ப்ளாக்கி திரும்பி வந்துட்டா - யசோதா பழனிச்சாமி


முதன் முதலில் அவளை நான் பார்த்த நேரம் அதிகாலை ஐந்து மணி இருக்கும். அன்று அதிகாலை முன்வாசல் பெருக்கிக் கொண்டு இருந்த போது, கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று என் அருகில் ஊர்ந்து வருவது என் கண்களுக்கு தெரிந்ததும், நான் கையிலிருந்த விளக்குமாற்றோடு சற்று அச்சத்தோடு நகர்ந்து உற்றுப் பார்த்தேன்.

‘ங்கே ங்கே’ என முனகியபடி என் காலருகில் நகர்ந்து வந்த அதை நான் சற்றே விலகி நின்று எட்டிப் பார்த்தேன். அட! அது நாய் குட்டி. இது எங்கேயிருந்து வந்தது? அடச்சே போ! என விரட்டி விட்டு, நான் வீட்டுக்குள் நுழையும் போது, அந்த நாய்க்குட்டியின் ‘ங்கே ங்கே’ முனகல் சற்று ஓங்கி கதறலாக ஒலித்தது. மீண்டும் கேட்டருகே சென்றேன். அங்கே சற்று நேரத்துக்கு முன்னால் என் காலை நாக்க வந்த அந்த நாய்க்குட்டிதான் சாக்கடையில் விழுந்து மேலே வரத் தெரியாமல் கத்திக் கொண்டு இருந்தது. மனம் பதறி அடக் கடவுளே! என்று முணுமுணுத்துக் கொண்டே சாக்கடைக்குள் விழுந்த நாய்க் குட்டியை மேலே தூக்கி விட்டேன்.

மேல தூக்கி விட்ட, சற்று நேரத்தில் சாலையில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. நன்றாக விடிந்ததும் நாய் வந்த கதையை, நான் எல்லோரிடமும் வினவுவதற்குள் அந்த தெருவில் இருக்கக்கூடிய எல்லா மழலைகளும் நாய்க் குட்டியை சூழ்ந்து கொண்டு “ஐ, நாய்க்குட்டி அழகா இருக்கு” என தொட்டுப் பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள். நாய் குட்டியாக இருந்தாலே அழகுதானே!. அது தெருநாயாக இருந்தால் என்ன? வீட்டு நாயாக இருந்தால் என்ன? அந்த நாய்க்குட்டி குழந்தைகளுக்கு விளையாடும் பொம்மையாக மாறிப் போனது.

எல்லாரும் அந்த நாய்க்குட்டியை த்தா..த்தா..சூச்சூ.. மணி மணினு கூப்பிட ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு குட்டீஸ் எல்லாம் சேர்ந்து அந்த நாய்க்குட்டி கருப்பா இருந்ததுனால ப்ளாக்கி என்று பேர் வைத்து கூப்பிட ப்ளாக்கியாயிட்டா. அந்த ப்ளாக்கியைச் சுற்றி ஒரு மழலை ரசிகர் வட்டம் எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருந்தது. நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாக குழந்தைகள் உண்ணும் உணவுகளின் மீதங்களை கொட்டி வைக்க, அவள் அதை வாலாட்டிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். உண்ட வீடுகளுக்கு நன்றி காட்ட நினைத்ததோ என்னவோ ப்ளாக்கி அந்த தெருவிலேயே ஒன்றி விட்டாள். ஒவ்வொரு வீட்டுக்கு முன் நின்று பிச்சைக் கேட்பது போல் தினமும் குரைப்பாள். சத்தம் கேட்டு வெளியில வந்து எட்டிப் பார்ப்பவர்கள் அதுக்கு பிஸ்கட்டோ, உணவோ கொண்டு வந்து போடுவதுண்டு. சிலர் ‘அடப்போ உனக்கு இதே வேலையாப் போச்சு’ என கதவை திறவாமலே கத்துவதும் உண்டு. இப்படியாக பல வீட்டுச் சாப்பாட்டினால் ஒரு நாலைந்து மாதங்களில் நல்ல கொழு கொழுன்னு புஸ்டியாக மாறிவிட்டாள்.

அதன்பிறகு அவளைச் சுற்றி குழந்தைகள் விளையாடுவதில்லை. ஜொள்ளு விட்டு வரும் ரோமியோக்களாக ஆண் நாய்கள் வலம் வர ஆரம்பித்தன. புள்ள தளதளன்னு இருக்காளே இவ நமக்கு கிடைப்பாளா என்ற ஏக்கத்தோடு நிறைய ரோமியோக்களின் கண்கள் அவளை சுத்தி வட்டமிட்டு கொண்டே இருந்தன. அவளும் உணர்வு மிக்கவள் தானே! அவளுக்கும் ஆசை பொங்கியது. அவளும் உடல் இச்சைகளை தணிக்கத் தனக்கேயுரியவனை தேர்ந்தெடுத்தாள்.

அப்புறம் என்ன கரு கூடி வளர்ந்தது. அவள் குட்டிகளை போட்ட பிறகுதான் அவ வயிற்றில் குட்டிகள் தொட்டிலாடின விஷயம் அந்த தெருவுக்குள் பரவியது. ஏழு குட்டிகளை ஈன்றாள். எல்லாக் குட்டிகளையும் தன்மேலேயே கிடத்தி பாலூட்டி வளர்த்தாள். ஓரிரு மாதங்களில் நாய்க் குட்டிகளை வளர்க்க சிலர் எடுத்துச் சென்றார்கள். ஒன்றிரண்டு குட்டிகள் அடிபட்டு இறந்தன. இப்படியாக எல்லா குட்டிகளும் போய்விட எஞ்சியது ஒன்று மட்டுமே.

அந்த தெருவில் புதியதாக குடி வந்த ஒருவர் நாய்களை வளர்க்கும் ப்ரியர். அதனால் அந்த வீட்டினர் பிளாக்கிக்கு நேரத்திற்கு சாப்பாடு போட்டு வந்தார்கள். அந்த வீட்டினர் சொந்த நாய் மாதிரி எந்தவித அறுவெறுப்பும் இல்லாமல் தூக்கி கொஞ்சினார்கள். அந்த ப்ளாக்கியோட எஞ்சிய குட்டிக்கு “ப்ரௌவுன்” எனப் பேர் சூட்டினார்கள். ப்ரௌவுனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் மருந்துவம் பார்த்து விடுவார்கள். இப்படியாக அவர்களுடன் ப்ரௌவுன், ப்ளாக்கியின் பிணைப்பு அதிகமானது. ப்ளாக்கியால் வந்த இடையூறு நிறைய ஆண் நாய்கள் ப்ளாக்கியைத் தேடி தெருவுக்குள் வர ஆரம்பித்தன. இவர்கள் உணவு போடுவதால் தான் இந்த நாய் தெருவை விட்டுப் போகவில்லை என்று உணவு போடுபவர்களிடம் சிலர் முரண்பட்டார்கள்.

இடையில் இரண்டு முறை ப்ளாக்கி கருவுற்று மீண்டும் குட்டிகளை ஈன்றெடுத்தாள். ஒவ்வொரு முறை குட்டி போடும் போதெல்லாம் ‘அச்சச்சோ நிறைய நாய் பெருகிடும் போல இருக்கே’னு தெருவாசிகளின் புலம்பல்களும் அதிகரித்தன. ஆனால், ஒரு குட்டிகள் கூட தங்கவில்லை. அவர்களிடம் நாயிக்கு சோறு போடாதீங்க என்று சொல்ல அந்த வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் ஹவுஸ் ஓனருக்கு புகார்கள் சென்றன. அவர்களை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒரு தெருநாய்க்கு சோறு போடும் உரிமை கூட இல்லை என்பது அவர்களுக்குள் பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. மாதமாதம் வாடகை பணம் கொடுத்து விட்டுத்தானே இருக்கிறோம். என்ற அவர்களின் கேள்விக்கு பதில் இல்லை. நாய்க்கு  சோறு போடக் கூடாது என்று சொல்லும் அதிகாரத்தை சொந்த வீட்டுக்காரருக்கு யார் கொடுத்தார்கள்? எனும் கேள்விக்குள் நான் முடங்கிப் போனேன். அதன் பிறகு நீண்ட நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இருந்தவர்கள் உடனடி தேடுதலில் ஈடுபட்டு, சொந்த வீடு வாங்கிச் சென்று விட்டார்கள்.

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்த அரசாங்கம் இனப்பெருக்கத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர். அந்தப் பகுதிகளிலும் தெருவில் சுற்றும் நாய்களை வேனில் அழைத்துச் சென்று இனப்பெருக்க அறுவைச் சிகிச்சை செய்து விட்டு வந்து அதே தெருவில் விட்டார்கள்.

அவர்கள் அந்த தெருவுக்குள் வந்த சமயம் பிளாக்கி பிடிபடாமல் தப்பி விட்டாள். அதன் பிறகு பிளாக்கி மூன்று நான்கு குட்டிகளை போட்டுவிட்டாள். இது என்னடா இதே தொந்தரவா போயிடுச்சுன்னு அங்கிருந்தவர்கள் எல்லோரும் புலம்பல்களை புலம் பெயர்த்தார்கள். திடீர் என்று ஒரு நாள் காலையில் ஒரு வேன் உறுமும் சத்தம். ப்ளாக்கி “க்கே க்கேனு” ஊளையிட்டு வள்வள் என்று வேகமாக குரைத்தாள்.

என்னாச்சு என்று வெளியே எட்டிப் பார்த்தால், நாய் புடிச்சுட்டு போகிற வேன். ஒரு பெரிய மீன் வலை போல எடுத்து வந்திருந்த ஒருவர் அதை தூக்கி எறிந்து ப்ளாக்கி மேலே தூக்கிப் போட்டார். இந்த தடவை ப்ளாக்கி வலைக்குள் வசமாக மாட்டிக் கொண்டாள். அதுக்குப்பிறகு அவளை வேனில் ஏற்றிக் கொண்டனர். அந்த வேனில் ஏற்கனவே இன்னும் சில நாய்கள் வேனுக்குள் அடைக்கப்பட்டு காரணம் புரியாமல் பரிதவித்து நின்றன. ப்ளாக்கி போனதுக்குப் பிறகு அந்த தெருவே அமைதியானது போல் ஒரு உணர்வு எனக்குள்.

பாவம் அந்த ப்ரௌவுன் தன் அம்மாவைக் காணாததால் அடிக்கடி குரைத்து கத்த ஆரம்பித்தான். விடிய விடியத் தூங்காமல் ஊளையிட்டே இருந்தான். வெளியில் செல்பவர்கள் மீது தாவி தாவி குதிக்க ஆரம்பித்தான். தன் அம்மாவைக் காணோம் என்கிற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திச் சொல்ல முடியாமல் பரிதவித்தான்.

ப்ரௌவுன் அந்தத் தெருவைத்தாண்டி ஒத்தையில போகும் போது மற்ற நாய்கள் இவனை விடாமல் துரத்திக் கடித்தன. ப்ரௌவுனைப் பார்க்கும் போது, கூடி மகிழ்ந்த உறவுகள், பிரிந்து போன நிலையில் இருக்கும் ஒருவனை மற்ற உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஒதுக்கியது போல் தோன்றியது. அதன் பிறகு அந்த தெருவை விட்டு ப்ரௌவுன் வெளியே போகவே அஞ்சினான். அவன் அம்மா இருந்தவரை இருவரும் சேர்ந்து தெருவுக்குள் வரும் புதிய நாய்களை உள்ளே வர விடாமல் எதிர்த்து நின்று சமாளிப்பார்கள். அதனால், அந்த தெருவுக்குள் வேறு எந்த புதிய நாய்களும் எளிதில் நுழைய முடியாது. இப்போது ப்ரௌவுன் தனியாக இருப்பதால் வேறு நாய்கள் உள்ளே நுழைந்தன. ப்ரௌவுன் அவைகளை விரட்ட தனியாளாக மிகவும் பரிதவித்து இருந்தான். அவனைப் பார்க்கும் பொழுது அடடா! இந்த பிளாக்கி வந்துட்டா நல்லா இருக்குமே என்று ப்ளாக்கியை நினைத்து என் மனதுக்குள் ஒரு தேடுதல் வர ஆரம்பித்தது.

பத்து நாட்கள் கடந்தும் ப்ளாக்கி திரும்பி வந்தபாடில்லை. என்னாச்சு எல்லா நாய்களையும் பிடித்த இடத்தில் விட்டுவிடுவதாகச் தான் சொன்னார்களே ஆனால் ப்ளாக்கி வரலையே. மனதில் ப்ளாக்கியின் நினைவு அதிகரித்தது. யாராவது ஒரு வீட்டின் வெளிகேட்டின் முன் வாலாட்டிக் கொண்டு படுத்திருக்கும் ப்ரௌவுன் அவன் அம்மாவை பிரிந்த தன் மன வலியை தெரிவிக்க அடிக்கடி ஊளையிட ஆரம்பித்தான்.

தெருவில் சிலர் நாய் ஊளையிடுவது ஆகாது என்றார்கள். அது தன் பிரிவுத்துயர் தாங்காமல் கத்துது என்று சொன்னாலும் யாருக்கும் நம்பிக்கை வரலை. காரணம் நாய்களின் கண்களுக்கு அமானுஷ்யம் தெரியும் என்று சொல்லி வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையின் பிடியில் இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. கூகுளைத் தேடினேன். வலியின் மிகுதியாலும் நாய் ஊளையிடும். ஓநாய் வழித் தோன்றல் என்பதால் ஓநாயின் ஊளையிடும் குணத்தின் வாயிலாக நாய் எப்பவாவது ஊளையிடும் என்று வாசித்தேன்.

ஒரு பத்து நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் காலையில் அந்த வேன் வந்து நின்றது. வேனின் கதவை திறந்து விட, ஆப்ரேஷனை முடித்துக் கொண்டு வந்த ப்ளாக்கி குதித்து வெளியே ஓடினாள். ஆம்! ப்ளாக்கி வந்துட்டா!

தெரு நாய்தான் என்றாலும், கடந்த நான்கைந்தாண்டுகளாக எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த ப்ளாக்கியின் ஒரு பிரிவு இடைவெளி அதன் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தியது.

ப்ளாக்கியும், ப்ரௌவுனும் இதோ எப்போதும் போல் கேட்டின் முன். “அடச்சே எந்திரிச்சுப் போங்க.. எந்நேரமும் இங்கேயே படுத்துகிட்டு கிடக்கறீங்க” என்ற அதட்டல்கள் தொடர்கிறது.

No comments:

Post a Comment