுறைகள் அவசியம். அரசின் உறுதியான கொள்கைகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிப்பு, ப்ளாஸ்டிக் மாற்றுப் பொருட்களின் எளிதான கிடைக்கும் தன்மை, மற்றும் அந்த பொருட்களின் விலை குறைப்பு போன்ற காரணிகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க மிகவும் அவசியமானவை.
மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, பிளாஸ்டிக்கின் தீமைகள், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் பற்றி அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். இதனால், பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்களைப் பயன்படுத்தவும், அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் முயல்கிறார்கள். பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை நோக்கிய இந்த பயணம் ஒரு கூட்டு முயற்சி.
“அறிவும் செயலும் ஒத்துழைக்கின்ற இடத்தில்தான் மாற்றங்கள் துளிர்க்க முடியும்.”
(தொடரும்)



No comments:
Post a Comment