மகத நாட்டை கி மு 4 ஆம் நூற்றாண்டில், நந்தர்கள் என்னும் சத்திரிய வம்சத்தைச் சாராத சாதியினர் சிசுநாகர்களிடமிருந்து கைப்பற்றி ஆட்சி செய்து வந்தனர்.
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
தங்கலர் வாழி, தோழி!
-மாமூலனார்-அக 251
2. "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்"
அக-265
போன்ற அகநானூற்று வரிகள் நந்தர்கள் குறித்துப் பேசுகின்றன.
நந்த வம்சத்தின் கடைசி அரசன் தனநந்தனை, அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் எனும் பிராமணரின் துணையோடு, (இவரை சமண ப்ராமணர் என்று சமண நூல்கள் குறிப்பிடுகின்றன.) அழித்து, மகதத்தைத் தலைநகராகக் கொண்டு, மௌரிய அரசை உருவாக்கி, கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 320 ஆண்டுகள் முன்பு மாமன்னராக முடிசூடிக் கொண்டார் சந்திரகுப்த மெளரியர்.
கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆட்சிகாலத்தைப் பேசுகின்ற அகநானூற்றுப் பாடல் எண் 69
”விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்”
மற்றும்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
-அகப்பாடல்-281ம்
ஆகியவையும் மோரியர் ஆட்சிகுறித்துப் பேசுகின்றன. (சங்க காலச் செய்யுள்களில் நந்தர்கள் குறித்தும் மவுரியர்கள் குறித்தும் பேசப்பட்டிருப்பது அவர்கள் வாழ்ந்த காலக் கணக்கீட்டை உறுதி செய்து கொள்ள உதவுகின்றன. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் போன்ற ஒழுக்க வியல் கருத்தியல்கள், கோட்பாடுகள் எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்று ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. )
இன்றைய பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில், ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது தட்சசீலம். அலெக்ஸாண்டர் தனது இந்தியப் படையெடுப்பின்போது, கி மு 326-ல் இந்நகரைக் கைப்பற்றினார். போரஸ் என்ற புருஷோத்தமரோடு போரிட்டு அவரை வென்ற அலெக்ஸாண்டர், வந்துகொண்டிருக்கிறார் எனும் தகவல் வந்து சேர்ந்ததும், பரிசுப்பொருள்களுடன் கிளம்பி எல்லைக்கே சென்று அவரின் நட்பைப் பெற்றுக்கொண்டார் அரசர் அம்பி.
அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது வட-மேற்கு இந்தியாவில் இருந்த பல பகுதிகள் அவர் வசம் போனது. கி.மு. 323 ஆம் ஆண்டு அலெக்சாந்தரின் மரணத்திற்கு பிறகு, அந்த பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டனர். இந்தியாவில் இருந்த கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்கோடர் ஆண்டு கொண்டிருந்தார். கிரேக்க-ரோமானிய நூல்கள் சந்திரகுப்தர் கிரேக்க-இந்திய ஆளுநர்களைத் தாக்கினார் என்றும், செலுக்கஸ் நிக்கோடருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றன. செலுக்கஸ் நிக்கோடரின் உறவுப்பெண் ஒருவரை, தன்னுடைய முதிர்ந்த வயதில் திருமணம் செய்து கொண்டார் சந்திரகுப்தர் என்ற சில நூல்கள் குறிப்பிடுகின்றன.
சந்திரகுப்தர், வாழ்க்கை குறித்த உறுதியான செய்திகள், பெரிதாய் நமக்குக் கிடைக்க வில்லை. கிடைத்த கொஞ்சமும் சமண நூல்களில் இருந்தும் சமணக் கல்வெட்டுகளில் இருந்தும் கிடைத்தவையே. சந்திர குப்தர், தன் இறுதி நாட்களில் சமண மதத்தைத் தழுவி, , துறவியாக வாழ்ந்து, இன்றைய கருநாடக மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவிற்கு அருகில் உள்ள சந்திரகிரியில் பத்திரபாகு முனிவர் உட்பட பலருடன் சல்லேகனை விரதமிருந்து, மோட்ச நிலையை அடைந்தார் என்கின்றன சந்திரகிரி கல்வெட்டுகள்.
மௌரிய அரசின் இரண்டாவது மன்னனான பிந்துசாரன். சந்திர குப்த மவுரியரின் மகன். இவர்காலத்தில் பெரிதாக போர்கள் இல்லை என்றாலும் கூட இவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல கிரேக்க நூல்கள் உறுதுணையாக இருக்கின்றன. பிந்துசாரன் யவனர்கள் என்று அழைக்கப்பட்ட கிரேக்கர்களோடு உறவினில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. கிரேக்க வரலாறுகளில் இவர் பெயர்கள் காணப்படுகின்றன.,
சந்திரகுப்தரின் ஆட்சியின் தொடக்கம் அல்லது இறுதி ஆண்டு தெளிவாக இடம்பெறவில்லை. வரலாற்றாசிரியர்கள் சந்திரகுப்தரின் ஆட்சி கி.மு. 324 தொடங்கி கி.மு. 293 க்கு இடையில் முடிவுற்றதாகவும் கூறுகிறார்கள். புத்த நூல்கள் புத்தரின், பரிநிர்வாணத்தை கி மு 486 என்று குறிப்பிடுகிறது. இதைக் கொண்டு, மவுரிய மன்னர்களின் காலகட்டத்தைக் கணக்கிட்டுப் பார்க்கிறார் ஆய்வாளர் ரொமிலா தாப்பர். கி மு 486-ல் புத்தர் மரணமடைந்திருந்தால், சந்திரகுப்தர் 324-ல் பதவியேற்றிருப்பார், பிந்துசாரர் 272-ல் ஆட்சிக்கு வந்திருப்பார். அவர் 28 ஆண்டுகள் ஆண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்பின், அசோகர் முடிசூடிக்கொள்ள நான்காண்டுகள் ஆயின. அதையும் சேர்த்தால் 269 அல்லது 268-ம் ஆண்டு அவர் முடிசூடியிருக்கலாம்.
ப்யதஸி:
அசோகர் என்றொரு மன்னர் இந்தியாவை ஆண்டார் என்பதை, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நாம் அறிந்திருக்கவில்லை. வட இந்தியாவின் பல்வேறு பாகங்களில் நிறுத்தப்பட்டிருந்த பெருந்தூண்களை ஏதோ இராட்சர்களின் வேலை என்று அன்றைய மக்கள் நம்பி வந்தனர். அந்த இராட்ச மனிதர்கள் நமக்குப் புரியாத மந்திர மொழிகளில் ஏதோ எழுதி வைத்துள்ளனர் என்றும் பேசி வந்தார்கள்.
தனது 40 ஆண்டுகால ஆட்சியில், ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர்.. தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, காந்தஹார் அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது.
தன் ஆட்சிப் பகுதிகளில் தன் விருப்பத் தேர்வான தம்மம் அல்லது தர்மம் குறித்தும், (இன்றைய நாளில் அறம் என்றும் மொழிபெயர்க்கலாம்) மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் பெரும்பாறைகளிலும், பெருந்தூண்களிலும் வெட்டி வைத்திருக்கிறார். தன் ஆட்சிப் பகுதிகளில் மட்டுமல்லாமல், தம்மம் குறித்த விவரனையை, ஆசியா முழுமைக்கும், இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பாவிற்கும் கூட எடுத்துச் சென்றிருக்கிறார் என்பது தான் வியப்பான செய்தி.
கி பி 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்த சரிதம் காவியத்தில் அஷ்வகோஷ், 80000 கல்வெட்டுகளை அசோகர் வெட்டிவைத்தார் என்று குறிப்பிடுகிறார். இதுவரை அசோகருடைய சாசனங்களில் நமக்கு கிடைத்தது 33 மட்டுமே. அசோகரது கல்வெட்டுகளில் தோராயமாக 4,614 வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன என்கிறார் ஒலிவெல் (ப.63). இந்த வார்த்தைகளைக் கொண்டு மட்டும் அவர் இதைச் சாதிக்கிறார்.
இந்தியாவை ஒரு பெரிய தேசமாக கட்டமைத்த முதல் ஆட்சியாளர் அசோகர். அதே போல், இந்த உலகத்தில், மக்கள் நல அரசை நிறுவிய முதல் அரசரும் அசோகரே என்பார் பேரா. அ.மார்க்ஸ்.
சார்ல்ஸ் எலன் தனது 'Ashoka: The Search for India's Lost Emperor' என்ற நூலில், "இந்தியாவின் ஸ்தாபகத் தந்தை என்று அசோகரை நிச்சயமாக அழைக்கலாம், என்று கூறுகிறார்.
அசோகருக்கும் கிரேக்க மன்னர்களுக்குமான உறவைக் குறிப்பிடும் அசோகர் கல்வெட்டின் காலம் 256 அல்லது 255 ஆக இருக்கலாம். அந்த அடிப்படையில் கி மு 269 அல்லது 268-ம் ஆண்டு அசோகர் முடிசூடிக்கொண்டார் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
அசோகனுடைய காலம் என்பது கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பதற்கு 270 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் பியூனிக் போர் நடந்து கொண்டிருந்தது பெர்சியாவில் மிகப்பெரிய ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. சீனப் பேரரசர் சீனப் பெருஞ்சுவரை கட்டிக்கொண்டு இருந்தார்.
1834 ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நாணய சோதனையாளராக இருந்த ஜேம்ஸ் ப்ரின்ஸெப்பு க்கு கிடைத்த நாணயங்களில் ஒரு பக்கத்தில் கிரேக்க எழுத்துக்களும், மறுபக்கத்தில் அன்றைய இந்தியாவில் இருந்து வந்த வேறு ஒரு வகையான எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இந்த நாணயங்கள் இந்தியாவில் வடமேற்கு பாகத்தில் கிமு 200 வகை கிபி 100 வரை ஆண்டு வந்த எவன அரசர்களால் அடிக்கப்பட்டது. யவன, கிரேக்க மொழியிலும் இந்தியாவினுடைய வேறு ஒரு மொழியிலும் இருந்த இந்த நாணயங்களில் அரசர்களின் பெயர்கள் விருதுகள் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்தன. கிரேக்க மொழி அறிந்திருந்த ப்ரின்ஸெப், அதை வாசித்து அறிந்து கொள்வது எளிதாய் இருந்தது. நாணயங்களின் மறுபக்கத்தில் எழுதியிருந்த எழுத்துக்கள், விவரங்கள், கிரீக்கில் எழுதப்பட்ட விவரங்களாகவே இருக்க வேண்டும் என்று யூகித்தார். அறியப்படாத இரண்டு எழுத்து வருகையில், ஒவ்வொரு எழுத்தையும் மறுபக்கத்தில் உள்ள கிரீக் எழுத்தின் ஒலிக் குறிப்புகளைக் கொண்டு, அந்த எழுத்துக்கள் என்னென்ன ஒலிக் குறிப்புகளை கொடுக்கிறது என்றும் பட்டியலிட்டார். இப்படியாக அசோகரின் கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டன.
அசோகருடைய பாறைக்கல்வெட்டுகளிலும் ஸ்தூபிக்களிலும் எழுதப்பட்ட எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கிய காலத்தில், பலருக்கும் பெரும் குழுப்பங்கள் ஏற்பட்டன. இந்தக் கல்வெட்டுகளை வெட்டியவர் தேவநாம்பிரிய ப்ரியதஸி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. .சில இடங்களில் வெரும் ப்யதஸி அல்லது ப்யதஸி ரஜா இவ்வாறு சொல்கிறார் என்று தொடங்கியது. தேவர்களுக்குப் பிரியமான தேவநாம்ப்ரியன் அல்லது பியதஸி என்ற இருவரும், ஒரே மனிதரா அல்லது இரு வேறு மனிதர்களா என்ற கேள்விக்கான பதில் நீண்ட காலம் கிடைக்காமல் இருந்தது.
அசோகருடைய ஓரிரு கல்வெட்டுகளில், தேவனாம் பிரியன்,- தேவர்களுக்கு பிரியமானவன் என்ற பொருள் வரும்படி விருது பெயராக உபயோகிக்கப்பட்டு இருந்தது வேறு சில இடங்களில் ப்யதஸி என்ற பெயருக்கு தேவனாம்ப்ரியன் என்ற பெயர் விருதாக உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. தேவனாம் பிரியன் யார்? ப்யதஸி யார்? இருவரும் ஒரே மனிதரா இருவேறு மனிதர்களா? என்பது குழப்பமாக இருந்தது
1915 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகில் உள்ள மாஸ்கி என்ற ஊரிலே கிடைத்த கல்வெட்டில் தான் முதன்முதலாக அசோகன் என்ற பெயர் கிடைத்தது. அதுவரை இவரைப் பற்றிய எந்த தகவல்களையும் யாரும் அறிந்திருக்க வில்லை. மாஸ்கி சிறுபாறைக் கல்வெட்டில் மட்டும் தேவநாம் பிய பியதஸி அசோக என்றிருந்ததால் அறிய முடிந்தது.
அசோகர் காலத்தில் இரண்டு விதமான மொழிகள் பயன்படுத்தப்பட்டன ஒன்று வழக்கமான இந்திய மொழிகளைப் போன்று இடது பக்கம் தொடங்கி வலது பக்கம் வரை நீளும் பிராமி லிபி என்று சொல்லப்படுகின்ற ஒரு எழுத்துமுறை மற்றொன்று இந்துஸ்தானி போல வலது புறம் தொடங்கி இடது புறம் வரை செல்லும் கரோஷ்டி லிபி. இந்த இரண்டு எழுத்து முறைகள்தான் தான் இந்தியாவில் உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் தாய் என்று சொல்லுவார்கள்.
பெரும்பாலான அசோக சாசனங்கள் மேலே குறிப்பிட்ட இந்த பிராமி எழுத்திலும் கரோஷ்டி எழுத்திலும் மட்டுமே இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்து முறையில் இருந்த செங்குத்தான கோடுகள் மாறி வட்டங்களும் வளைவுகளும் உருவாக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து தான் தமிழ் தெலுங்கு கிரந்தம் மலையாளம் கன்னடம் போன்ற தென்மொழிகளின் வட்டெழுத்து உருவாகி இருக்கலாம் என்று சொல்லுகிறார். கீழடி, சிவகளை போன்ற இடங்களில் கிடைத்த ஓடுகளில் பொறிக்கப்பட்டுள்ள தமிழி எழுத்துக்கள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்றும் நம் அறிஞர்கள் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
கரோஷ்டி லிபி அல்லது கரோஷ்டி எழுத்துமுறை என்பது அசோகர் காலத்திற்கு பின், சில நூற்றாண்டுகள் வரை பஞ்சாபிலும் வட மேற்கு மாகாணங்களில் சிந்து பிரதேசத்திலும் பரவி இருந்தது. மத்திய ஆசியாவில் கோட்டான் வளமையும் நாகரீகமும் மிகுந்த தேசம். அங்கே கரோஷ்டி லிபி பொதுவாக பயன்படுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது அங்கே பௌத்த மத கிரந்தங்களும் மற்ற கிரந்தங்களும் புதையலா கிடைத்திருக்கின்றன. ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன.
அசோகர் குறித்தான கதைகளை கிபி 5 ஆம் நூற்றாண்டில் மதுராவில் வாழ்ந்த புத்த பிட்சுகள் பலர் சேர்ந்து எழுதிய நூல் ”அசோகவதனம்” பேசுகிறது. இலங்கையின் புத்த நூல்களான மஹாவம்சம், தீப வம்சம் போன்றவையும் பேசுகின்றன. ஆனால் இவை சொல்லும் பெரும்பாண்மையான செய்திகள் புனைவாகளாகவோ புத்த மத பெருமை பேசுபவையாகவோ தோன்றுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அசோகனுடைய இளமைப் பருவங்கள் அவருடைய திருமணம் அவருடைய குழந்தைகள் போன்ற எந்த செய்திகளும் எந்த விதமான கல்வெட்டுகளிலும் நமக்கு கிடைக்கவில்லை.. சமணர்களையும், ஆசிவகர்களை கொலை செய்தார் என்றும் தன்னை உருவக் கேலி செய்தார்கள் என்பதற்காக, அரண்மனை அந்தப்புர மகளீர் அனைவரையும் தீவைத்துக் கொளுத்தினார், நரகத்துக்கு நிகரான ஒரு இடத்தை உருவாக்கி, மக்களை சித்தரவதை செய்து பொழுது போக்கினார் போன்ற கதைகள் சமண பௌத்த நூல்களிலே பதிவாக இருக்கின்றன.
திறமை வாய்ந்த ஆட்சியாளராக இருந்ததாலே தன் சகோதரர்கள் 99பேரை கொன்றுவிட்டு தானே அரசராக பதிவேற்றிக் கொண்டதாக பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. . மத நூல்களில் பெரும்பாலும் இப்படியான செய்திகள் பதிவு செய்யப்பட்டதற்கான காரணம், அந்த மதம் குறித்தான பெருமிதங்களை வெளிக் கொணர உதவியிருக்கலாம். மிக மோசமான குரூரமான ஒரு மனிதர் பௌத்தத்தை பின்பற்றிய பிறகு அல்லது புத்தருடைய போதனைகளை கேட்க தொடங்கிய பின்பு அவர் ஒரு நல்ல மனிதராக மாறிவிட்டார் என்று சொல்வதன் மூலம் அந்த மதத்தை பெறுமைப் படுத்துவதற்காக இது போன்ற செய்திகளை எல்லாம் பரப்பி இருக்கலாம் என்று பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். இவை எல்லாமே அசோகர் மறைந்து, 2 நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவையே.
வழக்கமாக மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நாள் அவர்களுடைய ஆண்டின் துவக்க நாளாக குறிப்பிடுவது வழக்கம் அதேபோல ஒவ்வொரு ஆண்டும் அந்த குறிப்பிட்ட தினத்தை கொண்டாடுவதும் அன்று மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வதும் காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம். அதன்படி அசோகர் இளவரசனாக இருந்து நான்கு வருடம் ஆட்சி செய்த பிறகு தன்னை அரசனாக அறிவித்துக் கொள்கிறார். தன் பிறந்த நாளில் மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கிறார். தண்டனைக் கைதிகளுக்கும், நீண்ட கால சிறைவாசிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை அளிக்கிறார். (இன்றும் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் நீண்ட நாட் கைதிகளுக்கு விடுதலை அளித்துவருவதன் தொடர்ச்சியைக் காணமுடியும்)
அசோகர் உடைய சரித்திரத்திலே கலிங்க யுத்தம் மிக முக்கியமான ஒன்று. அவர் அரசனாக பதவியேற்ற ஒன்பதாவது ஆண்டில் கலிங்கத்தை நோக்கி படையெடுத்துச் செல்கிறார் அந்த காலகட்டத்தில் கலிங்கம் மட்டுமே அவருடைய ஆட்சியின் கீழ் இல்லாமல் இருந்தது.
பாட்ரிக் ஒலிவெல் எழுதிய 'Ashoka: Portrait of a Philosopher King' என்ற நூலில்
"கலிங்கத்தின் அப்போதைய மக்கள் தொகை 9.75 லட்சம் என்று வரலாற்று ஆசிரியர் சுமித் குஹா குறிப்பிடுகிறார். மக்கள் தொகையை 10 லட்சம் என்று வைத்துக்கொண்டாலும், இறந்தவர்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 20%. மேலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால், மொத்த மக்கள் தொகையில் 35% பேர் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டனர். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இதை ‘மாபெரும் அழித்தொழிப்பு’ என்று சொல்வது தவறாக இருக்காது,” என்று இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்.
அந்தப் போர்ச்சூழல் அவரை துயரத்துக்கு உள்ளாக்குகிறது. போர் முடிந்த பின்பு அங்கிருந்த மலைவாழ் மக்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தேவையான பாதுகாப்புகளும் உதவிகளும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிடுகிறார். அதே நேரத்தில் எந்தக் கலிங்க மண்ணில் அவர் நடத்திய போரழிவுகள் அவருக்கு இந்தப் பாடங்களைக் கற்பித்ததோ அந்த மண்ணில் அவரது இந்தக் கருத்துக்களைச் சாசனமாக்கி அம்மக்களிடம் மன்னிப்புக் கோர மனமில்லாத வகையில் அவர் ஒரு மன்னராகவும் இருந்தார் என்கிறார் பேரா. அ. மார்க்ஸ்.
அசோகர் பாடலிபுத்திரத்தில் நரகத்தின் சாயலில் ஒரு சிறைச்சாலை கட்டினார்; அப்பாவிகளை அடைத்துவைத்து வதைத்தார்; தன் 99 சகோதரர்களைக் கொன்றார் என்றெல்லாம் கதை பேசிய பவுத்தப் பதிவுகள், கலிங்கம் பற்றியோ கலிங்கப் போர் குறித்தோ எதுவும் பேசவில்லை. . அசோகரை உருமாற்றிய போர் குறித்து ஒரு சொல்கூட எங்கும் இல்லை என்கிறார் ரொமிலா தாப்பர்.
பவுத்தர்கள் மட்டுமல்ல பிறரும்கூட கலிங்கத்தைக் குறிப்பிடவில்லை. போருக்குப் பிறகும் யாரும் நினைவுகூரவில்லை. நம்மிடம் உள்ள ஒரே தரப்பு, அசோகர் மட்டுமே. ஒரு பெரும் அழிவின் கதையை, அதை இழைத்தவர் மட்டுமே விவரிக்கிறார். அவர் குரலில் மட்டுமே கலிங்கத்தின் கதையை நாம் கேட்கிறோம். இதன் பொருள் அசோகர் சொல்லியிருக்காவிட்டால், அப்படியொரு போர் நடந்ததே நமக்குத் தெரியாமல் போயிருக்கும் என்பதுதான்.
அசோகர் தன் வாழ்நாளில் சந்தித்த முதல் மற்றும் கடைசிப் போர் கலிங்கப் போர்தான் என்பது ஆச்சரியமான தகவல்.
2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னாவை தலைநகராகக் கொண்டு நல்லாட்சி செய்த மாமன்னர் அசோகரைக் கொண்டாட வேண்டுயதும், அவர் வார்த்தைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திலும், இன்று நாம் இருக்கிறோம் என்பதை விளக்கத்தான் இந்தக் கட்டுரைகள்.
No comments:
Post a Comment