கழிவு மேலாண்மை - தீர்வை நோக்கிய பயணம் (ஆய்வுத்தொடர்) - பகுதி 2 - ஆனந்தி ஆரூரன்


பகுதி (2) - பிளாஸ்டிக்: ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம்



இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தொடர் சுழற்சியைக் கொண்டிருந்தாலும், மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் அதற்கு முற்றிலும் முரணாகச் செயல்படுகிறது. இயற்கையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் 'ப்ளாஸ்டிக்' சிதையாமல் நீடிப்பதால், அது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் பல வழிகளில் கேடு விளைவிக்கிறது. ஆகவே மனிதன் உருவாக்கிய ப்ளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுப்பேற்று சரிசெய்ய அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று, எங்கும் எதிலும் பிளாஸ்டிக் என்ற நிலை, நம்மை ஒரு "பிளாஸ்டிக் யுகத்திற்குள்" இட்டுச் சென்றுள்ளது. இது நம் நவீன நாகரிகத்தின் ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது. பிளாஸ்டிக்கின் பரவலான பயன்பாடு இக்கால மனித செயல்பாட்டின் பிரதிபலிப்பாகும். எதிர்காலத்தில், நாம் தற்போது பயன்படுத்தும் இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள், தொல்பொருள் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கும் கலைப்பொருட்களாக மாறி, நம் தலைமுறையின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1900-களின் தொடக்கத்தில், நகரங்கள் பெரிதாக வளர்ந்தன. மக்கள்தொகை அதிகரித்தது, தொழிற்சாலைகளும் பெருகின. இயற்கை வளங்களின் தேவை அதிகரித்ததால், அது எல்லோர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான், பேக்கலைட் போன்ற பிளாஸ்டிக்குகள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தின. இது உறுதியானது, வெப்பத்தைத் தாங்கும், மின்சாரத்தைக் கடத்தாது போன்ற சிறப்பம்சங்கள் கொண்டதால், மரம் மற்றும் பிற இயற்கை பொருட்களுக்குச் சிறந்த மாற்றாகக் கருதப்பட்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது.

இரண்டாம் உலகப் போர் (1939) வெடித்ததும், நீடித்த மற்றும் மலிவான பொருட்களுக்கான தேவை கடுமையாக அதிகரித்தது. இது, பாலிஸ்டிரீன் (Polystyrene), PVC, பாலிஎதிலீன் (Polyethylene) மற்றும் நைலான் (Nylon) போன்ற புதிய பிளாஸ்டிக்குகள் உருவாக வழிவகுத்தது.  போர்க்காலத்தில் பாராசூட்களுக்கும், போர்வீரர்களின் ஆடைகளுக்கும், நைலான் பயன்படுத்தப்பட்டது. கூடாரங்கள், சீருடைகள், வெடிபொருட்கள் செய்ய PVC உதவியது. வண்டிகளில் சூட்டைக் குறைக்கவும், அதிர்வுகளைத் தாங்கவும் பாலிஸ்டிரீன் நுரை பயன்பட்டது. விமான பாகங்கள், டயர்கள், ஹெல்மெட் உள்ளே இருக்கும் பாகங்கள், அணுகுண்டு பாகங்கள் கூட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டன.

அமெரிக்கா, போரின் தேவைக்காக பிளாஸ்டிக் உற்பத்தியில் அதிக முதலீடு செய்திருந்தது. உலகப் போர் முடிவடைந்ததும், அமெரிக்காவிடம் பிளாஸ்டிக் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் இருந்தன. இந்தப் போர் தொழிற்சாலைகளைப் பயன்படுத்தவும், மக்களைக் கவரவும், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வீட்டுப் பொருட்களை நிறைய உற்பத்தி செய்தனர். இந்தப் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, பத்திரிகைகளில் தீவிரமாக விளம்பரம் செய்தனர்.

"குட் ஹவுஸ் கீப்பிங்" (Good Housekeeping), "ஹவுஸ் பியூட்டிஃபுல்" (House Beautiful) போன்ற பத்திரிகைகள் பிளாஸ்டிக் பொருட்களின் கதைகளை வெளியிட்டன. அம்மாக்கள் பிளாஸ்டிக்கில் உணவை பதப்படுத்துவது, மகள்கள் பிளாஸ்டிக் உறைகளில் மிட்டாய்களை வைப்பது போன்ற அதன் பயன்பாடுகள் விளம்பரங்களாக வந்தன. 1948 ஆம் ஆண்டில் டப்பர்வேர் (Tupperware) அறிமுகமாகி இல்லத்தரசிகளின் விருப்பமான பொருளாக மாறியது. 1940களின் பிற்பகுதியில் பிளாஸ்டிக் வீட்டு அலங்காரப் பொருட்கள், ஃபார்மிகா மேசைகள், வினைல் நாற்காலிகள் வரத் தொடங்கின. 1946 முதல் 1960 வரை பிளாஸ்டிக் தொழில் 15% க்கும் அதிகமாக வளர்ந்தது. 1960களில் பிளாஸ்டிக் உற்பத்தி, அலுமினியத்தை மிஞ்சியது. 1960-70களில் பிளாஸ்டிக் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது. இன்ஜெக்ஷன் மோல்டிங் (injection molding), தெர்மோஃபாமிங் (Thermoforming) போன்ற முறைகளால் ப்ளாஸ்டிக் பொருட்களை மலிவாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்ய முடிந்தது. ஷாம்பு, சோடா பாட்டில்கள் கண்ணாடிக்குப் பதிலாக பிளாஸ்டிக்கில் வந்தன. காகிதப் பைகளுக்கு பதில் பிளாஸ்டிக் பைகள், உணவு பேக்கேஜிங்கிற்கு பாலிஸ்டிரீன் நுரை என ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் பிரபலமாகின. இலகுவான, மலிவான மற்றும் வசதியான பிளாஸ்டிக் பொருட்கள் 1976 வாக்கில் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக மாறியது. இப்படியாக, இரண்டாம் உலகப் போரின் கண்டுபிடிப்புகள் பிளாஸ்டிக்கின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முதன்முதலில் 1940-களில் மெதுவாகத் துவங்கியது. இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தாலும், உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களாலும், இறக்குமதி செய்யப்பட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாயின. பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் 1957-ல் எட்டப்பட்டது. அப்போதுதான் பாலிஸ்டிரின் (Polystyrene) உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது. இது உள்நாட்டிலேயே பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது. 1960 மற்றும் 1970களில், பிளாஸ்டிக்கின் பயன்பாடு வெகுவாக விரிவடைந்தது. அதன் நீடித்து உழைக்கும் தன்மை, குறைந்த உற்பத்திச் செலவு மற்றும் பல்வேறு வடிவங்களில் மாற்றியமைக்கக்கூடிய திறன் போன்ற காரணங்களால், பிளாஸ்டிக் அன்றாட நுகர்வோர் பொருட்களுக்கான ஒரு முக்கியத் தேர்வாக மாறியது. வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள், பேக்கேஜிங் பொருட்கள் எனப் பலவற்றிலும் பிளாஸ்டிக் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இது பொதுமக்களிடையே பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை வெகுஜன சந்தையில் கொண்டு சேர்த்தது. இந்தத் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் விளைவாக, 20-ஆம் நூற்றாண்டின் முடிவில், இந்தியா உலக அளவில் ஒரு முக்கிய பிளாஸ்டிக் உற்பத்தி நாடாக உருவெடுத்தது.

பிளாஸ்டிக், இன்றைய நவீன வாழ்க்கையின் ஓர் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. இது நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணற்ற பொருட்களில் இடம்பிடித்து, அன்றாட வேலைகளை எளிதாக்கி, இணையற்ற வசதிகளை வழங்குகிறது.  அதன் இலகுவான எடை, நீடித்து உழைக்கும் தன்மை, மற்றும் பல்வேறு வடிவங்களில் மாற்றியமைக்கக்கூடிய திறன் ஆகியவை இதன் பரவலான பயன்பாட்டிற்குக் காரணங்களாகும்.

பிளாஸ்டிக்கின் மறுபக்கத்தைப் புரட்டினால், அதன் மறுசுழற்சி குறித்த கசப்பான உண்மைகள் வெளிப்படுகின்றன. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) தரவுகளின்படி, தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் சுமார் 32% நேரடியாகச் சுற்றுச்சூழலில் குப்பையாகக் கலக்கிறது. இது ஆறுகள், கடல்கள், காடுகள் எனப் பல இடங்களிலும் குவிந்து, இயற்கைச் சூழலைச் சீரழிக்கிறது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவடையும்போது உருவாகும் மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் மிகச் சிறிய துகள்கள், நீர்நிலைகளிலும், மண்ணிலும் கலந்து, உணவுச் சங்கிலிக்குள் நுழைந்து, மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

மேலும், 40% பிளாஸ்டிக் குப்பை மேடுகளில் (landfills) கொட்டப்படுகிறது. அங்கு இது பல நூறு ஆண்டுகளுக்கு சிதையாமல், நிலத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. சுமார் 14% பிளாஸ்டிக் எரிக்கப்படுகிறது. இந்த எரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை (dioxins, furans) மற்றும் கன உலோகங்கள் கலந்த சாம்பல் ஆகியவை காற்று மற்றும் நில மாசுபாட்டை ஏற்படுத்தி, மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் பெரும் சுகாதார அச்சுறுத்தலை உருவாக்குகின்றன.

பிளாஸ்டிக்கை ஏன் முழுமையாக மறுசுழற்சி செய்ய முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, அதன் முக்கிய வகைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு வகை பிளாஸ்டிக்கையும் மறுசுழற்சி செய்ய வெவ்வேறு முறைகள் தேவைப்படுகின்றன.



சந்தையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஏழு முக்கிய வகை பிளாஸ்டிக்குகள் உள்ளன. ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளின் அடியிலும் ஒரு முக்கோண அடையாளத்திற்குள் 1 முதல் 7 வரையிலான எண்கள் இருக்கும். இது அதன் வகையைக் குறிக்கிறது. 
  1. பெட் PET (PETE - Polyethylene Terephthalate): நீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், உணவு ஜாடிகள், துணிகளில் பயன்படுகிறது. ஓரளவு பாதுகாப்பானது, பரவலாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  2. எச்டிபி HDPE (High-Density Polyethylene): பால் புட்டிகள், சோப்பு டப்பாக்கள், சில பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. பாதுகாப்பானது, பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  3. பிவிசி PVC (Polyvinyl Chloride): குழாய்கள், ஜன்னல் சட்டங்கள், தரைவிரிப்புகள், சில பொம்மைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இவை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடலாம், குறைந்த பாதுகாப்பு. மறுசுழற்சி செய்வதும் கடினம்.
  4. எல்டிபி LDPE (Low-Density Polyethylene): பிளாஸ்டிக் பைகள், உணவுப் பொட்டலங்கள், அமுக்கி எடுக்கக்கூடிய பாட்டில்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மறுசுழற்சி செய்வது கடினம், ஆனால் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது.
  5. பிபி PP (Polypropylene): உணவு கொள்கலன்கள், மருந்து பாட்டில்கள், கார் பாகங்கள், கயிறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. வெப்பத்தைத் தாங்கும், ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது. சில சமயங்களில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  6. பிஎஸ்-PS (Polystyrene styrofoam): காபி கப்புகள், உணவு கொள்கலன்கள், பாதுகாப்பு உறைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. உடையக்கூடியது, சூடான அல்லது எண்ணெய் பசையுள்ள உணவுகளுடன் தொடர்பு கொள்ளும்போது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடலாம். மறுசுழற்சி செய்வது கடினம்.
  7. பல்கலவை பிளாஸ்டிக் (Others): மற்ற அனைத்து பிளாஸ்டிக்குகளையும் உள்ளடக்கியது (எ.கா: பாலிகார்பனேட் (PC), பயோபிளாஸ்டிக்ஸ், கலப்பு பிளாஸ்டிக்குகள்). இவை பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன, அவற்றின் மறுசுழற்சித் திறன் மாறுபடும். சிலவற்றில் பிஸ்பெனால் ஏ (BPA) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருக்கலாம்.
பிளாஸ்டிக் மறுசுழற்சியை மட்டுப்படுத்தும் சில காரணங்கள்:
  • வெவ்வேறு வகையான பாலிமர்கள்: ஒவ்வொரு பாலிமரும் வெவ்வேறு வெப்பநிலையில் உருகும். வெவ்வேறு வகைகளை ஒன்றாக உருக்க முயற்சித்தால் தரம் குறைந்துவிடும். மறுசுழற்சி செய்வதற்கு முன் ஒவ்வொரு வகை பிளாஸ்டிக்கையும் தனித்தனியாகப் பிரிப்பது அவசியம், இது நேரத்தையும், செலவையும் அதிகரிக்கும்.
  • மாசுக்கள்: பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் உணவு, திரவங்கள் அல்லது பிற பொருட்களால் மாசுபட்டிருக்கும். இந்த மாசுக்கள் மறுசுழற்சி செயல்முறையின் தரத்தைக் குறைத்துவிடும்.
  • சேர்க்கைகள்: பிளாஸ்டிக்கின் பண்புகளை மேம்படுத்த சேர்க்கப்படும் நிறமிகள்(colours), நிலைப்படுத்திகள் (stabilizers) போன்ற இரசாயனங்கள் மறுசுழற்சி செயல்முறையை சிக்கலாக்குகின்றன.
  • தரமிறக்கம்(down cycling): பல வகையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும்போது, அவற்றின் தரம் ஒவ்வொரு முறையும் குறைகிறது. அதாவது, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை மீண்டும் அதே தரமான பொருளாக உருவாக்க முடியாது; அவை துணிகள் அல்லது பிளாஸ்டிக் அறைகலன்கள் (furniture) போன்ற குறைந்த தரமான பொருட்களாக மாற்றப்படுகின்றன. இந்த "தரமிறக்கம்" பிளாஸ்டிக் மறுசுழற்சியின் மதிப்பைக் குறைக்கிறது.
  • பொருளாதார சிக்கல்கள்: சில வகையான பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான செலவு, புதிய பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான செலவை விட அதிகமாக இருக்கலாம். இதனால், பல மறுசுழற்சி நிலையங்கள் இத்தகைய பிளாஸ்டிக்குகளை ஏற்றுக்கொள்வதில்லை.
  • பல அடுக்கு ப்ளாஸ்டிக்: சிப்ஸ் பேக்கட் போன்ற உணவுப் பொட்டலங்கள்  வெவ்வேறு வகையான பிளாஸ்டிக் அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த அடுக்குகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம்.
இந்தக் காரணங்களால்தான் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஒரு சிக்கலான மற்றும் சவாலான செயல்முறையாக உள்ளது. அனைத்து வகையான பிளாஸ்டிக்குகளையும் திறம்பட மறுசுழற்சி செய்ய மேம்பட்ட தொழில்நுட்பங்களும், முறையான சேகரிப்பு மற்றும் பிரித்தெடுக்கும் கட்டமைப்புகளும் தேவைப்படுகின்றன.

சுருக்கமாகக் கூறினால், இந்த ஏழு வகையான பிளாஸ்டிக்கையும் தனித்தனியாகச் சேகரித்து சுத்தம் செய்து மறுசுழற்சி செய்ய முயற்சியை மேற்கொண்டாலும், அதைக் கொண்டு முதல் தரமான ப்ளாஸ்டிக் உருவாக்கத்தைப் பெற முடியாது. குறை சுழற்சியே (Downcycling) சாத்தியப்படும். பிளாஸ்டிக்கின் இந்த சவால்களை நாம் எப்படி எதிர்கொள்ளலாம் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

(தொடரும்)









No comments:

Post a Comment