மாகாளியும் மாதங்கியும் - ஷண்முக வடிவு, கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன்


அது ஒரு அழகான அடர்வனம். விதவிதமான பறவைகளின் குரலோசையும், காற்றின் அசைவில்  மரக் கிளைகள் உண்டாக்கும் ஒரு ரம்மியமான சலசலப்பும், காடு விரும்பிகளான அந்த மாணாக்கக் குழுமத்துக்கு மனதிற்கு இதமான சூழலாய் இருந்ததில் அலுப்பே தெரியாமல் , கண்டு  ரசித்து, அந்தச் சுத்தமான வனக்காற்றை ஆழ்ந்து சுவாசித்து அனுபவித்தவாறே நடந்து கொண்டிருந்தனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியில் பெருவிருப்பம் கொண்டிருந்த அந்த மாணாக்கர் குழு தேர்ந்தெடுத்தது, அந்த அடர்வனத்தின் உள்ளே அமைந்திருந்த ஒரு பழங்காலக் காளி கோயில். கோவிலுக்கு அருகிலேயே அவர்கள்  ஒரு பத்து நாட்கள் பத்திரமாகத் தங்கவும், அவர்கள் உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர் அங்கே பதியில் வாழும் ஆதிவாசிக் குடும்பத்தினர். காட்டுக்குள்ளே வழி தவறி விட வேண்டாம் என்பதற்காக அங்கே தங்கியிருக்கும் ஆதிவாசிகளில் ஒருவரை இவர்களோடு துணைக்கு அனுப்பியிருந்தது வனத்துறை.

வெகு நேரம் நடந்த களைப்போடு கூடவே பசியும் சேர்ந்து விட, அமர்ந்து உணவருந்தி சற்றே ஆசுவசிக்க இடம் தேடத் தொடங்கினர். அவர்களோடு வந்த ரங்கன், 
"இன்னும் கொஞ்சம் நடந்தா, ஒரு சின்ன ஓடை வரும். பக்கத்திலேயே பெரிய ஆலமரமும் இருக்கு. அதுக்கு அடியிலே ஒரு காட்டு முனியப்ப சாமி இருக்கறதாலே, தெனமும் கூட்டிப் பெருக்கி, பூசை பண்றதாலே எடமும் நல்லா சுத்தமா இருக்கும்.  அங்கே போயிடலாம்" 
எனச் சொல்லி அந்த இடத்துக்கு வழிகாட்டி நடக்க, பின் தொடர்ந்தனர் நம் மாணாக்கர்கள்.

பூலோக சொர்க்கமாய் இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும், மடமடவென ஓடையில் இறங்கி அந்தச் சில்லென்ற தண்ணீரில் முகம் கை கால் கழுவி விட்டு, அவரவர் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்தனர். உண்டு முடித்து அந்த காகிதங்களை எல்லாம் தங்கள் பையிலேயே போட்டுக் கொண்டு, கால் நீட்டிப் படுத்தனர் சிலர். அங்கிருந்த பாறையில் அமர்ந்து, தண்ணீரில் கால்களை அளவியபடி நீரோடையின் ஜில்லிப்பை அனுபவித்தனர் சிலர். லேசாகக் கருமேகங்கள் சூழ்ந்து, அந்த வனத்துக்கு இன்னும் கொஞ்சம் அழகையும் அந்த மெல்லிருள் லேசான ஒரு பயத்தையும் கூட்ட,  மிதமான பூந்தூரலாய் விசிறிக் கொண்டிருந்தது மழைச் சாரல்.

எல்லாக் கூட்டத்திலும் சொல் பேச்சுக் கேளா சுந்தரியோ சுந்தரனோ இருப்பார்களே, அப்படிப்பட்ட ஒரு சுந்தரி மாதங்கி.

"இங்கே காட்டுக்குள்ளே திசை தெரியாது. எல்லா ஒத்தையடி வழியும் ஒண்ணு போலவே இருக்கும். தனிச்சு யாரும் போயிடாதீங்க..காணாம போயிடுவீங்க. இங்கே போன் எல்லாம் வேலை செய்யாது" என எவ்வளவோ எச்சரித்திருந்தும், சற்று தூரத்தில் தென்பட்ட மயில் கூட்டமும் அவைகளின் அழகு நடனமும் மாதங்கியை ஈர்க்க, யார் கண்ணிலும் படாமல் மெதுவாக நடக்கத் தொடங்கினாள். பின்னால் வரப் போகும் ஆபத்தை உணராதவளாக.
மயிலின் நடனத்தைக் கண்டு தன்னை மறந்த மாதங்கியும், மயில் போல அழகிய பெண்தான். மௌனித்து கிடக்கும் அடர்வனமும் அவள் அழகை மெல்ல ரசித்து, ஆசை கரம் நீட்டி அவள் வருகையை எதிர்கொண்டது. புதிதாய்ப் பூத்த பூப்போன்ற பூவையவளின் அழகு தோற்றத்தில் மட்டுமல்லாது, அனைத்து ஜீவராசிகளிடமும் காட்டும் பரிவிலும், பாசத்திலும் மிகுந்து இருந்தது.

தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய அடர்வனத்திற்கு மாதங்கி வந்ததே ஒரு பெரிய கதை. தன் அப்பா, அம்மாவிற்கு ஒரே செல்ல பிள்ளையான அவள், எதற்கும் மறுப்பு சொல்லாத பெற்றோரிடம், “பழங்கால காளி கோவில் ஒன்று இருக்கிறது. அதை ஆராய்ச்சி செய்யும் விதமாக பத்து நாட்கள் அடர்வனத்தில் தங்க இருக்கிறோம்  எங்கள் மாணாக்கர்களுடன்,” என்று கூறியதும், அவள் பெற்றோர்கள் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

மாதங்கியின் அப்பா சுதாரித்துக் கொண்டு, “அந்த இடம் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது. ஆதலால் நீ அங்கு போக வேண்டாம்,” என்று சொன்னார். அவள் அம்மாவோ அழத் தொடங்கினாள். மாதங்கிக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக மறுக்கிறார்கள் என்பது புரியாமல், சிறு பிள்ளைத்தனமாக கோபம் கொண்டு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் அம்மாவும், “சாப்பிடுடா,” என்று கண்ணீருடன் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவள் அப்பா, “மாதங்கி, உன்னோட அறிவு கூர்மையும், திறமையும், ஆராய்ச்சி செய்யும் புலமையும் கண்டு நான் எப்போதும் வியப்பேன். ஆனால் அந்த காளி கோவிலுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்க மாட்டேன். எப்பொழுதும் உன்னிடம் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காத நாங்கள் இதைச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கும்,” என்று தீர்மானமாகச் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவர் கண்களில் ஒரு பயம் தெரிந்தது.

அதை கவனித்த மாதங்கி, “அப்பா, எதற்காக அச்சம் கொள்கிறீர்கள்? என்னை தைரியமான பெண்ணாக வளர்த்திருக்கிறீர்கள். கவலை கொள்ள வேண்டாம். காரணத்தைச் சொல்லுங்கள்,” என்று பிடிவாதமாகக் கேட்டாள். அவரும் சொல்லத் தொடங்கினார்.

“இத்தனை நாளும் ஒரு உண்மையை உன்னிடம் சொல்லாமல் மறைத்தேனடா. அதைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது,” என்று அவர் கூறும்போதே, அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“உனக்கு ஒரு அத்தை இருந்தார். அவளும் உன்னை போலவே தான் இருப்பாள். ஒரே தங்கை. அளவுகடந்த பாசம் வைத்திருப்பாள். நான் என்றால் அவளுக்கு உயிர். எனக்கும் அப்படித்தான். அவளும் மிகச் சிறந்த ஞானம் உள்ளவள். பழங்கால கோவில்களை ஆராய்ச்சி செய்வது அவளுக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு முறை இப்போது நீ பயணம் செய்ய விரும்பும் பழங்கால காளி கோவிலுக்கு அவள் தன் தோழிகளுடன் சென்றாள். ஆனால் திரும்பி வரவே இல்லை. அதுபோல் உனக்கும் ஏதாவது நடந்து விட்டால்? உன்னை இழக்க நாங்கள் தயாராக இல்லை,” என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

தன் தந்தையின் அழுகையை இதுவரை பார்த்திடாத மாதங்கி, மிகவும் திகைத்து, “அழாதீங்கப்பா,” என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினாள். அவள் கண்களிலும் கண்ணீர்  துளிர்த்தது. கொஞ்சம் நிதானித்து பின்பு அவரே பேசினார்.

 “நீ சொல்கிற அந்த பழங்கால காளி கோவில் ஒரு மந்திரக் கோவிலாம். அதை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் யாராவது வந்தால், அவர்கள் என்ன ஆவார்கள் என்பது யாருக்கும் தெரியாதாம். அந்த மாதிரிதான் உன் அத்தையும் அங்கு சென்றார். திரும்பி வரவே இல்லை. அவருடன் சென்ற ஐந்து பேரும் திரும்பவில்லை. நாங்களும் எல்லா உயர் வனத்துறை அதிகாரிகளிடம் சொல்லி, எல்லா முயற்சியும் செய்து பார்த்தோம். எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அந்த வருத்தத்தில் தான் உன் தாத்தாவும் பாட்டியும் காலமானார்கள்.” 

கலங்கிய முகத்துடன் அவர் சொல்வதைக் கண்ட மாதங்கி இத்தனை துயரம் இருந்தும் அதை ஒரு நாளும் வெளிக்காட்டியதே இல்லை,” என்று எண்ணினாள். அதற்குக் காரணம், தன் மேல் பெற்றோர் வைத்திருக்கும் பாசம். அவர்களை தவிக்க விடக்கூடாது என்று முடிவு செய்த மாதங்கிக்கு, அந்தப் பழங்கால காளி கோவிலுக்கு செல்லும் ஆசையும் தீவிரமாக எழுந்தது.

“அப்பா, பயப்படாதீர்கள். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பெண்ணாக நீங்கள் என்னை வளர்த்திருக்கிறீர்கள். 20 வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை நினைத்து பயப்படுகிறீர்கள். ஆனால் இப்போது பாதுகாப்பு அதிகம். அங்கு ஆதிவாசி மக்கள் வசித்து கொண்டிருக்கிறார்கள். நம் குல குருவை சந்தித்து ஆலோசனை பெறலாம்,” என்று கூற, ஒரு வழியாக ஏற்றுக்கொண்டு, அவரின் ஆலோசனைப்படி மாதங்கியின் தாய் ஒரு மண்டல விரதம் இருந்து, பூஜை அனுஷ்டிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி, மாதங்கி இந்த இடத்திற்கு வந்திருந்தாள்.

ஆனால் இவை அனைத்தையும் மறந்தவளாக, தனித்து வந்தவள், கால் இடறி சரிந்து விழுந்து, பள்ளத்தில் உருண்டோடினாள். பள்ளத்தில் உருண்ட மாதங்கி, வலியில் நெக்குருகி மெல்ல விழித்தாள். கண்ணைத் திறந்தவுடன் முன்னே தெரிந்தது மரங்களால் முற்றிலும் மூடப்பட்ட வெளிச்சமற்ற அடர்ந்த காடு. சில்வென்ற காற்றில் பிசுபிசுப்பாக காது கிழிக்கும் ஓசைகள். நிச்சயம் அது பறவைகளின் குரல் அல்ல.

அவள் எழுந்து நிற்க முயன்றபோது, இடுப்பில் சற்று வலித்தது. கைகளால் தரையைத் தொட்டபடி மெதுவாக எழுந்தாள். திசை தெரியாமல் நின்றவளுக்கு அந்த இடம் மர்மத் தோற்றத்தை ஏற்படுத்தியது.

"நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லையே... என்னுடைய ஆசிரியரும் நண்பர்களும் என்னை எங்கு தேடுவார்களோ. என் பெற்றோர்கள் நினைத்தது போலவே நடந்து விடுமோ"   உடல் முழுக்க பரவிய திகில் உணர்வினால் அரற்றிக் கொண்டிருந்தாள் மாதங்கி.
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. கண்கள் செருகின. தண்ணீராவது குடித்தால் தேவலாம் போல இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சங்கின் ஓசை  காதில் விழுந்தது. அது இசையோ, அழைப்போ தெரியவில்லை. அந்த ஓசை அவளை உள்ளுக்குள் இழுத்தது போல உணர்ந்தாள். பயமும், ஈர்ப்பும் கலந்த ஒரு வலிமை அவளை அந்த ஓசை வந்த திசையை நோக்கி நடக்க வைத்தது.

மரங்களைத் தாண்டி செடிகள் பிளந்து முன்னால் தோன்றியது ஒரு பழமையான கோவில். உயர்ந்த கோபுரம், அகன்ற தூண்கள், பிளவுபட்ட கற்கள், பசுமை பூண்ட வாசல் கொண்ட அந்த கோவிலில் ஒரு உயிர்ப்பு இருப்பது போல் உணர்ந்தாள்.  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்சம் அருகே சென்றாள்.  கோவிலின் வலது புறம் ஒரு சிறிய ஓடை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அருகே சென்று அமர்ந்து ஓடைக்குள் கை வைத்தாள். அவள் கைகள் உறைந்து போகும் அளவுக்கு தண்ணீர்  குளிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் அவளின் தாகம்  அந்த குளிர்ந்த நீரைப் பருக வைத்தது. பசி கொஞ்சம் அடங்கியது போல் உணர்ந்தாள்.

முன்னே இருந்த கல் சிலையின் கண்கள்  பிரகாசமாகத் தெரிந்தன. அந்தக் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றாள் மாதங்கி. காற்றின் ஓசை திடீரென நிலை குத்தியது. அசைந்த மரக்கிளைகள் அமைதி கொண்டன. மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு கல் தூண் தெரிந்தது.

“யாரும் அழைத்தால் வராதவள், எவரையும் அழைக்காமல் வர வைப்பவள், வந்தாரை வாழ வைப்பவள் எங்கள் காளி" அந்தக் கல் தூணில்  தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

மாதங்கியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அந்தப் பழமையான காளி கோவிலின் கதைகள் வெறும் புராணமில்லை. அவள்  இடறி விழுந்தது ஒரு வகை அழைப்பு என்று நம்பத் துவங்கினாள் மாதங்கி. இப்பொழுது தைரியமாக கோவிலுக்குள் கால் வைத்தாள். அவள்  கோயிலுக்குள் கால்வைத்தவுடனே, பின் வாயில் தானாக மூடியது.

மாதங்கி இருட்டுக்குள் நின்றாள். தீப ஒளி மட்டும் அவள் முன்னே பிரகாசமாய். அடுத்த நிமிடத்தில்,  அதை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கோயிலின் உள் கற்பகிரகத்துக்குள் இருந்த காளியின் உருவம் கையில் வாள் ஏந்தி,கழுத்தில் கபால மாலையோடு ஒளி பொருந்தும் கண்களோடு உயிரோடு இருப்பது போல்  நின்றிருந்தது. ஆனால் அந்தப் பார்வையில் கோபம் இல்லை. அன்பு மட்டுமே நிறைந்து வழிந்தது. மாதங்கி மௌனமாகக் கண்ணீருடன் தரையில் விழுந்தாள். தன்னையறியாமல், அவளது வாய் மந்திரங்களை  சொல்லத் தொடங்கியது.

ஓம் ஸ்ரீம்  ஹ்ரீம் க்ரீம் காளி காயை நமஹ.
ஓம் காளி காயை வித் மஹே 
சம்சான வாசின்யை தீமஹி
தன்னோ கோர பிரசோத்யாத்
ஓம் காளி நம
ஓம் கபாலினே நமஹ
ஓம் காந்தாய நம 

தவத்தில் ஆழ்ந்தபடி இருந்த மாதங்கியின் நாவிலிருந்து அழகான மந்திர உச்சாடனங்கள்.

அதே சமயம் ஆதிவாசிகள் மந்திரவாதியைப் போன்ற ஒருவனைப் பிடித்து இழுத்து வந்து காளிதேவியின் சிலையின் முன்னால் தள்ளினார்கள். கதறிக்கொண்டு விழுந்த அவன் "ஐயோ என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள், தாயே என்னை மன்னித்துவிடம்மா" என்று கைகூப்பினான். இத்தனை நாளும் கோவிலைத் தேடி  வருபவர்களை அவன்தான் நரபலி கொடுத்திருக்கிறான் என்பதை ஆதிவாசிகள் கண்டுபிடித்து இருந்தனர். 

ஆதிவாசிகளின் கோபகே குரல்கள் அடங்கவும், காணாமல் போனவளைத் தேடி எல்லா இடங்களிலும் அலைந்த குழுமம் காளி கோவிலை வந்தடையவும்  சரியாக இருந்தது. அனைவரும் கோயிலுக்குள் முகம் நிறைய தேஜஸுடன், தாண்டவம் தணிந்த சக்தியாய் நின்றிருந்த மாதங்கியைக் கண்டு அவர்களையும் அறியாமல் இருகரம் கூப்பினர். காளிதேவியின் கண்கள் மெதுவாகக் மூடியது.  

(ஈரோடு வாசல் - படைப்புக் குழுமத்தின் பயிற்சிகளில் ஒன்றான தொடர்சங்கிலி -சிறுகதை எழுதுதல் முறையில் ஷண்முக வடிவு, கௌசல்யா ஞானேஸ்வரன், ராதா மனோகரன் ஆகியோர் மூவரும் சேர்ந்து எழுதிய சிறுகதை)

No comments:

Post a Comment