தனிமையில் ஓர் பயணம் - கௌசல்யா ஞானேஸ்வரன்



கார் சீராக வேகம் எடுத்துக் கொண்டிருந்தது. பயணத்தின் போது மெல்லப் பேசும் என் கற்பனைகள் அன்று ஏனோ அமைதியாக இருந்தன. மும்பை பயணம் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். பயணம் செய்வது எனது விருப்பங்களில் ஒன்று. புதிய இடங்களைப் பார்க்க வேண்டும், புதிய மக்களை சந்திக்க வேண்டும், பல்வேறு அனுபவங்களை சுவைக்க வேண்டும் என்பது எனது ஆசை. புதுப்புது காட்சிகளால் என் மனம் உற்சாகமும், புத்துணர்வும் அடைந்து துள்ளிக் குதிக்கும். அதனால் எனது வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட பயணம் ஒரு சிறந்த வாய்ப்பு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி, சூரியன் விழிக்காத நேரம். அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டிலிருந்து கோவை விமான நிலையம் நோக்கி காரை இயக்கிக் கொண்டிருந்தார் என் கணவர். கார் நிதானமாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. என் இதயம் தான் அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது. தனிப் பயணம் என் கற்பனைக்குக் கூட எட்டாதது. ஆனால், அது அரங்கேறிய நாள் அது. என் மனம் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக யோசித்தது. ஆங்கிலத்தில் உரையாடத் தெரியாது, ஹிந்தியும் தெரியாது  எப்படி சமாளிப்பேன்? நான் பிறந்து வளர்ந்த ஈரோட்டிலேயே தனியாக எங்கும் சென்றது கிடையாது. தனியாக விமானப் பயணம் மும்பை வரை செல்ல வேண்டும். பயம் பல்கிப் பெருகி கண்களில் தொற்றிக் கொண்டது. விமானப் பயணம் எனக்கு புதிதல்ல. ஆனால் தனியாகச் செல்வது புதிது. குடும்பத்துடன் செல்லும் பொழுது சரியாக எதையும் கவனிக்கவில்லையே? சிறுபிள்ளைத்தனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்து விட்டேனோ? என்று என்னை நானே கடிந்து கொண்டேன்.

நான்கு மணிக்கெல்லாம் கோவை விமான நிலையத்திற்கு வந்துவிட்டோம். என் கணவர் என்னை இறக்கிவிட்டு, "காலை 6:00 மணிக்கு விமானம். செல்போனை சார்ஜ் குறையாமல் பார்த்துக்கொள். ஹேண்ட் லக்கேஜ் பத்திரமாக வைத்துக்கொள்,” என்று அவர் சொல்ல வேண்டிய அறிவுரைகளை கூறிவிட்டு சென்றுவிட்டார்.

டிராலியைக் கூட ஒழுங்காக எனக்கு நகர்த்தத் தெரியவில்லை. நடுக்கத்துடனே விமான நிலையத்திற்குள் நுழைந்தேன். போலீஸ் அதிகாரி எனது ஆதார் கார்டும், பிரிண்ட் அவுட் செய்த போர்டிங் பாஸும் செக் செய்து உள்ளே அனுப்பினார். பின்பு ஒரு அலுவலர் என்னையும், பேக்கையும் செக் செய்து, “ஆறு கிலோ எடை கொண்ட பேக்கில் என்ன இருக்கிறது? ஏதாவது உடையும் பொருள் இருக்கிறதா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்கள். எனக்கு பதில் சொல்லத் தெரியாமல் தவிக்க, அதை புரிந்து கொண்ட பெண் ஒருவர் தாமாகவே முன்வந்து, என்ன இருக்கிறது என்று கேட்டு, பின்னர் அதை ஆங்கிலத்தில் சொல்லி, லக்கேஜில் போட வேண்டிய பேக்கை கொடுத்து, கையில் வைத்துக் கொள்ள வேண்டிய பேக்கையும் ஹேண்ட் பேக்கையும் என்னிடம் கொடுத்து, அடுத்த போர்டிங் பாஸ் ஜன்னல் சீட் கேட்டு வாங்கி, செக்யூரிட்டி செக்கிங் முடித்து கேட் நம்பரில் உட்காரச் சொன்னார்.
“இதுதான் முதல் முறையா?” என்றார்.
“தனியாய் முதல் முறை,” என்றேன்.
“நீங்களும் மும்பையா?” என்றேன்.
“இல்லை, சென்னை. நான் டாக்டர். வாரத்தில் இரண்டு முறை கோவை வருவேன்,” என்று சொல்லி, முதுகைத் தட்டிக்கொடுத்து, “பழகிடும்” என்றார். அவரிடம் நன்றி சொல்லி, என் கண்களில் இருந்து மறையும் வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆறு மணிக்கு என்று சொன்ன விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று அறிவிப்பு வந்தது. எனக்கு அழுகை, என்னையும் மீறி வந்தது. என் மகனிடமும், என் கணவரிடமும் விமானம் தாமதமாகிய செய்தியை சொன்னேன். “பயப்பட வேண்டாம், விமான நிலையம் பாதுகாப்பானது,” என்று கூறினார்கள்.

ஏழு மணியளவில் மீண்டும் “இரண்டு மணி நேரம் தாமதம்” என்ற அறிவிப்பு வந்தது. எனக்கு அழுகை கட்டுக்கடங்காமல் வந்தது. எல்லோரும் பார்ப்பார்கள் என்ற ஞானம் சிறிதும் இன்றி அழத் தொடங்கிவிட்டேன். தாமதம் ஆக ஆக எனது அச்சம் அதிகமாகியது. மும்பையில் இறங்கி, லக்கேஜ் எடுத்துக்கொண்டு வெளியே வந்து என் மகனை சந்தித்துவிட்டால் மட்டும் நிம்மதி என்ற காரணமாக, அழுகை என்னை ஆட்கொண்டது. ஒரு அண்ணா என்னிடம் வந்து, “பயப்படாதீர்கள், நாங்களும் மும்பைதான் செல்கிறோம்,” என்று அவருடன் வந்த மற்றொரு அண்ணாவைக் காட்டிச் சொன்னார். வெளி நபர்களிடம் பேசி பழகாத நான் கொஞ்சம் தயங்கினேன். “நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டோம். நீங்கள் விமான நிலையத்திலேயே பாலும் ப்ரட்டும் தருகிறார்கள். அதையாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்,” என்று கூறினார்.

நான் ரெஸ்ட் ரூமிற்கு சென்று என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு உணவருந்த சென்றேன். அங்கு ஒரு இளைஞர் என்னிடம், “நான் கல்லூரி படிக்க துபாய் செல்கிறேன். பிளைட் இங்கே தாமதமாகிவிட்டது. மும்பை சென்ற பின் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, வேறு பிளைட் மாறவேண்டும்,” என்று கூறினார்.

சிறிது நேரத்திலேயே அந்த இளைஞனின் நிலையை அண்ணாக்கள் தெரிந்து கொண்டு அந்த இளைஞனை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று, மும்பையில் இறங்கி துபாய் செல்லும் பிளைட்டை பிடிக்க முடியுமா? அதற்கு ஏதாவது முன்ஏற்பாடு செய்ய வேண்டுமா? என்று கேட்டுக் கொண்டார்கள். அந்த இளைஞனிடம், “மும்பையில் இறங்கியவுடன் ஒரு பார்ம் எழுதச் சொல்வார்கள். அதை எப்படி எழுத வேண்டும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிக்  கொடுத்தார்கள்.

என்னிடமும், “நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள். "என் மகன் பொறியாளராக உள்ளான். நவிமும்பையில் உள்ள நெருல் என்ற பகுதியில் அவன் இருக்கிறான் அங்கு செல்ல வேண்டும். விமான நிலையத்திற்கு வந்து விடுகிறேன் என்று கூறியிருந்தான். காலதாமதம் ஆகியதால், என்னை அவன் பிக்கப் செய்து கொள்ள முடியுமா என்று பயமாக இருக்கிறது, விமானத்திலிருந்து இறங்கி வெளியில் செல்லுவது கூட எப்படி என்று தெரியவில்லை,” என்றும் சொன்னேன். "கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். அடிக்கடி பிசினஸ் விஷயமாக மும்பைக்கு செல்வோம். ஒரு நாள் மட்டுமே வேலை. இரவே திரும்பிவிடுவோம். ஆனால் இன்று விமானம் தாமதமாகியதால், எங்களுக்கும் எப்படி வேலையை முடிக்க முடியும் என்று தெரியவில்லை,” என்றார்கள்.

ஒருவழியாக, விமானம் 9:15 மணியளவில் புறப்பட்டது. அந்த அண்ணாக்களின் இருக்கையை என்னிடம் காட்டிவிட்டு, “ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கூறுங்கள்,” என்றும் சொன்னார்கள்.

ஜன்னலோர இருக்கையில் நான். மிதக்கும் வெண்மேகங்களுக்கிடையில் பயணிப்பது போல் இருந்தது. அந்த அழகிய காட்சியை காணும்போது என் கண்களுக்குள்ளும் உற்சாகம் பிறந்தது. பயம் என்னை ஆட்கொண்ட போதும், ஆனந்த பெருமூச்சு விட்டேன். நடந்த சில நிகழ்வுகளும், அதன் நினைவுகளும் அழியாமல் என்றும் நிலைக்கும் என்றும் தெரிந்து கொண்டேன். மேலிருந்து கீழே சிறியதாக தெரியும் நிலப்பரப்புகளை பார்த்து மகிழ்ந்தேன். "நான் போகிறேன் மேலே மேலே, பூலோகமே காலின் கீழே" என்ற பாடலை என் நெஞ்சம் பாடத் துவங்க, பக், பக், என்று இருந்தாலும் என் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கவே செய்தது.

மும்பை விமான நிலையம் வந்தடைந்தோம். அண்ணாக்கள் இருவரும் அந்த இளைஞனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்து, எனக்காக லக்கேஜ் எடுக்கும் இடத்திற்கு வந்து, எனது ட்ராலியையும், பேக்கையும் அவர்கள் தான் சுமந்து வந்தார்கள். என் மகனிடம் இருந்து அழைப்பு வந்தது: “மீட்டிங்கில் இருந்து வெளிவர முடியவில்லை. எனவே கேப் புக் செய்யும் இடத்திற்கு சென்று செல்போனை அவர்களிடம் தாருங்கள். நான் அட்ரஸ் சொல்லிவிடுகிறேன். ஒன்றும் பயமில்லை, ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட டாக்ஸி தான்,” என்று கூறினான்.

எனக்கு வழிகாட்டியாய் வந்த அண்ணாக்கள் இருவரும், கேப் புக் செய்த பின்னரும், அவர்களுக்கு காலதாமதம் ஆனாலும், எனது பாதுகாப்பிற்காக, என் மொபைலில் வந்த ஓட்டுநர் பெயர், மொபைல் எண் மற்றும் கார் எண் ஆகியவற்றை கொண்ட எஸ்.எம்.எஸ். பார்த்து, “இந்த கார்” என்று அடையாளம் காட்டி, என்னை ஏறச்சொல்லி என் லக்கேஜ் அனைத்தையும் ஏற்றி, “பத்திரமாக செல்லுங்கள்,” என்று ஒரு தங்கையை வழி அனுப்புவது போல் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் என் இரு கரங்களை குவித்து மனப்பூர்வமான நன்றிகளை மட்டுமே கூறினேன். அவர்களின் பெயர் முகவரி எதுவும் தெரியாது – “கோவை அவர்கள் ஊர்” என்ற விவரம் மட்டுமே தெரியும்.

டாக்ஸியில் ஏறியபின், “ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு உங்களை கண்காணிக்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை எனில் இந்த எண்ணிற்கு அழைக்கவும்,” என்று எனக்கு மெசேஜ் வந்தது. என் மகனும் என்னை, எங்கு வந்து கொண்டிருக்கிறேன் என்பதை கண்காணித்துக் கொண்டிருந்தான்.

பயணத்தின் மீதான எனது ஆர்வம், வேடிக்கை பார்ப்பது, தனிமையான தருணங்களிலும் அந்த அற்புதமான தருணங்களை அவ்வப்போது அனுபவித்தேன். சில அனுபவங்கள் புதிய தகவல்களை தெரிந்துகொள்ள உதவின. எனது கண்ணோட்டம் கொஞ்சம் விரிவடைந்தது. என் மகனின் இருப்பிடத்திற்கு சரியாக வந்து விட்டேன். அவன் எனக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்த பிறகே நிம்மதி பெருமூச்சாய் வெளிப்பட்டது.

பயணத்தின் விளைவாக நான் வளர்த்துக் கொண்ட குணம்
தன்னம்பிக்கை. மற்றும் தனியாகப் பயணம் செய்வதால், எனது பொருட்களைப் பொறுப்பாகப் பாதுகாக்கும் திறனும் வந்தது. புதியவர்களிடம் பேச எப்போதும் தயங்குவேன், அந்த தயக்கத்தை இந்தப் பயணம் முற்றிலும் உடைத்தெறிந்தது. தேவைப்படும் பொழுது உதவி கேட்கவும் கற்றுக் கொண்டேன். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் பயணம் எனக்குக் கொடுத்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

முகம் மறந்த முகவரி தெரியாத சகோதர்களுக்கு நன்றி கூறும் வகையில் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

No comments:

Post a Comment